மேம்பாலத்தின் அருகே நின்ற காரில் 3 பேரின் சடலம்; கொலையா? தற்கொலையா?
"அன்புமணி அதிகாரத்திற்கு வந்தால்தான் தமிழகத்தில் மது, கஞ்சா ஒழியும்" - சொல்கிறார் சௌமியா
பாமக சார்பில் நடத்தும் தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணக் கூட்டம் தருமபுரியில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி பேசினார்.

"2014 மக்களவைத் தேர்தலில் அன்புமணி போட்டியிட்டபோது வெற்றியை அள்ளித் தந்த தருமபுரி மாவட்டம் எனக்கு கோயில் போன்றது. இந்த மாவட்டத்தின் பெரும்பகுதி வானம் பார்த்த பூமியாக உள்ளது.
இப்பிரச்னைக்குத் தீர்வு ஏற்படுத்த நீர்ப்பாசனத் திட்டங்களை வலியுறுத்தி பாமக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியதால்தான் ஒகேனக்கல் கூட்டக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அத்திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை. அத்திட்டம் மூலம் தருமபுரி மாவட்ட ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கினால் விவசாயம் செழிக்கும்.
தருமபுரி மாவட்டத்தில் ஓராண்டில் ரூ. 1,050 கோடிக்கு மது விற்பனையாகிறது. மதுவின் மூலம் இம்மாவட்ட மக்களின் பணத்தைப் பறிக்கும் அரசு, ரூ. 650 கோடி நிதி ஒதுக்கி ஒகேனக்கல் நீர்த்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த முன் வரவில்லை. இதையெல்லாம் மறைக்கத்தான் தமிழக அரசு, மகளிருக்கு ரூ. 1000 வழங்குகிறது.

டாஸ்மாக் கடைகளும், கஞ்சா கலாசாரமும் பெண்களுக்குப் பெரும் எதிரியாக உள்ளன.
திமுக ஆட்சி 5 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள நிலையில் தருமபுரியில் சிப்காட் கோரிக்கை என்ன ஆனது என்று தெரியவில்லை. ஒரு தொழிற்சாலைகூட இன்றுவரை வரவில்லை, இந்த அரசு ஏராளமான வாக்குறுதிகளை அளித்துவிட்டு எதையுமே செய்யவில்லை.
அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது பல நல்ல திட்டங்களை நாடு முழுவதும் கொண்டு வந்தார். தருமபுரி மாவட்டத்துக்கு அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தார். தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டத்தைக் கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
அவர் அதிகாரத்துக்கு வந்தால்தான் தமிழகத்தில் மது, கஞ்சா ஆகியவை ஒழியும். எனவே வரவிருக்கும் தேர்தலில் அவருக்கு அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கடத்தூரில் நடந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பேசினார்.















