National Awards: "விருது அறிவித்த பிறகே Sound Designer-க்குத் தெரிந்தது!" - 'ப்ள...
CJP: ``மாணவர்கள் செய்த தவறு என்ன? அமைதியான போராட்டத்தைக் கையாளும் முறை இதுவன்று" - டொவினோ கண்டனம்
நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது.
இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர்வுகள் குளறுபடி தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கினர்.
இந்தப் போராட்டத்தைக் கலைக்கும் வகையில் ஆளும் பா.ஜ.க அரசு மாணவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு, தடியடி தாக்குதல் எனக் வன்முறை சம்பவத்தை நிகழ்த்தியிருக்கிறது.
பா.ஜ.க அரசின் இந்த நடவடிக்கை சமூக ஊடகங்களில் வீடியோவாக வெளியான நிலையில், மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், சமூக ஊடகங்களில் அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் பா.ஜ.க அரசின் நடவடிக்கை குறித்து விமர்சித்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில், மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் டொவினோ தாமஸ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``சரி, தவறு என்பது ஒப்பீட்டளவிலானதாக (சார்புடையதாக) இருக்கலாம். ஆனால், அமைதியான ஒரு போராட்டத்தைக் கையாளும் முறை நிச்சயமாக இதுவல்ல.
ஒரு நாட்டின் எதிர்கால சந்ததியினர் தங்கள் குரலை எழுப்பும்போது, அந்தக் குரல்கள் அடக்குமுறை கொண்டு ஒடுக்கப்பட்டால், அங்கே மிதிக்கப்படுவது இந்தியாவின் எதிர்காலமே ஆகும். அங்கே சிறுகச் சிறுக வற்றிப்போவது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையே ஆகும். இந்த மாணவர்கள் செய்த தவறுதான் என்ன? அவர்கள் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தினார்களா? வன்முறையில் ஈடுபட்டார்களா?
இந்த அளவுக்கு நடத்தப்படுவதற்கு அவர்கள் அப்படி என்னதான் செய்தார்கள்? நம் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் சரி, ஒரு நியாயமான காரணத்திற்காக அமைதியான முறையில் போராடும் ஒவ்வொரு நபருக்கும் என் முழுமனமார்ந்த ஆதரவை வழங்கி அவர்களோடு உறுதுணையாக நிற்கிறேன்.

மாறுபட்ட கருத்துக்களைக் தெரிவிப்பதும், எதிர்ப்பைப் பதிவு செய்வதும் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் அல்ல; மாறாக, அதுவே ஜனநாயகத்தின் மிக முக்கியமான தூண்களில் ஒன்றாகும். இப்போது எனது தேசியப் பற்றைப் பற்றிக் கேள்வி எழுப்ப நினைப்பவர்களுக்குச் சொல்கிறேன்... உங்களை விட என்னை எனக்கு மிக நன்றாகவே தெரியும். இது அரசியல், மதம் மற்றும் மனிதர்களைப் பிரிக்கும் அனைத்து வேறுபாடுகளையும் கடந்தது. மனிதநேயமே என் அரசியல். அமைதியே என் நம்பிக்கை. ஜெய் ஹிந்த்" எனப் பதிவிட்டிருக்கிறார்.















