பாடகர் அறிவு கைது: ``பாஜக என்ற பெயரைச் சொல்லக் கூட தயங்குகிறது இந்த அரசு" - கனிம...
`யாருக்கும் தெரியாமல் எங்காவது போய் அமைதியாக இருக்க விரும்புகிறேன்; பிறந்தநாள் விழா வேண்டாம்' - வைகோ
கட்சிக்காரர்கள் தனக்குத் தெரியாமல் தனது பிறந்த நாள் விழாவை ஏற்பாடு செய்து வருகிறார்கள். அவர்களுக்குப் பொருட்செலவு வைக்க விரும்பாததால் இந்தாண்டு பிறந்த நாளுக்கு ஏற்பாடு செய்திருந்த விழாவை ரத்து செய்வதாக கூறியிருக்கிறார் வைகோ.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,
``1944 செப்டம்பர் 22 ம் தேதி பிறந்தேன். பள்ளியில் சேர்க்கிற போது வயது குறைவாக இருந்ததால் 4 மாதங்கள் முன்னதாகச் சேர்த்து மே 22 என சேர்த்து விட்டார்கள். எனவே சான்றிதழில் மே 22 என்றுதான் இருக்கிறது. ஒரு முறை மறைந்த இந்திய பிரதமர் வாஜ்பாய் அந்த தேதியில் என்னை தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினார். அவரிடம் உண்மையான தேதியைச் சொன்னதும், ‘என் வாழ்த்துகள் செப்டம்பர் 22 க்குப் போய்ச் சேரட்டும்’ என சொன்னார்.
செப்டம்பர் மாதம் 15ம் தேதிதான் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளும் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளை மாநாடாக கொண்டாடி வருகிறது மதிமுக.

அண்ணாவின் 100 வது பிறந்த நாளை 15ம் தேதிக்குப் பதில் 21 ம் தேதி கொண்டாடியது திமுக. ஆனால் மதுரையில் பிரமாண்டமாக கொண்டாடியவன் இந்த வைகோ. அந்த மாநாட்டில் கலைஞர் பிறந்த நாளை ஜூன் 3 க்குப் பதில் வேறொரு நாள் கொண்டாடுவீர்களா எனக் கேட்டேன்.
அண்ணாவின் பிறந்த நாளுக்கு ஒரு மறு வாரம் என்னுடைய பிறந்த நாள் வருவதால் கட்சியினர் இரண்டு விழாக்களையும் கொண்டாடும் போது பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.
எனக்குத் தெரியாமல் இப்படி அவர்கள் சிரமப்படுவது வேதனை தருகிறது. இந்தாண்டும் வைகோ 83 லட்சினையெல்லாம் தயாராகி விட்டதாகச் சொன்னார்கள். ஆனால் என்னால் கட்சியினர் படும் சிரமங்களைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே இந்தாண்டு விழாவை ரத்து செய்யச் சொல்லி விட்டேன். தொண்டர்களின் விருப்பத்துக்கு செவி சாய்க்க முடியாத மன வேதனையுடனேயே இந்த முடிவை எடுத்தேன். இந்த ஆண்டு மட்டுமல்ல இனி வரும் ஆண்டுகளிலும் எனக்கு பிறந்த நாள் விழாக்கள் வேண்டாம்.

இந்த ஆண்டு அந்த நாளில் பிறர் அறியாவண்ணம் எங்காவது போய் அமைதியாக கழிக்க நினைக்கிறேன்.
என் மன அமைதிக்காக இந்த முடிவுக்கு ஒத்துழைப்பு தருமாறு தொண்டர்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார் அவர்..













