"நாங்கள் போட்டி போடுவோம்; ஆனால் பொறாமைப்பட மாட்டோம்" - ரஜினிகாந்த் பதிலுக்கு கமல...
"நாங்கள் போட்டி போடுவோம்; ஆனால் பொறாமைப்பட மாட்டோம்" - ரஜினிகாந்த் பதிலுக்கு கமல்ஹாசன் விளக்கம்
நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார். விஜய் மீது ரஜினிகாந்த் பொறாமைப்படுவதாகவும், விஜய் ஆட்சியமைக்கக் கூடாது என இரண்டு கட்சிகளை இணைக்க ரஜினிகாந்த் பேச்சு நடத்தியதாகவும் இணையத்தில் தகவல்கள் பேசப்பட்டன.
இது தொடர்பாக இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விளக்கமளித்திருந்தார்.
அதில் அவர் நகைச்சுவையாக, "ஒருவேளை கமல் முதல்வராகி இருந்திருந்தால், பொறாமைப்பட்டிருப்பேனோ என்னவோ" என்பதைச் சிரித்தபடி கூறியிருந்தார். இதற்கு கமல்ஹாசன் தற்போது பதில் தந்திருக்கிறார்.
இது குறித்துச் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன், "அதை அவர் சிரிப்புடன்தான் கூறினாரே தவிர, நாங்கள் இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துப் பொறாமைப்பட்டது கிடையாது.
நாங்கள் போட்டி போடுவோம். ஆனால் பொறாமைப்பட மாட்டோம். நாம் சினிமா துறையில் இருக்கிறோம், ஒருவேளை நாங்கள் கிரிக்கெட் விளையாடி இருந்தாலும் இப்படித்தான் இருந்திருப்போம்" என்றவர், முதலமைச்சர் விஜய் ஆட்சியில் எதிர்பார்க்கப்படும் விஷயங்கள் குறித்த கேள்விக்கு, "இப்போது இரண்டு நாள்களில் எதையும் கூறிவிடுவது ஜோதிடமாகத்தான் இருக்க முடியும்.

ஆறு நாள்களில் சொல்லக்கூடியதும் அப்படித்தான் இருக்க முடியும். 15 நாள்களிலும் அப்படித்தான் இருக்க முடியும். அதற்கு அவருக்கு ஆறு மாதங்கள் அவகாசம் கொடுக்க வேண்டும் அல்லவா? புதியவர்கள் பலர் வந்திருக்கிறார்கள்.
அதனால், புதியவர்கள் என்பது அரசியலுக்குப் புதியவர்கள் கிடையாது. சுதந்திர இந்தியா கிடைத்தபோது எல்லாருமே புதிய அமைச்சர்கள்தான். எனவே, புதியவர்களை நாம் குறைவாக எடை போடவும் வேண்டாம்.
அதே நேரத்தில் அதிகமாக எதிர்பார்க்கவும் வேண்டாம். என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம். நீங்கள்தானே வாக்குச் செலுத்தினீர்கள்? அப்படியென்றால் அது நல்லபடியாக நடக்கிறதா என்பதை நீங்கள்தான் கவனிக்க வேண்டும். நாங்களும் கண்காணிப்போம்" எனக் கூறியிருக்கிறார்.














