``எடப்பாடியாருக்கு பின்புலமாக இருந்தவர்களே இன்றைக்கு எதிர்க்கிறார்கள்!"- சொல்கிற...
தனுஷ்: `அனைவருக்கும் உரிமை இருக்கிறது; இன்று எங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்..!'- அமைச்சர் கருத்து
கோவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் 90 சதவிகிதம் முடிவடைந்துவிட்டது. இன்னும் 10 சதவிகித நிலம் மட்டுமே கையகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. நீதிமன்ற வழக்குகள் அனைத்தையும் முடித்துள்ளோம். கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவல்துறை இரும்புக்கரம் கொண்டு செயல்பட்டு வருகிறது. இளைஞர்கள், மாணவர்கள் இல்லாத வீடு இல்லை. பெற்றோர்களும் குழந்தைகளை பொறுப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க கடுமையான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
வார வாரம் கோவைக்கு வரும் பொழுது எல்லாம் அதிகாரிகள் அனைவரிடமும் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து ஆலோசித்து வருகிறோம். காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முறையான விசாரணை நடைபெறும். எந்த தொய்வும் கிடையாது. முறையான விசாரணைக்கு பிறகு வெளிப்படையாக பேச முடியும். காவல்துறை தனது கடமையை பொறுப்பாக செய்து கொண்டு இருக்கிறது. கோவை மாணவர் கொலை வழக்கு குறித்து திங்கட்கிழமை சட்டமன்றத்தில் பதில் அளிக்கப்படும்.

கோவை மெட்ரோ திட்டம் கடந்த முறை கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் முறையாக ஆராய்ந்து, புதிய திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். கோவைக்கு மெட்ரோ அவசியம் என்பதை உணர்ந்து அதற்கேற்ற வகையில் செயல்பட்டு வருகிறோம். கோவை கிரிக்கெட் மைதானம் குறித்து விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அந்த இடம் சரியாக வரவில்லை எனில் வேறு பகுதிக்கு கொண்டு செல்வோம்” என்றார்.
கோவை மாவட்டத்தில் ரசிகர் மன்றத்தை நடிகர் தனுஷ் பலப்படுத்துவது குறித்த கேள்விக்கு, “இது ஜனநாயக நாடு. கட்சி ஆரம்பிக்கவும், மக்களை சந்தித்து ஆட்சி அமைக்க கேட்கக்கூடிய உரிமையும் அனைவருக்கும் இருக்கிறது. அவர்கள் அவரது பணியை செய்கிறார்கள். யார் தங்களை ஆட்சி செய்ய வேண்டும் என மாண்புமிகு மக்கள்தான் முடிவு செய்வார்கள். இன்று மக்கள் எங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் சிறப்பான ஆட்சி நடந்து கொண்டுக்கிறது” என பதிலளித்தார்.
















