HBD CM Vijay: முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் & சினிமா பிரபலங்...
`வசூல், பஞ்சாயத்துனு கும்பலா கிளம்பியிருக்காங்க, ஆனா எங்க ஆளுங்க இல்ல!' - சிங்காநல்லூர் தவெக MLA
நாகர்கோவிலைச் சேர்ந்தவர் தொழிலதிபர் அமர்நாத். தாது மணலை பிரிக்கும் இயந்திரம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர், தன்னிடமிருந்து இருபது லட்ச ரூபாயை ஏமாற்றும் நோக்கில் செயல்படும் இரண்டு பேருக்கு ஆதரவாக, கோவை சிங்காநல்லூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ.வான ஸ்ரி கிரி பிரசாத்தும் அவரது தந்தையும் மிரட்டுவதாகப் பேசிய சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியிருக்கின்றன.
அதேநேரம் காவல்துறையில் இவர் அளித்திருக்கும் புகாரில் ஸ்ரி கிரி பிரசாத் மற்றும் அவரது தந்தை பெயர் இல்லை.
என்ன நடந்தது? அமர்நாத்தை தொடர்பு கொண்டு பேசினோம்.

''ஐதராபாத்தில் ஏற்கனவே தொழிற்சாலை இயங்கிட்டிருக்கு. கோயம்புத்தூரில் கிளை திறக்கலாம்னு இடம் தேடினப்ப ரங்கநாதன் என்பவருடைய இடம் கிடைச்சது. வாடகை 2 லட்சம், 20 லட்சம் அட்வான்ஸ் எனப் பேசி அட்வான்ஸ் கொடுத்து வாடகை ஒப்பந்தமும் போட்டாச்சு. மேற்படி இடத்துக்கு மின் இணைப்பு இல்லை. பல வருடங்களாக பணம் கட்டவில்லையென்று கட் செய்யப்பட்டதாகத் தெரியவந்தது. 15 நாட்களில் இணைப்பு பெற்றுத் தருவதாகச் சொன்னார் ரங்கநாதன். அதையும் வாடகை ஒப்பந்தத்தில் பதிவு செய்திருந்தோம்.
ஆனா சொன்னபடி வாங்கித் தரவில்லை. அதனால் எங்களுக்கு இடம் வேண்டாம், அட்வான்ஸைத் திருப்பித் தந்துடுங்க'னு கேட்டேன். அப்ப இருந்து ரங்கநாதனும் அவரது மகன் வெங்கடேஷ் ஷியாம் குமாரும் சேர்ந்துகிட்டு பணத்தை தராம ஏமாத்த என்னவென்னலாம் பண்ணனுமோ அதைப் பண்ணிட்டிருக்காங்க.
அவருக்கு ஆதரவா சிங்காநல்லூர் எம்.எல்.ஏ.வின் தந்தை இருக்கறதா எங்க காதுபட அங்கயே சிலர் பேசினாங்க. ரங்கநாதனும் எம்.எல்.ஏ.வும் ஒரே சமூகம்னு சொல்றாங்க.
கொடுத்த பணத்தை வாங்க முடியாத நிலையில நான் இருக்க, என் மேலயே ரங்கநாதனும் அவரது மகனும், சிசிடிவியை திருடிட்டதா போலீஸ்ல புகார் தந்திருக்காங்க. போலீஸ் இந்த விவகாரத்துல காட்டற ஆர்வமும் எங்களுக்கு சந்தேகத்தைத் தருது. போலீஸ் விசாரணை நியாயமா தெரியலை. அதனாலேயே எம்.எல்.ஏ மற்றும் அவரது தந்தையின் தலையீடு இதுல இருக்கும்னு நம்ப வேண்டியிருக்கு. இப்ப விவகாரத்தை கோர்ட்டுக்குக் கொண்டு போயிருக்கோம்’’ என்றவரிடம்.
