'பகலில் டெலிவரி வேலை; இரவில் படிப்பு' - போலீஸ் கனவோடு மும்பைக்கு வந்த உபி பெண்; ...
வெளியேறிய மணமகள்; மணமேடை ஏற்றப்பட்ட 13 வயது சகோதரி - மொட்டை கடிதத்தால் நிறுத்தப்பட்ட திருமணம்!
மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயதான ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு திருமணம் நடக்க இருப்பதாக போலீஸ் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் வந்தது. 13 வயது மாணவியின் மூத்த சகோதரிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பெண் வீட்டார் கவலைப்பட்டனர்.
நிதி இழப்பை சரி செய்யவும், சமூகத்திற்கு பயந்தும் இப்பிரச்னைக்கு தீர்வு காண தங்களது இளைய மகளை ஏற்கனவே மூத்த மகளுக்கு பார்த்திருந்த மணமகனுக்கு திருமணம் செய்து வைக்க பெண்ணின் பெற்றோர் முடிவு செய்தனர்.
ஆனால் இரண்டாவது மகளுக்கு 13 வயதுதான் ஆகி இருந்தது. இது குறித்து மர்ம நபர் ஒருவர் போலீஸாருக்கு கடிதம் எழுதினார். அக்கடிதத்தின் அடிப்படையில் போலீஸார் விரைந்து செயல்பட்டு விசாரிக்க ஆரம்பித்தனர்.

உள்ளூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அர்ச்சனாவை தொடர்பு கொண்டு விசாரிக்க, மாவட்ட போலீஸ் அதிகாரி உத்தரவிட்டார். அர்ச்சனாவும், குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அதிகாரிகளும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று 13 வயதில் திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என்று கூறினர்.
பெண்ணின் பெற்றோரும் தங்களது மகளுக்கு திருமணம் நடத்தமாட்டோம் என்று கூறினர். ஆனால் அதிகாரிகளின் பேச்சை கேட்காமல் பெண்ணிற்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்தனர். பெண்ணின் வீட்டில் பந்தல், அலங்காரம் செய்யப்பட்டது. எச்சரிக்கையை மீறி திருமணம் நடக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் கூடுதல் எஸ்பி சர்வப்ரியா சின்ஹா, மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அதிகாரி ஜிதேந்திர குப்தா மற்றும் போலீஸ் குழுவுடன் எஸ்பி ஷியாஸ் நேரில் அப்பெண்ணின் கிராமத்திற்குச் சென்றார்.
அவர்கள் அங்கு சென்றபோது முழு வீச்சில் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதை கண்டனர். உடனே திருமண ஏற்பாடுகளை நிறுத்தும்படி போலீஸார் கேட்டுக்கொண்டனர். ஆனால் சில குடும்ப உறுப்பினர்கள் தலையிட்டு திருமணம் நடக்க அனுமதிக்க அதிகாரிகளை வற்புறுத்த முயன்றனர். ஆனால் குழந்தை திருமணத்திற்கு துணையாக இருப்பவர்கள் உடனடியாக கைது செய்யப்படலாம் என்று போலீசார் எச்சரித்தனர்.
எச்சரிக்கையை தொடர்ந்து பல உறவினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் அலங்காரங்கள் மற்றும் முழுமையடையாத திருமண ஏற்பாடுகளை விட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். இதையடுத்து திருமணம் ரத்து செய்யப்பட்டது. மாப்பிள்ளை ஊர்வலம் மணமகள் வீட்டிற்கு வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படப்பாணியில் இத்திருமணம் நிறுத்தப்பட்டது.




















