பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவ...
`மு.க.ஸ்டாலின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி மனதார வருத்தப்பட்டார்!' – ஆதங்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அதிலிருந்து வெளியேறி, த.வெ.க-வுடன் இணைந்திருக்கிறது.
அதையடுத்து அ.தி.மு.க-வில் ஒரு தரப்பு த.வெ.க-வுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மற்றொரு தரப்பு கொடுக்கக் கூடாது என்றும் கூறியதால் அங்கு உட்கட்சிப் பூசல் ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து அ.தி.மு.க-வின் 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இன்று காலை அங்கு வந்த புதுச்சேரி அ.தி.மு.க அமைப்பாளர் எம்.எல்.ஏ அன்பழகனிடம், `தமிழகத்தின் எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரிக்கு வந்திருப்பது ஏன்?' என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, ``தமிழகத்தில் அரசியல் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் புதுச்சேரிக்கு வந்திருக்கிறார்கள்" என்றார்.
தொடர்ந்து, `அனைத்து எம்.எல்.ஏ-க்களும் வரவில்லையே… எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மட்டும்தானே வந்திருக்கிறார்கள்' என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, `நாங்கள் அனைவருமே பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆதரவாளர்கள்தான். 70% எம்.எல்.ஏ-க்கள் வந்திருக்கிறார்கள். மீதமிருப்பவர்களும் இனிமேல் வருவார்கள்.
இன்றோ அல்லது நாளையோ எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் வருவார். த.வெ.க-வுக்கு எந்தவிதத்திலும் ஆதரவு இல்லை என்பதுதான் அ.தி.மு.க-வின் நிலைப்பாடு. அதை எங்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஏற்கெனவே தெளிவாகக் கூறிவிட்டார்" என்றார்.
தொடர்ந்து, `அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க-வுக்கு சென்றுவிடுவார்கள் என்பதற்காகத்தான் இங்கு தங்க வைக்கப்பட்டிருக்கிறார்களா?' என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ``ஏன் த.வெ.க-வில் இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் அதிமுகவுக்கு வரமாட்டார்களா ? அவர்கள் அனைவரும் புடம்போட்ட தங்கங்களா ? தி.மு.க, அ.தி.மு.க என்பதெல்லாம் திராவிட பாரம்பர்யம் கொண்ட கட்சிகள்.

நினைத்தால் கட்சியை விட்டும் கட்சி மாறும் இயக்கங்கள் இல்லை இவை. நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் கட்சி அது. முதலில் அ.தி.மு.க-வையும் த.வெ.க-வையும் இணைத்தே பேசக் கூடாது. பாரம்பர்யமிக்க அரசியல் கட்சிதானே தி.மு.க. 70 ஆண்டு காலம் தமிழக மக்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கும் கட்சிதானே அது ? அதை நாங்கள் கேவலப்படுத்திப் பேசிவிட முடியுமா… முடியாது.
என் வெற்றிச் சான்றிதழை கொடுப்பதற்காக எங்கள் பொதுச் செயலாளரை சந்தித்தபோது, ஸ்டாலின் எப்படிப்பட்ட தலைவர். அவரே வெற்றி வாய்ப்பை இழக்கும் அளவுக்கு இந்த மக்கள் வாக்களித்திருக்கிறார்களே என்று மனதார கஷ்டப்பட்டார். அரசியலில் நாங்கள் வெவ்வேறு துருவங்களாக இருந்தாலும், தலைவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றுதான் நினைப்போம். அப்படிப்பட்ட பெருந்தன்மையும், தலைமைப் பண்பும் நிறைந்தவர்தான் எங்கள் பொதுச் செயலாளர்" என்றார்.













