ஸ்டைலான டிசைன்; ஸ்மார்ட்டான கேமரா... அசத்தலான AI அம்சங்கள் - அறிமுகமான vivo S2!
சந்திரசேகரன் வெளியேறுகிறார்! டாடா பங்குகள் இனி எப்படி இருக்கும்? நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
"2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தோடு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்னுடைய பதவிக்காலம் முடிவடைகிறது. இனி நான் டாடா சன்ஸ் தலைவர் பதவிக்காக போட்டியிடப் போவதில்லை".
இது டாடா சன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் என்.சந்திரசேகரனின் நேற்றைய (ஆகஸ்ட் 12) அறிக்கையில் இருந்த வரிகள்.
இந்த அறிவிப்பு வெளியானப் பிறகு, டாடா குழுமத்தின் பங்குகள் கொஞ்சம் சரிவைக் கண்டன. அடுத்து இந்தப் பங்குகளின் போக்கு எப்படி இருக்கும் என்று பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் கூறுவதாவது...

"சந்தைக்கு எதிர்பாராமல் ஒரு அறிவிப்பு வரும்போது, அது உடனடி அதிர்ச்சியோடு (knee-jerk reaction) சட்டென்று எதிர்வினையாற்றும். ஆனால், அதே விஷயம் முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தால், சந்தையின் எதிர்வினை ஓரளவு மிதமாகவே இருக்கும்.
டாடா குழுமம் மட்டுமல்ல, எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும் சரி, நீண்ட காலமாகத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒரு தலைவர் திடீரென விலகுகிறார் என்ற செய்தி வரும்போது, சந்தை இப்படி எதிர்வினையாற்றுவது இயல்பானதுதான். அதில் பெரிய ஆச்சரியம் எதுவுமில்லை.
மாற்றங்கள் வந்துகொண்டேதான் இருக்கும்!
தலைமைப் மாற்றம் என்பது தொடர்ந்து நடக்கும் ஒரு இயல்பான செயல்முறை. ஒரே நபர் எப்போதும் நிரந்தரமாகப் பொறுப்பில் இருக்க முடியாது. மாற்றங்கள் வந்துகொண்டேதான் இருக்கும். டாடா குழுமம் என்பது தொழில்முறையாக நிர்வகிக்கப்படும் ஒரு நிறுவனம். அதனால், போர்டு உறுப்பினர்கள் நிச்சயமாக ஒரு புதிய தலைவரைக் கண்டறிவார்கள்.
டாடா குழுமத்திலேயே இதற்கான திறமையான நபர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். உதாரணமாக, தற்போதைய தலைவர் சந்திரசேகரன் கூட முன்பு டி.சி.எஸ் நிறுவனத்தில் இருந்துதான் இந்த உயர் பொறுப்பிற்கு வந்தவர்.

அதேபோல, இப்போது டாடா ஸ்டீல், டிசிஎஸ் அல்லது டாடா பவர் போன்ற குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் போர்டு உறுப்பினர்களில் இருந்தே யாராவது ஒருவர் புதிய தலைவராக வரக்கூடும்.
டாடா குழுமத்தின் சி.இ.ஓ/தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்குத் தெளிவான விதிகளும் வழிகாட்டுதல்களும் உள்ளன. அந்தச் செயல்முறைகளின்படி வரும் பிப்ரவரி மாதத்திற்குள் அடுத்த தலைவர் யார் என்பது முறைப்படி அறிவிக்கப்பட்டுவிடும்.
சுமார் 25 ஆண்டுகள் டாடா குழுமத்தோடு பயணித்த ஒருவர் விலகும்போது, 'அடுத்து வருபவர் இவரை விடச் சிறப்பாகச் செயல்படுவாரா?' என்ற கேள்வி முதலீட்டாளர்களுக்கு எழுவது இயற்கைதான்.
எதிர்காலம்..?
ஆனால், அதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். டாடா குழுமம் போன்ற தொழில்முறை நிறுவனங்களில், இந்த உடனடிப் பாதிப்பு அல்லது பதற்றம் அதிகபட்சமாக ஒரு வாரத்திற்கு மட்டுமே நீடிக்கும்.
அடுத்த கட்ட எதிர்வினை எப்போது வரும் என்றால், பங்குச்சந்தைக்குப் புதிய தலைவர் யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்போதுதான்.
அவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவரா, டாடா சன்ஸ் அமைப்பிலேயே 25 ஆண்டுகள் இருந்தவரா, அல்லது டாடா ஸ்டீலில் இருந்து வருகிறாரா என்பதைப் பொறுத்தே சந்தையில் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும்.

முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, இது கடந்துபோகும் ஒரு காலகட்டம் மட்டுமே. சந்திரசேகரன் காலகட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. அவர் தனது பதவிக்காலத்தில் சந்தை மதிப்பை 3 மடங்கு உயர்த்தியுள்ளார்.
அதேநேரம், சில நஷ்டத்தில் இயங்கும் வணிகங்களிலும் முதலீடு செய்துள்ளார் (உதாரணத்திற்கு Blinkit போன்ற முதலீடுகள் உடனடி லாபத்தைத் தராமல் போகலாம்). இவையெல்லாம் வியாபாரத்தில் நடக்கும் சாதாரண விஷயங்கள்தான்.
இப்போது நாம் பேசும் இந்த நேரத்தில், பங்குச்சந்தையில் டாடா நிறுவனப் பங்குகள் பெரிய அளவிலான சரிவையோ வீழ்ச்சியையோ சந்திக்கவில்லை.
டாடா குழுமத்தின் இயக்கம் எந்தப் பாதிப்பும் இன்றித் தொடர்ந்து நடைபெறும். ஏனெனில், இது தனி ஒரு நபரை மட்டும் நம்பி இருக்கும் அமைப்பு அல்ல. மிகவும் வலுவான தொழில்முறை அமைப்பாகும்.
நிறுவனங்களின் அடிப்படைப் பலமும், நிதி முடிவுகளும் சிறப்பாக இருக்கும் வரை முதலீட்டாளர்கள் எந்தவித கவலையும் கொள்ளத் தேவையில்லை".



















