`என் இதயம் நிறைந்திருக்கிறது!' - கர்ப்ப கால நினைவுகளைப் பகிர்ந்த ராம் சரணின் மனை...
நாகப்பட்டினம்: `ஸ்டாலின் பாராட்டிய ஒருவர் vs உதயநிதி பாராட்டிய ஒருவர்' - திமுகவில் சீட் யாருக்கு?
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி விட்டது. திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் சீட் வாங்குவதற்கு கடும் போட்டி நிலவுகிறது. வேட்பாளர் ரேஸில் இருப்பவர்கள் இதற்கான முனைப்புகளில் தீவிரம் காட்டி வருவதால் இப்போதே தேர்தல் சூடு தொடங்கி விட்டது.
நாகப்பட்டினம் தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தங்க.கதிரவன் 7,200 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். வரும் தேர்தலிலும் அதிமுகவில் தங்க.கதிரவன் தான் வேட்பாளர் என்பது உறுதியாகி விட்டதாக சொல்கிறார்கள் அதிமுக தரப்பில்.

தொகுதிக்குள் பம்பரமாக சுழல ஆரம்பித்திருக்கும் அவர், வீடுதோறும் விலைவாசி உயர்வு குறித்த நோட்டீஸ் வழங்கி வருகிறார். தொகுதியில் பிரச்னை என்றால் முதல் ஆளாக வந்து நிற்கிறார். ஒரு பூத்துக்கு இரண்டு பேர் வீதம் ஐடி விங் ஆட்களை நியமித்து பிரச்சார பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
நாம் தமிழர் கட்சியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பாத்திமா பர்ஹானா-வும் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகிறார். திமுக கூட்டணியில் தற்போதைய விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸ் இம்முறை தொகுதி மாற இருப்பதாக சொல்கிறார்கள். எனவே நாகப்பட்டினத்தில் திமுக நேரடியாக களமிறங்க முடிவு செய்துள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.
நாகப்பட்டினம்
திமுக-வை பொறுத்தவரை மாவட்ட செயலாளர் கெளதமன், கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் எடிசன் என்கிற தாமஸ் ஆல்வா எடிசன் இருவரில் ஒருவர் தான் வேட்பாளர் என்கிறார்கள். சீட்டுக்கான ரேஸில் இருவரும் போட்டி போட்டு கொண்டு கடுமையாக மெனக்கெடுவதால் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்து திமுகவினர் மட்டுமின்றி தொகுதிக்குள் பரவலாக பேசி வருகின்றனர்.
இது குறித்து விபரம் அறிந்த திமுக வட்டார தரப்பில் பேசினோம், `2021 தேர்தல் வேட்பாளர் லிஸ்டில் நாகை தொகுதிக்கு மாவட்ட செயலாளர் கெளதமன் பெயர் இடம் பெற்றிருந்தது.

திமுக தலைமையும் அவருக்கு சமிஞ்கை காட்ட சத்தமில்லாமல் தேர்தல் பணிகளை செய்தார். கடைசி நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திமுக கூட்டணி கட்சியான விசிக-வுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆளூர் ஷா நவாஸ் வேட்பாளர் ஆனார். இதை சற்றும் எதிர்பார்க்காத கெளதமன் தரப்பு கடும் அதிருப்தி அடைந்தது. தொகுதிக்கு வந்த ஆளூர் ஷா நவாஸை வரவேற்க கூட செல்லவில்லை கெளதமன். இரண்டு நாட்கள் பட்டும் படாமலும் இருந்தார். சொல்லப்போனால் கெளதமன் தரப்பு ஷா நவாஸை புறக்கணித்தது. தனித்து விடப்பட்டவராக நின்றார் ஷா நவாஸ்.
அவுரி திடலில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ரூ.1 லட்சம் செலவில் வாண வேடிக்கை நடத்தி ஷா நவாஸிற்கு அப்போது நம்பிக்கையூட்டியவர் எடிசன். மாவட்ட செயலாளர் கெளதமன் தன் மீது அதிருப்தியில் இருப்பதையும், ஒழுங்காக தேர்தல் பணிகளை செய்யவில்லை என்பதையும் ஆளூர் ஷா நவாஸ், விசிக தலைவர் திருமாவளவனிடம் புலம்பியிருக்கிறார்.
உடனே இதை அவர் ஸ்டாலினுக்கு கனத்திற்கு எடுத்து செல்ல, கெளதமனை போனில் அழைத்த ஸ்டாலின், `என்ன செய்வீங்கன்னு தெரியாது, ஷா நவாஸை வெற்றி பெற வைக்கணும். உங்களுக்கான அங்கீகாரத்தை நான் செய்து கொடுப்பேன், இல்லைன்னா, உங்களையும், உங்க ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்தே நீக்கிடுவேனு' எச்சரித்தார்.

