சினிமாவில் பயன்படுத்தப்பட்ட இளைஞரின் மொபைல் எண்; படக்குழுவுக்கு எதிராக வழக்குக்க...
பட்டியல் சமூகத்துக்கு மீண்டும் வாய்ப்பு? - தவெக சார்பில் ராஜ்யசபா செல்லப்போவது யார்?
தமிழகத்தில் காலியாக உள்ள 1 மாநிலங்களவை எம்.பி இடத்துக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியிருக்கிறது. ஜூன் 8 ஆம் தேதி வரைக்கும் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய அவகாசமிருக்கிறது. எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த ஒரு எம்.பி இடம் தவெகவுக்கே கிடைக்கும். இந்நிலையில், தவெக சார்பில் நாடாளுமன்றத்தில் ஒலிக்கப் போகும் முதல் குரல் யாருடையது எனும் கேள்வி எழுந்திருக்கிறது. விஜய் டிக் அடிக்கப் போகும் அந்த நபர் யார்?

தேர்தலுக்கு பிறகு காங்கிரஸூடன் கூட்டணி சேர்ந்தது தவெக. காங்கிரஸின் 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் தான் தவெகவின் ஆட்சியே நடந்து வருகிறது. மேலும், காங்கிரஸ் திமுக ஆதரவுடன் கிறிஸ்டோபர் திலக்கை ராஜ்யசபாவுக்கு அனுப்பியிருந்தது. அதுபோக, 2028 இல் ஒரு ராஜ்ய சபா சீட் வேண்டுமென வாய்மொழியாகவும் உத்தரவாதம் வாங்கியிருந்தது.
இந்நிலையில்தான், தேர்தலுக்கு பின்பு திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைந்தது. திமுகவிடம் கேட்ட அந்த கூடுதலான ராஜ்ய சபா சீட்டை விஜய்யிடம் கேட்டுப் பெறலாம் என காங்கிரஸில் ஒரு குழு ஆலோசனை கூறியிருக்கிறது. தவெக தரப்பிலும் இந்த ஐடியா குறித்து முதற்கட்டமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸூக்கு ராஜ்ய சபா சீட் கொடுப்பதன் மூலம் இண்டியா கூட்டணியில் இன்னும் அழுத்தமாக கால்பதிக்க முடியும் என்றும் யோசிக்கப்பட்டிருக்கிறது.

அப்படி காங்கிரஸூக்கு வழங்குவதாக இருந்தால் பிரவீண் சக்கரவர்த்தியை நிறுத்தலாம் என்பது ஒரு சாய்ஸாகவும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், முதல் முதலாக நாடாளுமன்றத்துக்கு செல்லும் வாய்ப்பை வேறு கட்சிக்கு ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் என தவெகவின் பவர் சென்டர்கள் சிலர் இந்த ஐடியாவை நிராகரித்திருக்கின்றனர். மேலும், நிதி சார்ந்த விஷயங்களுக்கு மத்திய அரசுடன் இணக்கமாக போக வேண்டிய தேவையும் இருக்கிறது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தவெக உதவுவதை டெல்லி மேலிடம் ரசிக்காது என்கிற யதார்த்தத்தையும் தவெகவின் முக்கியஸ்தர்கள் உணர்ந்திருக்கின்றனர். ஆனால், இன்னமும் காங்கிரஸ் தரப்பில் ஒரு டீம் தவெகவுடன் இதுசம்பந்தமாக பேசிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில்தான் கட்சிக்காக உழைத்தவர்கள் யாரையாவது நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கலாம் எனும் முடிவுக்கு வந்திருக்கின்றனர். அதன்படி லயோலா மணி அல்லது கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் சம்பத் குமார் ஆகிய இருவரில் ஒருவரை டிக் அடிக்கலாம் எனும் மனநிலையில் முதல்வருக்கு நெருக்கமான வட்டத்தினர் இருப்பதாக கூறப்படுகிறது.

இருவருமே பட்டியலினத்தை சேர்ந்தவர்கள். லயோலா மணி ஆதி திராவிடர் சமூகத்தையும் சம்பத் குமார் தேவேந்திர குல வேளாளர் சமூகத்த்தையும் சேர்ந்தவர். அமைச்சரவையில் உள்ள 8 தலித்துகளில் 7 பேர் ஆதிதிராவிடர்களாக இருப்பதால் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த சம்பத் குமாரின் பெயர் இறுதியாக டிக் அடிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அமைச்சரவையிலும் 8 பட்டியலினத்தவர்களுக்கு இடம் கொடுத்துவிட்டு, ராஜ்ய சபா சீட்டையும் பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கே கொடுத்தால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடுமோ எனும் தயக்கமும் விஜய்யின் வியூக வகுப்பு குழுவிடம் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் விஜய்க்கு நெருக்கமான வட்டத்திலிருந்தே முக்கியமான ஒருவரை இறக்கலாமா எனும் பேச்சுவார்த்தையும் ஓடிக்கொண்டிருக்கிறது. எம்.பி சீட் இல்லையென்றாலும் சம்பத் குமாரை தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக நியமிக்கவும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
விஜய் என்ன முடிவெடுக்கப் போகிறார்?
















