ஆற்காடு: "அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்திக் கொடுங்க" - தவெக அமைச்சர்களைச் சந்...
``அதிமுக எங்களின் உயிர் மூச்சு; அண்ணன் எடப்பாடியார்தான் பொதுச்செயலாளர்" - எஸ்.பி.வேலுமணி பேச்சு
இரண்டாக பிளவுபட்டுள்ள அதிமுக-வில் எஸ்.பி.வேலுமணி அணியில் சிலருக்கு தமிழக வெற்றிக் கழகம் அமைச்சர் பதவியை வழங்கும் என்கிற பேச்சுகள் தொடர்ந்து அடிபட்டு வந்தன.
அந்தப் பேச்சுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
"இன்று நாங்கள் பத்திரிகையாளர் சந்திப்பு தேவையில்லை என்றுதான் நினைத்தோம். இருந்தாலும்கூட, ஒரு சில பத்திரிகைகள் தொடர்ந்து நாங்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்கப் போவதாகப் பேசி வருவதாகவும், அதில் ஏமாற்றம் அடைந்ததாகவும் தொடர்ந்து எழுதி வருகிறார்கள்.

நானோ அல்லது எங்களது அமைப்புச் செயலாளர் சி.வி. சண்முகம் அவர்களோ ஒரு போதும் நாங்கள் அமைச்சர்களாக உள்ளே போவதாகச் சொல்லவில்லை.
இது குறித்து தமிழக வெற்றிக் கழகத் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எங்களைப் பொறுத்தவரை, தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். திமுக எதிர்ப்பு என்ற அடிப்படையில் தான் மக்களும் அவர்களுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். நாங்களும் அதே திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டில் தான் இருக்கிறோம்.
அண்ணா திமுக இப்போது தோல்வியைச் சந்தித்திருக்கிறது என்பதை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். அதை எப்படிச் சரிசெய்ய வேண்டும் என்பதற்குத்தான் நாங்க பொதுக்குழு உறுப்பினர்களுடன் பேசி ஒரு கூட்டத்தைக் கூட்டும் கோரிக்கையை வைக்கிறோம். இது அண்ணா திமுகவில் பிளவு கிடையாது, எங்களுக்குள் இருக்கும் ஒரு கருத்து வேறுபாடு தான்.
இப்போதும் சொல்கிறேன், அண்ணன் எடப்பாடியார்தான் பொதுச்செயலாளர். அவரிடம் தான் தோல்வி குறித்த ஆய்வறிக்கையை வழங்குவோம்.
ஆனால் ஒரு பெரிய டீம் வொர்க் செய்து, நாங்கள் பதவிக்காக ஆசைப்படுவதாகத் தவறான எண்ணத்தை மக்களிடம் பரப்பி வருகிறார்கள். இது முற்றிலும் தவறானது.

நாங்கள் சட்டமன்றத்தில் ஆதரவு கொடுக்கும் போதே தெளிவாகச் சொல்லியிருக்கிறோம், பதவிக்காக ஆசைப்பட்டு நாங்கள் எதற்கும் வரவில்லை.
திமுக எதிர்ப்புதான் எங்களது முக்கிய நோக்கம். நாங்கள் முதலமைச்சரைச் சந்தித்தபோது ஒரு புக்லெட் தயார் செய்து சில கோரிக்கைகளை வைத்தோம். அதில்:
> அம்மா உணவகம், தாலிக்குத் தங்கம், அம்மா மினி கிளினிக், அம்மா குடிநீர் போன்ற திட்டங்கள் தொடர வேண்டும்.
> கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 7.5% இட ஒதுக்கீட்டை 10% ஆக உயர்த்த வேண்டும்.
> 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை 150 நாள்களாக உயர்த்த வேண்டும்.
> நிறுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தையும் மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் எல்லாம் ஒரு தலைமுறை தாண்டி இந்தத் தியாகம் செய்த கட்சியில் இருக்கிறோம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கும் போதிலிருந்தே எங்களுடைய தந்தையார் காலத்திலிருந்தே இந்தக் கட்சிக்காக உழைத்து வருகிறோம். அண்ணா திமுக எங்களின் உயிர் மூச்சு.
கட்சியை உடைக்கவோ பிரிக்கவோ எங்களுக்கு எண்ணம் கிடையாது. தோல்வியை ஆராய்ந்து மீண்டும் தமிழகத்தில் அம்மா உடைய ஆட்சி அமைய நாங்கள் பாடுபடுவோம்" என்றார்.














