"யார் குரலையும் கேட்காமல் indifferent, inactive ஆக இந்த அரசு இருப்பது நல்லதல்ல" ...
"நாங்கள் இருப்பதே வாடகை வீடு; என் குடும்பத்தில் யாரிடமும் ரூ.2 கோடி இல்லை..!"- அமைச்சர் ரமேஷ்
கடந்த ஜூலை 25ம் தேதி அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்றிருந்தார்.
அப்போது கிழக்கு கோபுரத்தில் ஷூ அணிந்தபடி அவர் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பி இருந்தது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரமேஷிடம் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அமைச்சர், "ஸ்ரீரங்கம் கோயிலில் கிழக்கு கோபுரப் பணிகள் நடைபெற்று வருவதால் அப்பகுதி முழுவதும் கற்களும், ஆணிகளும், இரும்புகளும் சிதறி கிடக்கின்றன. அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களே தங்கள் பாதுகாப்புக்காகக் காலணி அணிந்துதான் வேலை செய்கிறார்கள்.
நான் சென்றபோது அங்கிருந்த நன்கொடையாளர் நீங்கள் ஷூவைக் கழற்ற வேண்டாம், அப்படியே வாருங்கள் என்று அழைத்துச் சென்றார். ஷூ அணிந்து சென்றதை விமர்சிப்பவர்களுக்கு பகுத்தறிவு என்று ஒன்று இருக்க வேண்டும்.
பகுத்தறிவு இருப்பவர்கள் இப்படியெல்லாம் கேள்வி கேட்க மாட்டார்கள். பாதுகாப்பு முக்கியம். அங்கு வேலை செய்யும் பணியாளர்களும் செருப்பு போடாமல் வேலை செய்ய வேண்டுமா? பணியாளர்களுக்கு ஏதாவது நடந்தால் பகுத்தறிவு இல்லாத இவர்கள்தான் பதில் சொல்வார்களா?
பாதுகாப்பிற்காக நான் ஷூ அணிந்து சென்றதை கோயிலை இழிவுப்படுத்தி விட்டோம் எனச் சொல்கிறார்கள். இத்தகையவர்கள் அரசியல் செய்தே பழக்கப்பட்டவர்கள். இந்த மாதிரி விஷயங்களை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு பகுத்தறிவே இருக்காது" என்று காட்டமாக பதில் அளித்திருக்கிறார்.

தொடர்ந்து பழனி கோயில் நில மோசடி வழக்கில் உங்கள் மீது குற்றம் சுமத்துகிறார்களே என்ற கேள்விக்கு, "முதலில் அது குற்றச்சாட்டே கிடையாது. என் மீது பொய் பரப்புகிறார்கள். ரமேஷ் குடும்பத்தில் உள்ளவர்கள்தான் 2 கோடிக்கு வாங்கி இருக்கிறார்கள் என்று சொல்கின்றனர்.
முதலில் என் குடும்பத்தில் யாரிடமும் 2 கோடி ரூபாய் பணமே கிடையாது. நாங்கள் இருப்பதே வாடகை வீடு. அப்படி இடம் வாங்குவதாக இருந்தாலும் சென்னையில் வாங்காமல் பழனியிலா வாங்குவேன். ஏதாவது ஒரு காரணத்தை வைத்து என் பெயரையும், புகழையும் கெடுக்கப் பார்க்கிறார்கள்" என்று பதிலளித்திருக்கிறார்.