அதன் பிறகு அதிருப்தியை மறந்து கரம் கோர்த்து செயல்பட்ட கெளதமன், ஆளூர் ஷா நவாஸ் வெற்றிக்கு உதவியாக களத்தில் நின்றார். முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், கெளதமனை மீன் வளர்ச்சிக் கழக தலைவர் ஆக்கினார். கிட்டதட்ட சுமார் 6,000 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள் நடந்திருப்பதாக சொல்கிறார்கள். மாவட்ட செயலாளர் என்ற முறையில் கெளதமனும் வளமாகி விட்டார். அதற்கு நன்றி கடனாக தமிழகத்திலேயே முதன் முறையாக நாகையில் தளபதி அறிவாலயம் கட்டியுள்ளார். ஸ்டாலின் தலைமையில் நடந்த இரவது மகன் திருமணத்தில், உழைப்புக்கு சொந்தக்காரர் கெளதமன். தன் மகன் திருமணத்தை கூட கவனிக்காமல் என்னை வரவேற்பதில் முழு கவனத்தையும் செலுத்தியிருக்கிறார் என பாராட்டினார்.
திமுக தலைமை வைத்துள்ள உத்தேச பட்டியலில் கெளதமன் பெயர் இருப்பதாக சொல்கிறார்கள். இம்முறை தனக்கு தான் வாய்ப்பு என்கிற நம்பிக்கையுடன் தொகுதிக்குள் வலம் வரத் தொடங்கியுள்ளார் கெளதமன். இவர் மீது கோஷ்டி பூசலை வளர்த்துள்ளார் என்கிற விமர்சனமும் இருக்கிறது. இதனால் ஏ.கே.எஸ்.விஜயன், மதிவாணன் போன்றவர்கள் கெளதமன் மீது அதிருப்தியில் உள்ளனர்.
மறுபக்கம் எடிசனை பொறுத்தவரை இளைஞர் செல்வாக்கு கொண்டவர். திமுக விசுவாசியான் இவர் கடந்த முறையும் சீட் கேட்டார். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனக்கு சொந்தமான ஒன்றரை கோடி மதிப்பிலான இடத்தை வழங்கினார்.

கரூரில் நடந்த முப்பெரும் விழாவில் மத்திய மண்டலத்தின் சிறந்த ஒன்றிய செயலாளர் விருதை முதல்வர் ஸ்டாலின் இவருக்கு வழங்கியதுடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி கெளரவித்தார். ஆக்டீவாக இருக்க கூடியவர். சமீபத்தில் நாகை வந்த துணை முதல்வர் உதயநிதி வேளாங்கண்ணியில் தங்கியிருந்தார். உதயநிதியின் உடன் இருந்து கவனித்து கொண்ட எடிசன், உதயநிதியுடன் சேர்ந்து வாக்கிங் சென்றார். அப்போது அமைச்சர் அன்பில் மகேஸ், எடிசன் செயல் குறித்து உதயநிதியிடம் சொல்லியிருக்கிறார்.
மக்கள் எடிசனுக்கு கொடுத்த மரியாதையை பார்த்த உயதநிதி, `குட் இப்படித்தான் மக்கள் மனசில் இடம் பிடிக்கணும்' என பாராட்டினாராம். தேர்தல் செலவுக்கான பசை இவரிடமும் உள்ளது. கெளதமன் மீது தொகுதிக்குள் சில விமர்சனங்கள் நிலவுகிறது. இப்போதைக்கு இருவரும் சீட்டுக்காக கடுமையாக மெனக்கெடுகின்றனர். அடுத்தடுத்த அரசியல் நகர்வை வைத்தே நாகப்பட்டினத்தில் யாரை வேட்பாளராக களம் இறக்கலாம் என்பதை தலைமை முடிவு செய்யும் என்றனர்.!


















