மீண்டும் போராட்டத்தை தொடங்கிய தூய்மைப் பணியாளர்கள் - ரிப்பன் மாளிகை அருகே பரபரப்...
நாக்கை பயன்படுத்தி டைப்பிங்; 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்து கணினி இயக்குநர் சாதனை!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கணினி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். வேலை நிமித்தமாக கடந்த 9 ஆண்டுகளாக கிருஷ்ணகிரியில் வசித்து வரும் சுரேஷ்குமார் 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் ' இடம்பிடித்திருக்கிறார்.

இது குறித்து சுரேஷ்குமார் நம்மிடம் பேசும்போது,
"என்னுடைய அப்பா சிறுவயதில் சைக்கிளில் இன்ஜின் ஒன்றைச் சேர்த்து வண்டியைப் போல இயங்க வைத்தார். அவர் அந்த சைக்கிளில் போகும் போது, ஊர்மக்கள் எல்லோரும் அப்பாவையும் சைக்கிளையும் வியந்து பார்ப்பார்கள். ஒரு சாதாரண சைக்கிளை ஆக்சிலரேட்டர், பிரேக் போன்றவற்றை வைத்து டிவிஎஸ் 50 (TVS 50) வண்டி போல மாற்றிய என் அப்பாவின் கடின உழைப்புக்குக் கிடைத்த பெயரையும் பாராட்டுகளையும் பார்க்கும்போது, அவரைப் போலவே நானும் சாதனை புரிய வேண்டும் என 13 வயதிலிருந்தே எண்ணம் இருந்தது. நான் +2 படிக்கும் போது அப்பா இறந்துவிட்டதனால் படிப்பில் அதிக கவனம் செலுத்தி கணினித்துறையில் M.Phil வரை படித்தேன்.
அதன் பின்னர் வேலை, குடும்பம் என வாழ்க்கை அதற்குள்ளே சுழன்றது. திடீரென ஒருநாள் என் மனைவி வாட்ஸ்அப் குழு ஒன்றில் வந்த செய்தியில் வடமாநில இளைஞர் ஒருவர் தனது மூக்கை வைத்து டைப்பிங் செய்து சாதனை படைத்திருந்தார். அதைக் காட்டி, என்னை நாக்கை வைத்து முயற்சிக்கச் சொல்லிக் கேட்டார்.

முதலில் தயக்கம் இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கலாம் என கடின பயிற்சிக்குப் பிறகு, 'மே' மாதத்தில் A-Z வரை டைப்பிங் செய்து 'அப்துல் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்'ல் இடம்பிடித்தேன். அதைத் தொடர்ந்து பல முயற்சிக்குப் பின், "A-Z முதல் Z-A" என்று தொடர் டைப்பிங் செய்து 25.73 விநாடியில் "இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்'ல் இடம்பிடித்திருக்கிறேன். என்னுடைய இந்தச் சாதனையைக் கையிழந்த மாற்றுத்திறனாளிகளுக்குச் சமர்ப்பித்திருக்கிறேன். மேலும், வரும் ஆண்டில் தமிழ் எழுத்துகள் அனைத்தையும் நாக்கின் மூலம் டைப் செய்ய ஆசை இருக்கிறது " என்று கூறினார் சுரேஷ்குமார்.
















