பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட மைனர் பெண்; முகத்தைச் சிதைத்துவிட்டு ...
பகலில் படிப்பு, இரவு பெட்ரோல் பம்பில் வேலை; கல்வியைத் தொடர போராடும் மும்பை மாணவியின் நெகிழ்ச்சி கதை
மும்பையைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது படிப்புக்காக இரவு 10 மணி வரை பெட்ரோல் பம்ப் ஒன்றில் வேலை செய்வது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
மும்பையில் உள்ள ஷெல் பெட்ரோல் பம்ப் ஒன்றில் வினீத் என்பவர் தனது காருக்கு பெட்ரோல் நிரப்பச் சென்றார். மழை மற்றும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக அவர் 4 கிலோமீட்டர் தூரத்தை 45 நிமிடமாக தனது காரில் கடக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இதனால் அருகில் இருக்கும் பெட்ரோல் பம்பில் பெட்ரோல் நிரப்ப சென்றபோது அங்கு பணியில் இருந்த இளம்பெண் ஒருவரிடம் மெதுவாக வினீத் பேச்சு கொடுத்தார். அப்போது அப்பெண் இந்தியில் பேசினார்.

ஆனால் அவர் தனது ஊர் மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டம் என்றும் படிப்புக்காக மும்பை வந்திருப்பதாகவும் தெரிவித்தார். உடனே படிக்க வந்துவிட்டு எப்படி இந்த வேலை செய்கிறாய் என்று வினீத் கேட்டதற்கு, அந்த மாணவி பகலில் கல்லூரிக்குச் சென்று வந்த பிறகு மாலையில் இரவு 10 மணி வரை பெட்ரோல் பம்பில் வேலைக்குச் செல்வதாகத் தெரிவித்தார்.
வார இறுதி நாட்களில், கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்துவதற்குப் போதுமான வருமானம் ஈட்டுவதற்காக, காலை மற்றும் மாலை வேளைகளில் இரண்டு முறை வேலை செய்வதாகவும் குறிப்பிட்டார். அவரது அந்தச் செயலை கேட்டு ஆச்சரியப்பட்ட வினீத் தேவைப்பட்டால் உனது படிப்புக்கு தான் உதவுவதாகக் குறிப்பிட்டார்.
அம்மாணவியுடனான தனது உரையாடல் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வினீத் பதிவு செய்துள்ளார். அதனைப் பார்த்த பலரும் மாணவியின் செயலை வெகுவாகப் பாராட்டினர்.
அவரது கல்வி இலக்குகளை அடைவதில் அவரது வெற்றிக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்தனர், அவருடைய கடின உழைப்பு அவர் கனவு காணும் எதிர்காலத்தை உருவாக்க உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
பல மேற்கத்திய நாடுகளில் பகுதிநேர வேலை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதையும் பல பயனர்கள் சுட்டிக்காட்டினர். இந்தியாவில் இதேபோன்ற வாய்ப்புகளை ஊக்குவிப்பது உயர் கல்வியைத் தொடரும் போது இளைஞர்கள் அதிக நிதி ரீதியாகச் சுதந்திரமாக இருக்க உதவும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
















