Doctor Vikatan: காலை உணவைத் தவிர்த்தால் ஈஸியாக உடல் எடை குறையும் என்பது உண்மையா?
முடவாட்டுக்கால் உண்மையிலே முட்டிவலியைப் போக்குமா?
முட்டிவலி என்று கூகுளில் டைப் செய்தால், முடவாட்டுக்கால் பற்றிய கட்டுரைகளும் வீடியோக்களும் கொட்டுகின்றன. 'முடவாட்டுக்கால் சூப் செய்வது எப்படி' என்கிற சமையல் வீடியோக்களுக்கும் பஞ்சமில்லை.
முடவாட்டுக்கால் உண்மையிலே முட்டிவலியைப் போக்குமா என்று, சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் செல்வ சண்முகம் அவர்களிடம் கேட்டோம்.

''முடவாட்டுக்கால் கிழங்கு மருத்துவ குணமுள்ள ஓர் உணவுப்பொருள்தான். அதில் சந்தேகமே வேண்டாம். உடலில் ஏற்படக்கூடிய வலி, வீக்கம், சிவந்துபோதல், உடற்சூடு போன்றவற்றை நீக்கக்கூடிய தன்மை இந்தக் கிழங்கில் இருப்பது உண்மைதான்.
இந்தக் கிழங்கில் ஆர்த்ரைட்டீஸுக்கு எதிரான தன்மையும் இருக்கிறது. கூடவே, மன அமைதியையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும். இதுதொடர்பாக நிறைய ஆய்வுக்கட்டுரைகள் இருக்கின்றன.
இதில் இருக்கிற பைட்டோ நியூட்ரியன்ஸ் எனப்படும் தாவர வேதிப்பொருள்கள், வலி நிவாரணம் தரக்கூடியது என்பதை பல இன்டர்நேஷனல் மருத்துவ ஆய்வு இதழ்கள், வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளன.
குறிப்பாக, நம்பகமான PubMed போன்ற ஆய்வுத்தொகுப்பிலும் முடவாட்டுக்கால் பற்றிய ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

முடவாட்டுக்கால் கொல்லி மலையில் நிறைய விளையும். அங்கிருக்கிற ஆகாய கங்கையில் குளிக்க வருபவர்களுக்கு மலைப்பகுதியில் நடந்து வந்தக் காரணமாக முட்டி வலி வரும். அதை போக்க இந்தக் கிழங்கை வேக வைத்து சூப்பாக அருந்துவார்கள்.
தவிர, அந்தப்பகுதியில் இருக்கிற மலைவாழ் மக்களும், வேலை காரணமாக அந்தப்பகுதியில் மலையேறுபவர்களுக்கும் வருகிற கால் வலியைப் போக்க முடவாட்டுக்காலை மருந்துணவாக இயற்கை அங்கு வைத்திருக்கிறது.
இதை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் இருப்பதால், முட்டி வலி இருப்பவர்கள் எல்லோரும் முடவாட்டுக்காலை சாப்பிட வேண்டியதில்லை.
அதற்குபதில், முட்டி வலியால் அவதிப்படுபவர்கள் நம்முடைய மண்ணில் நிறைய விளையக்கூடிய, அபரிமிதமாகக் கிடைக்கக்கூடிய மிளகு, மஞ்சள், பூண்டு, இஞ்சி, ஏலக்காய் போன்ற மருந்துணவுகளை சாப்பிட்டுக் கொள்ளலாம்.
ஒரு குறிப்பிட்ட தாவரத்தில், ஒரு மருத்துவ குணம் இருக்கிறது என்ற காரணத்துக்காக எல்லோரும் அதையே சாப்பிட்டு அந்தத் தாவரத்தையே வேரோடு அழிப்பது புத்திசாலித்தனமல்ல.
மற்றபடி, முட்டி வலி போக்க நம் மண்ணில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைகள் இருக்கின்றன. முடவாட்டுக்கால் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்கிற அவசியமில்லை'' என்கிறார் டாக்டர் செல்வ சண்முகம்.



















