வெகுண்டெழுந்த மும்பை; தொடர் தோல்வியில் பஞ்சாப்; தத்தளிக்கும் டாப்-4 கனவு - நடந்த...
சனாதனம்: ``இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல" - உதயநிதி ஸ்டாலின் பதிவு!
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தன் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைக் கைப்பற்றியது தவெக. அதைத் தொடர்ந்து, புதிய சட்டமன்றத்தின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்தது. இதில், எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தனது உரையில், கடந்த 2023-ம் ஆண்டு அவர் முன்வைத்த அதே "சனாதன ஒழிப்பு" என்பதை மீண்டும் கையில் எடுத்தார். "மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிய வேண்டும்" என்று அவர் ஆவேசமாக முழங்கினார்.

உதயநிதியின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தவெக-வின் மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ முஸ்தஃபா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, உதயநிதியின் சனாதனப் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சற்றும் தயங்காமல் பதிலளித்த முஸ்தஃபா, "நாங்களும் அதை ஒழிக்கத்தான் அரசியலுக்கு வந்துள்ளோம்" என பதிலளித்தார்.
உதயநிதியின் தனிப்பட்ட கருத்தாகப் பார்க்கப்பட்ட சனாதன எதிர்ப்பு, இப்போது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வின் வெளிப்படையான ஆதரவால் புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளது. தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுமே இந்து தர்மத்திற்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி, பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் தமிழகம் தழுவிய அளவில் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.

இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன். சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம். மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன். பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன். நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் . 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.














