காவிரியில் அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் வேண்டாமா? - மத்திய இணை அமைச்சர் கூறுவ...
`தங்க இடமும் உணவும் கிடைக்குது; ஆனா மருந்து மாத்திரைக்கு?'- ஆதரவற்றோர் இல்லத்தில் நடிகர் மோகன் சர்மா
புனேவிலுள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடிப்பு பயின்ற முதல் தென்னிந்தியர் என்ற பெருமைக்குரியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஏகப்பட்ட படங்கள் நடித்ததோடு திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு என சினிமாவின் பல்வேறு தளங்களில் இயங்கியவர். தமிழ்நாடு மற்றும் கேரள அரசின் சினிமா விருதுகளை வாங்கியவர். ஃபிலிம் சேம்பர் எனப்படும் திரைப்பட வர்த்தக சபையின் தலைவராக இருந்தவர். இத்தனை பெருமைக்குரிய மோகன் சர்மா தற்போது தன்னுடைய 80 வது வயதில் சென்னை, கும்மிடிப்பூண்டி பகுதியில் இயங்கி வரும் ஆதரவற்றோருக்கான முதியோர் இல்லத்தில் அடைக்கலமாகி இருக்கிறார்.
என்ன நடந்தது? அவரிடமே பேசினோம்.

''சினிமாவுல பரபரப்பா இயங்கிட்டிருந்த காலத்துல சென்னையில போயஸ் கார்டன் பகுதியில எனக்கு வீடு இருந்தது. நான் தயாரித்து இயக்கிய 'நம்ம கிராமம்' படத்துல நடிச்ச நடிகை சுகுமாரிக்கு தமிழ்நாடு அரசு விருது கிடைச்சப்ப மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவங்களைக் கூப்பிட்டு பாராட்டினாங்க. அந்தப் படத்தை அவங்க பார்க்க விரும்பறதாச் சொல்ல, படத்தைப் போட்டு காமிச்சோம்.
கேரளாவின் பாலக்காடு பகுதிகளில் அந்தக்காலத்துல பிராமண சமுகத்தில் பெண் பிள்ளைகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சாடிய கதை. 'படம் என்னை ரொம்பவே பாதிச்சது'ன்னு சொன்ன அவங்க, படத்தின் சேட்டிலைட் உரிமையை ஜெயா டிவிக்கு வாங்கச் சொல்றேன்'னும் சொன்னாங்க.
ஆனா அது நடக்கறதுக்குள்ள அவங்களும் இறந்துட்டாங்க.
தமிழ்நாடு அரசு விருது மட்டுமல்லாம கேரள அரசின் விருதும் அந்தப் படத்துக்கு கிடைச்சது.
முதல் இன்னிங்ஸ் சினிமான்னா அடுத்து சீரியல் பக்கம் வந்தேன். அங்கயும் நிறைய சீரியல் பண்ணினேன்.
சினிமா, சீரியல் ரெண்டும் என்னை பிசியா வச்சிருந்தாலும் குடும்ப வாழ்க்கை எனக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தரலை.
வெளியில சொல்ல முடியாத துயரத்தையெல்லாம் சந்திச்சேன். ஒரு கட்டத்துல போயஸ் கார்டன் வீட்டை வித்த போதும்... அதுலயும் சில வில்லங்கங்கள் வந்து செய்தி மீடியாவுக்கு வந்ததெல்லாம் உங்களுக்குத் தெரியும்தானே.
நாளாக ஆக உடலும் மனசும் ரொம்பவே சோர்ந்து போயிடுச்சு. கையில காசு இல்லை. நோய் நொடினு வந்தா பக்கத்துல இருந்து பார்க்க ஆள் இல்லை. வாழ்க்கையே வெறுத்துப் போயிடுச்சு.
இந்தச் சூழல்லதான் முன்னாடி ரோட்டரி கிளப்களில் ஆக்டிவா இருந்த போது தொடர்பிலிருந்த சில நல்ல உள்ளங்கள் கும்மிடிப்பூண்டியில் இயங்கி வருகிற இந்த முதியோர் இல்லத்தைக் காட்டி இங்க வந்து சேர்த்து விட்டாங்க.
ஜெயின் சமூகத்தினர் நடத்துகிற இந்த இல்லத்தில் இப்போதைக்கு தங்க இடமும் சாப்பாடும் இலவசமா தந்திடுறாங்க. ஆனாக்கூட வயோதிக பிரச்னைகளால் எடுக்கிற மருந்து மாத்திரைகள் வாங்க என்கிட்ட பணம் இல்லை.

நான் இங்க இப்படி இருக்கேன்னு ரஜினி சாருக்குச் சொல்லியிருக்காங்க. சில தினங்களுக்கு முன் அவர்கிட்ட இருந்து ஒரு லட்ச ரூபாய் பணம் வந்தது. அதை வச்சு சமாளிச்சிட்டிருக்கேன்.
ஃபிலிம் சேம்பர்ல நான் பொறுப்புல இருந்தபோது வயதான காலத்துல இந்த மாதிரி யாராவது நோய் நொடின்னு கஷ்டப்பட்டா அஞ்சு லட்ச ரூபாய் வழங்கலாம்னு ஒரு தீர்மானம் போட்டிருந்தேன்.
அதைச் சுட்டிக்காட்டி சேம்பருக்கு கடிதம் எழுதி உதவக் கேட்டேன். ஆனா அந்த தீர்மானம் திருத்தப்பட்டு விட்டதா தகவல் வந்திருக்கு.
அதாவது இறந்தா அதன் பிறகு அந்தப் பணத்தை வழங்குவாங்களாம்.
'ஏன்ப்பா ஆதரவில்லாம கஷ்டப்படுகிறவனுக்கு அந்தச் சமயத்துல உதவாம, அவன் இறந்த பிறகு யார்கிட்ட போய் அந்தப் பணத்தைக் கொடுப்பீங்க'னு கேட்டா பதில் இல்லை.
என் வயோதிக நாள்கள் இன்னும் என்ன வேதனையையெல்லாம் தரப்போகுதோனு நினைச்சாலே பயமா இருக்கு'' என நா தழுதழுக்க முடித்த மோகன் சர்மா,

``விருது வாங்கிய என்னுடைய 'நம்ம கிராமம்' படத்தின் சேட்டிலைட் உரிமையை யாராவது வாங்கினா மிச்சமிருக்கிற காலத்துக்கு எனக்கு மருந்து மாத்திரை வாங்க அது உதவும். சினிமா உலகத்துல யாராவது இந்த விஷயத்துல எனக்கு உதவினா அவங்களை மறக்கவே மாட்டேன்'' என்றபடி கண் கலங்குகிறார்.















