DMK - ADMK கூட்டணியா - பின்னணி என்ன? | CM ஆவாரா TVK VIJAY - நாளை நடக்கப்போவது என...
Cricket: கிரிக்கெட் வீரர் அமன்பிரீத் சிங் கில் மரணம்; விராட் கோலி, யுவராஜ் சிங் இரங்கல்!
இந்திய இளையோர் அணி (U-19) மற்றும் பஞ்சாப் மாநில அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் அமன்பிரீத் சிங் கில் (36), சண்டிகரில் காலமானார். புதன்கிழமை அன்று அவர் உயிரிழந்த நிலையில், அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இவரது மறைவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமன்பிரீத் சிங் கில் ஒரு திறமையான வலது கை மிதவேகப் பந்துவீச்சாளராக அறியப்பட்டார். 2006 முதல் 2008 வரை பஞ்சாப் அணிக்காக 6 முதல்தர போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2007-ல் இங்கிலாந்து, மலேசியா மற்றும் இலங்கை நாடுகளுக்குச் சென்ற இந்திய இளையோர் அணியில் இடம்பெற்றிருந்தார். பல ஒருநாள் போட்டிகளிலும், ஒரு மூன்று நாள் "டெஸ்ட்" போட்டியிலும் விளையாடியுள்ளார். 2008-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் சீசனில், பஞ்சாப் கிங்ஸ் (அப்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப்) அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.

அமன்பிரீத் சிங் மரணம் கிரிக்கெட் உலகினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அமன்பிரீத் சிங் இழப்பு குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனது எக்ஸ் பக்கத்தில், ``அமன்பிரீத்தின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் இந்தத் துயரத்தைத் தாங்கும் வலிமையை அந்த இறைவன் வழங்கட்டும்," எனப் பதிவிட்டுள்ளார்.
அமன்பிரீத் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் போது, பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் கைகளில் கருப்பு நிறப் பட்டை அணிந்து விளையாடினர்.
யுவராஜ் சிங்,``அமன்பிரீத் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட மற்றும் அடக்கமான வீரர். கிரிக்கெட் மீது அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவரின் இழப்புக்கு வருந்துகிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் (PCA) ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. வீரராக மட்டுமல்லாமல், பஞ்சாப் மாநில சீனியர் தேர்வுக்குழு உறுப்பினராகவும் அவர் ஆற்றிய பங்களிப்பை சங்கம் பாராட்டியுள்ளது.
மறைந்த அமன்பிரீத் சிங்கின் இறுதிச்சடங்குகள் இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணியளவில் சண்டிகரில் உள்ள மணிமஜ்ரா மயானத்தில் நடைபெற்றது. இதில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
















