அறநிலையத்துறை அமைச்சர் மீதான விமர்சனங்கள்; `சாதி பார்த்து யாரையும் முன்நிறுத்தவி...
தஞ்சாவூர்: ஸ்டாலின் தலைமையில் மாநாடு நடத்தியவர் `டு' தவெக அரசில் அமைச்சர் - யார் இந்த ஏ.எம்.ஷாஜஹான்!
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஏ.எம்.ஷாஜஹான். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், தவெக அரசில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பதவிவேற்றுள்ளார். தவெக அரசுக்கு ஐயூஎம்எல் ஆதரவளித்து, அதைத் தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர் அமைச்சரவையில் ஐயூஎம்எல் இடம்பெற்று ஷாஜஹான் அமைச்சராகியிருக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின் ஷாஜஹானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
தேர்தலுக்கு முன்பு ஸ்டாலின் தலைமையில் மாநாடு நடத்தியவர், தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தவெக அரசில் அமைச்சராகியிருப்பது அரசியல் வட்டத்தில் பேசு பொருளாகியிருக்கிறது. இதுகுறித்து உள்விபரங்கள் அறிந்த பலரிடம் பேசினோம். ``கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தொகுதிக்கு உட்பட்ட ஆடுதுறையைச் சேர்ந்தவர் ஏ.எம்.ஷாஜஹான். இவருடைய தந்தை முகமது யாசின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். ஷாஜஹான் மனைவி ஷமிம் நிஷா, ஆடுதுறை பேரூராட்சி 10வது வார்டு உறுப்பினர்.
ஷாஜஹான் பி.எஸ்.சி மற்றும் கணினி அறிவியலில் பட்டயப் படிப்பை முடித்துள்ளார். சிறு வயதிலிருந்தே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் ஆக்கப்பூர்வமாக பணியாற்றி வருகிறார். ஆடுதுறை, திருமங்கலக்குடியில் அஸ்-ஸலாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவன செயலாளராகவும் இருக்கிறார். தமிழ் மட்டுமன்றி ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் பேசக்கூடிய ஆற்றல் பெற்றவர். 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றே ஆக வேண்டும் என ஐயூஎம்எல் கட்சியினர் தீவிரமாக களப்பணியாற்றினர். தொடக்கத்திலேயே இஸ்லாமியர்கள் நிறைந்துள்ள பாபநாசம் தொகுதியை குறி வைத்து செயல்பட்டனர். இதில் ஏ.எம்.ஷாஜஹானை நிறுத்துவதற்கும் முடிவு செய்தனர். இதற்காக தேர்தலுக்கு முன்பு கடந்த ஜனவரி மாதம் கும்பகோணத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு நடத்தினர். இதனை ஷாஜஹான் முன்னெடுத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக அப்போதைய முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியது கவனம் பெற்றது.
பாபநாசம் தொகுதியை கைப்பற்றத்தான் கும்பகோணத்தில் இந்த மாநாட்டை நடத்தியதாக சொல்லப்பட்டது. அதே போல் திமுக கூட்டணியில் பாபநாசம் தொகுதி ஒதுக்கப்பட்டு ஏ.எம்.ஷாஜஹான் வேட்பாளர் ஆனார். தொடர்ந்து கூட்டணி கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படுவதாக திமுக-வுக்குள் சலசலப்பு கிளம்பியதைத் தொடர்ந்து திமுக தலைமை, கட்சி நிர்வாகிகளை சமாதானம் செய்தது. இதையடுத்து, ஏணியில் நிற்காமல் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் அப்போது தான் ஷாஜஹான் எளிதாக வெற்றி பெறலாம் எனவும் லோக்கல் திமுக நிர்வாகிகள் போர்கொடி தூக்க பஞ்சாயத்து ஸ்டாலின் வரை சென்றது.
அப்போது சில நிர்வாகிகளிடம் ஸ்டாலினே நேரடியாக, தேசிய கட்சியான அவர்களை நம் சின்னத்தில் போட்டியிட கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் நம் கட்சி நிர்வாகிகள் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் பேசி பிரச்னைக்கு எண்ட் கார்டு போட்டார். தொகுதி சாதகமாக இல்லை என ரிப்போர்ட் சென்ற நிலையில் ஒரு குழுவை இறக்கி விட்டு வெற்றிக்கான வேலையை செய்ய வைத்தார். நுணுக்கமான சில தேர்தல் பணிகளால் ஏ.எம். ஷாஜஹான் வெற்றி பெற்றார். தற்போது அவர் அமைச்சராகவும் ஆகிவிட்டார். இவரது வெற்றிக்கான காரணி திமுக என்றால் மிகையாகது. அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஷாஜஹான் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், சிறப்பான மக்கள் பணியை மேற்கொண்டு தொகுதியை வளர்ச்சியடையச் செய்வார் என்கிற நம்பிக்கை இருக்கிறது" என்றனர்.














