மாணவர் தலைவர் டு கேரள முதல்வர்... டெல்லி தலைமையால் தவிர்க்கவே முடியாத இந்த வி.டி...
மதுபான கொள்கை வழக்கு: நீதிபதி ஸ்வர்னா காந்தா விலகல்; அர்விந்த் கெஜ்ரிவாவின் எதிர்ப்புதான் காரணமா?
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவால், மனிஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை விடுவித்த கீழ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்வர்னா காந்தா சர்மா விசாரித்து வந்தார்.
ஆனால் ஸ்வர்னா காந்தா ஆ.எஸ்.எஸ். அமைப்போடு தொடர்புடையவர் என்றும், ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவர் என்றும் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி இருந்தார்.
அதோடு இவ்வழக்கில் இருந்து ஸ்வர்னா காந்தா விலக வேண்டும் என்று அர்விந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இவ்வழக்கில் இருந்து விலக மாட்டேன் என்று ஸ்வர்னா காந்தா குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து இவ்வழக்கு விசாரணைகளில் அர்விந்த் கெஜ்ரிவால் ஆஜராவதைத் தவிர்த்து வந்தார்.
எனவே அர்விந்த் கெஜ்ரிவால் வழக்கிற்கு உதவ வேறு வழக்கறிஞர்களை நியமிக்கவும் நீதிபதி முடிவு செய்து இருந்தார். ஆனால் திடீரென நீதிபதி ஸ்வர்னா தனது முடிவை மாற்றிக்கொண்டு இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டுள்ளார்.

அதேசமயம் கெஜ்ரிவால் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும், அதனைத் தான்தான் விசாரிப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி ஸ்வர்னா இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பிரதிவாதிகளில் சிலர் எனக்கு எதிராகவும், இந்த நீதிமன்றத்திற்கு எதிராகவும் மிகவும் அவதூறான, அவமதிப்புமிக்க மற்றும் தரக்குறைவான விஷயங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவது என் கவனத்திற்கு வந்துள்ளது.
என்னால் அமைதியாக இருக்க முடியாது. நான் முக்கிய வழக்கை விசாரிக்க மாட்டேன். ஆனால், சில பிரதிவாதிகள் மற்றும் பிற நீதிமன்ற அவமதிப்பாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளேன்.
குற்றம் சாட்டப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டு ஒரு அவதூறு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். இந்த நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்குச் செல்வதற்குப் பதிலாக, அவர் இந்த உத்தரவை சமூக ஊடகங்களுக்கு இழுத்துச் சென்றுள்ளார்.
ஒரு நீதிபதியின் வீடியோக்கள் தங்களுக்குச் சாதகமாகத் திருத்தப்பட்டு வெளியிடப்படும்போது, அது அவர்களின் தீய எண்ணத்தைக் காட்டுகிறது.
அவர் என்னைக் கேலி செய்ய விரும்பினார். குற்றம் சாட்டப்பட்டவர்களாலும், குறிப்பாக கெஜ்ரிவாலாலும் இந்தப் பிரசாரத்தின் மூலம் சொல்லப்பட்ட செய்தி என்னவென்றால், ஒரு நீதிபதி அரசியல் சக்திகளின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்கவில்லை என்றால், அந்த நீதிபதி அவதூறுக்கு ஆளாவார் என்பதுதான்.
இத்தகைய நடத்தைகள் தடுக்கப்படாமல், நீதிபதிகள் மிரட்டப்பட்டால், நீதி என்பதே பலியாகிவிடும்," என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்