போலீஸ் புகாரில் எம்.எல்.ஏ மற்றும் அவரது தந்தை பெயரை குறிப்பிடாதது குறித்தும் கேட்டோம்.
'இடத்துக்குச் சொந்தக்காரர்ங்கிற முறையில ரங்கநாதன் மற்றும் அவரது மகன் பெயர்களை மட்டும்தான் குறிப்பிட முடியும்கிறதால் அவங்க மீது புகார் தந்தேன்' என்கிறார்.

சிங்காநல்லூர் எம்.எல்.ஏ கிரி பிரசாத்திடம் பேசினோம்.
''அப்பா வழக்கறிஞர்ங்கிறதால ரங்கநாதனும் அவரது மகனும் அப்பாகிட்ட அந்த இட விவகாரம் தொடர்பா லீகல் ஒபீனியன் கேட்டு வந்திருக்காங்க. அப்படிதான் அப்பாவுக்கு ரங்கநாதனையும் அவரது மகனையும் தெரியும். அப்ப சந்திச்சதோட சரி. பிறகு ஓரிரு முறை போனில் பேசியிருக்காங்க.
ஆனா திடீர்னு அமர்நாத் என் பெயரையும் அப்பா பெயரையும் சேர்த்து இந்த விவகாரம் தொடர்பா பேசிய வீடியோக்கள் வெளி வருது. எதுக்கு எங்க பெயரைச் சேர்த்தாங்கன்னே தெரியலை. அந்த இட விவகாரம் தொடர்பா எந்தவித சிபாரிசோ, தலையீடோ எந்த இடத்துலயும் நாங்க பண்ணலை.
அப்படி இருக்கும் போது எங்க பெயரைப் பயன்படுத்தியது குறித்து சம்பந்தப்பட்ட ரங்கநாதன் அவரது மகன், அமர்நாத் அவரது மேனஜர் ஆகியோருக்கு அப்பா வக்கீல் நோட்டிஸ் அனுப்பியிருக்கார்.
ரங்கநாதன் மற்றும் அவர் மகன் ரெண்டு பேர் மீது எங்க பெயரை தவறாக பயன்படுத்தியதற்காகவும், அமர்நாத் ஆதாரம் இல்லாம பெயரை மீடியாவில் டேமேஜ் செய்ததற்கும் விளக்கம் கேட்டு அனுப்பியிருக்கோம்.
இந்த ஒரு விவகாரம் மட்டுமில்ல. இன்னும் சில விஷயங்களும் எங்க காதுகளுக்கு வந்தது.
அதாவது எங்களுக்குத் தொடர்பில்லாத சிலர் எங்களது பெயர்களைப் பயன்படுத்தறதா தெரிய வருது. அவங்க குறித்து தகவல் திரட்டச் சொல்லியிருக்கேன். ஆதாரங்கள் கிடைச்சதும் சம்பந்தப்பட்டவங்க மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்னு இருக்கேன்.
இந்த விவகாரம் குறித்து கட்சித் தலைமைக்கும் தகவல் சொல்லிட்டேன். எனக்குத் தெரிய தவெகவைச் சேர்ந்த வேறு யாருமே இதுல இன்வால்வ் ஆகலை. போலீஸ் சுதந்திரமா விசாரிச்சா உண்மையான குற்றவாளிகள் சிக்கிடுவாங்க'' என்கிறார்.
’எம்.எல்.ஏ.வின் தந்தை ரங்கநாதனுக்கு ஆதரவாக இருக்கிறார்’ என்கிற அமர்நாத், எம்.எல்.ஏ மீதோ அவரது அப்பா மீதோ எழுத்து பூர்வமாக புகார் தரவில்லை. எம்.எல்.ஏ.வின் தந்தையோ ரங்கநாதன் மீதே சட்டநடவடிக்கை எடுக்கப் போவதாகச் சொல்கிறார். போலீஸ் நேர்மையாக விசாரித்தால் மட்டுமே இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பது தெரிய வரும்.!


















