வீடு தேடி வந்து மிரட்டிய ரௌடி; கண்ணில் மிளகாய் பொடி தூவி தோழிகளுடன் கொலைசெய்த பெ...
தூத்துக்குடி: நேபாள வெள்ளத்திற்குக் காரணம் என்ன? - விளக்கும் நிலத்தியல்துறை பேராசிரியர்!
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த வெள்ளத்திற்கு காரணம் என்ன? என, தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் நிலத்தியல் துறை பேராசிரியர் முனைவர். செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், “நேபாளம் – சீனா (திபெத்) எல்லைப் பகுதியில் கடந்த 27-ம் தேதி திடீர் பனிப்பொழிவு மற்றும் வெள்ளப்பேரழிவு உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. செயற்கைகோள் படங்கள், ஆய்வுகளின் அடிப்படையில் இந்தப் பேரழிவிற்கு பனிப்பாறைகளின் உடைப்புதான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயரமான இமயமலைப் பகுதிகளில் காலநிலை மாற்றத்தின் தாக்கம், குறிப்பாக எல்நினோ போன்ற கடுமையான காலநிலை மாற்றத்தினால் வெப்ப நிலை அதிகரித்துள்ளது. இதனால், பனிப்பாறைகள் வேகமாக உருகி, பனிக்கட்டிகளுக்கு இடையே நீர் தேங்கும் அளவு அதிகரித்துள்ளது. இந்த நீர், மிகுந்த அழுத்தத்தை உருவாக்கி பனிப்பாறைகளின் உள்ளாக நிலைத்தன்மையை குறைத்துள்ளது.
இந்த அதிக அழுத்தத்தின் காரணமாக பெரிய கொள்ளளவு கொண்ட பனிப்பாறைகள் திடீரென உடைந்து கீழ் நோக்கி சரிந்து விழுந்துள்ளன. இந்த பனிப்பாறையுடன் சேர்த்து பெருமளவில் நீர், மண் மற்றும் பாறைகள் கலந்த வெள்ளப்பெருக்கு உருவாகி மிகுந்த சக்தியுடன் பள்ளத்தாக்குக்குள் பாய்ந்தது. இந்த வெள்ளப்பெருக்கு வேகமாக நகர்ந்து ஆறுகளில் திடீர் நீர்மட்ட உயர்வினை ஏற்படுத்தியது. சில பகுதிகளில் 30 நிமிடங்களிலேயே சுமார் 9 மீட்டர் வரை நீர்மட்டம் உயர்ந்தது. செயற்கைகோள் படங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் பனிப்பாறையின் கீழ்ப்பகுதி உடைந்தும் சரிந்தும் இருப்பது தெளிவாக பதிவாகியுள்ளது.

இது, பனிப்பாறையின் நிலைத்தன்மை குறைபாடு மற்றும் உள்ளக நீர் அழுத்தத்தின் தாக்கத்தினை வெளிப்படுத்துகிறது. வெள்ளப்பெருக்கு கீழ் நோக்கி பாய்ந்ததால், ஆற்றின் இயல்பான பாதை பல இடங்களில் மாற்றமடைந்துள்ளது. இதன் விளைவாக புதிய சேற்றுப்பாதைகள் உருவாகி ஆற்றுப்பாதையின் இயற்கை வடிவமைப்பினை மாற்றி அமைத்துள்ளன.
இதுபோன்ற பனிச்சரிவு மற்றும் வெள்ள பேரழிவு அபாயத்தைக் குறைக்க பல நிலைகளில் ஒருங்கிணைந்த முன்னெச்சரிக்கை அமைப்புகள் உருவாக்கப்படுவது அவசியம். இதற்காக பனிக்குளங்களில் நீர்மட்ட மாற்றங்களை தொடர்ந்து கண்காணிக்க சென்சார் கருவிகள் பொருத்தப்பட வேண்டும். இந்த தரவுகளின் அடிப்படையில் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க முடியும்.

இதுபோன்ற பேரழிவுகள் காலநிலை மாற்றத்துடன் நேரடியாக தொடர்புடையவை. எதிர்காலத்தில் இதுபோன்ற பேரழிவு நிகழ்வுகள் நிகழவும் வாய்ப்புள்ளது. செயற்கைகோள் கண்காணிப்பு, நிலையான முன்னெச்சரிக்கை அமைப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடிப்படையிலான முன்னறிவிப்பு மாதிரிகள் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே இத்தகைய பேரழிவுகளின் தாக்கத்தை குறைக்க முடியும்” எனக் கூறியுள்ளார்.



















