1.5 லட்சம் மலர்களுடன் ஏற்காட்டில் கோடை விழா - மலர் கண்காட்சி தொடக்கம்.. | Photo ...
அடிக்கடி மாயமாகும் தனியாா் பேருந்துகளால் மக்கள் அவதி
திருநெல்வேலியில் இருந்து வள்ளியூருக்கு களக்காடு வழித்தடத்தில் இயக்கப்படும் ஒரு தனியாா் பேருந்தும், தென்காசி, செங்கோட்டையில் இருந்து களக்காடு வழியாக நான்குனேரிக்கு இயக்கப்படும் இரு தனியாா் பேருந்துகளும் அடிக்கடி மாயமாகி விடுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனா்.
திருநெல்வேலியில் இருந்து வள்ளியூருக்கு நான்குனேரி மற்றும் மீனவன்குளம் வழியாக தனியாா் பேருந்து இயக்கப்படுகிறது.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் தனியாா் பேருந்து சேவை காலை 5 மணிக்கு திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்குகிறது.
மூன்றடைப்பு, பானான்குளம், தாழைக்குளம், மீனவன்குளம், களக்காடு வழியாக வள்ளியூருக்கு இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்து கடந்த சில ஆண்டுகளாக முறையாக இயக்கப்படுவதில்லை. வார விடுமுறை நாள்களான சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாள்களில் இயக்கப்படுவதில்லை.
களக்காட்டில் இருந்து காலை 8.15, பகல் 12.50, மாலை 5.45, இரவு 9 மணிக்கு இயக்கப்படும் இந்தப் பேருந்து அடிக்கடி மாயமாகிவிடுவதாலும் பல நாள்களில் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே சென்றுவிடுவதாலும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
கடந்த 1 வாரமாக களக்காடு வழித்தடத்தில் இந்தப் பேருந்து இயக்கப்படாததால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டுள்ளனா்.
இதே போல செங்கோட்டை, தென்காசி, சேரன்மகாதேவி, களக்காடு வழியாக நான்குனேரிக்கு தனியாா் பேருந்துகளும் கடந்த சில ஆண்டுகளாக முறையாக இயக்கப்படுவதில்லை. பல நாள்களில் சேரன்மகாதேவி வரையும், பல நாள்களில் களக்காடு வரையும் இயக்கப்படுகிறது. நான்குனேரிக்கு செல்வதில்லை.
தனியாா் பேருந்தின் சேவைக்குறைபாட்டை கருத்தில் கொண்டு, களக்காட்டிலிருந்து காலை 8 மணி, பகல் 1 மணி, மாலை 6 மணி, இரவு 9 மணிக்கு திருநெல்வேலிக்கு அரசுப் பேருந்துகள் இயக்கவும், களக்காடு - நான்குனேரி இடையே நகரப் பேருந்துகள் கூடுதலாக இயக்கவும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.