மேம்பாலத்தின் அருகே நின்ற காரில் 3 பேரின் சடலம்; கொலையா? தற்கொலையா?
திருவள்ளூர் மாவட்டம், மேல்பொதட்டூர் தரணி வராகப்பெருமான் திருக்கோயில்: நிலப்பிரச்னை நிச்சயம் தீரும்!
பகவான் விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் வராக அவதாரம் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தது. வராக அவதாரம் எடுத்து பூமியை மறைந்த இரண்யாட்சனை அழித்து பூமியைக் காத்த அந்த அவதார ரூபத்தில் பெருமாளை வழிபடுவது மிகவும் விசேஷம்.
குறிப்பாக நிலப்பிரச்னை உள்ளவர்கள், சொந்த வீடு வாங்க வேண்டுபவர்கள், செல்வமும் செழிப்பும் நிறைந்த வாழ்வை விரும்புபவர்கள் வராகப் பெருமானை வழிபட்டால் வேண்டும் அனைத்தையும் அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அப்படி வேண்டுபவர்களுக்கு அருளும் வராக சுவாமி கோயில் கொண்டிருக்கும் தலமாகத் திகழ்கிறது மேல்பொதட்டூர்பேட்டை.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியிலிருந்து பொதட்டூர்பேட்டை செல்லும் வழியில் உள்ளது மேல்பொதட்டூர். இங்கே, அருள்மிகு பூமிதேவி சமேதராக திருக்கோயில் கொண்டிருக்கிறார், அருள்மிகு தரணி வராக சுவாமி.
இரண்டாம் நரசிம்மராயருக்கு வேட்டையில் பிரியம் அதிகம். ஒருமுறை வேட்டைக்குச் சென்றிருந்தார். வேட்டை மும்முரத்தில், மாலை மயங்கி இருள் படரத் தொடங்கியதை அரசர் கவனிக்கவில்லை. எனவே, அன்று இரவு காட்டிலேயே கூடாரம் அமைத்துக்கொண்டு மன்னரும் பரிவாரங்களும் தங்கினர்.
இயற்கை எழில் சூழ்ந்த காட்டுப் பகுதியில், நறுமண மலர்களின் வாசத்தில் தோய்ந்து வந்த தென்றலின் சுகமான ஸ்பரிசத்தில் லயித்திருந்தார் மன்னர். அப்போது அவரின் பார்வையில் ஒரு காட்சி தென்பட்டது.

வேட்டை நாய் ஒன்று ஒரு முயலைத் துரத்தியது. உயிர்ப்பிழைத்தால் போதும் என்று முயல் அதிவேகமாகப் பாய்ந்தோட, வேட்டை நாயும் வேகமாக முயலைத் துரத்திச் சென்றது. அதைப் பார்த்த மன்னரின் மனதில், என்னதான் நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்துகொள்ள தனது குதிரையில் ஏறி வேகமாகப் பின்தொடர்ந்தார்.
வேட்டைநாயின் வேகத்துக்கு முயலால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஓர் இடத்தில் களைப்புற்று நின்றுவிட்டது. பின்னர் அது என்ன நினைத்ததோ தெரியவில்லை... அருகிலிருந்த புற்றினை மூன்று முறை வலம் வந்தது. பிறகு தனது முழு வலிமையையும் ஒன்று திரட்டி, வேட்டை நாயின் மீது பாய்ந்தது. முயலின் திடீர் ஆவேசத்தைக் கண்டு மிரண்ட வேட்டை நாய், வந்த வழியே ஓடிச் சென்றுவிட்டது.
இந்தக் காட்சியைக் கண்ட மன்னருக்கு வியப்பு தாளவில்லை. முயலின் திடீர் ஆவேசத்துக்குக் காரணம் புரியாமல் திகைத்துப்போனவராகத் தன் குடிலுக்குத் திரும்பினார்.
அன்றிரவு அயர்ந்து உறங்கிய மன்னர், அர்த்த ஜாமத்தில் அதியற்புத கனவு ஒன்றைக் கண்டார். கனவில் மன்னருக்கு வராக மூர்த்தியாகக் காட்சியளித்த பகவான், 'முயல் வலம் வந்த புற்றினை அகற்றி, என்னுடைய திவ்யதரிசனம் காண்பாய்’ என்று கூறினார்.
தன் இஷ்ட தெய்வமான வராகப்பெருமானின் கருணைத்திறம் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்த மன்னர், பொழுது புலர்ந்ததும் காவலர்களின் உதவியுடன் புற்று மண்ணைப் பயபக்தியுடன் அகற்றினார். புற்றைத் தோண்டியதும் அருள்மிகு பூமிதேவியை வாஞ்சையுடன் அணைத்திருக்கும் கோலத்தில், நான்கு திருக்கரங்களுடன் சங்கு சக்கரதாரியாக அர்ச்சா ரூபத்தில் திருக்காட்சி தந்தார் வராகப் பெருமான்.
அர்ச்சாரூபமாகப் பெருமாள் வெளிப்பட்டதை எண்ணிச் சிலிர்த்தார்கள் மன்னனும் மக்களும். வராகப் பெருமானுக்கு, மனமுவந்து மிகப் பிரமாண்டமாக ஒரு திருக்கோயிலை நிர்மாணித்தார் மன்னர்.

இரண்யாட்சனை ஸ்வாமி வதம் செய்த பின்னும் உக்கிரம் குறையாமல் வராகர் இருப்பதைக் கண்ட தேவர்களும் மகரிஷிகளும் சாந்த மூர்த்தியாய் சேவை சாதிக்கவேண்டும் என்று பிரார்த்தித்து, பாரிஜாத மலர்களால் அவரை அர்ச்சித்தனர்.
அவர்களின் பிரார்த்தனைக்கு இறங்கிய வராகப் பெருமான், சாந்த சொரூபனாக, செந்தூரப் பொட்டும், கஸ்தூரித் திலகமும் தரித்து, பூமிதேவித் தாயாரை ஆலிங்கனம் செய்த கோலத்தில், சர்வாலங்கார, சர்வாபரண பூஷிதனாகக் காட்சி அருளினார்.
அன்று தேவர்களுக்கும் மகரிஷிகளுக்கும் அருளிய அதே திருக்கோலத்தில்தான் அர்ச்சா மூர்த்தியாக மேல்பொதட்டூர்பேட்டையிலும் அருளாட்சி செலுத்தி வருகிறார் வராகமூர்த்தி.
இந்தப் பெருமாளைத் தரிசித்தாலே முந்தைய பிறவிகளில் செய்த தீவினைகள் யாவும் விலகி ஓடும் என்கிறார்கள் பக்தர்கள். தொடர்ந்து 11 சனிக்கிழமைகள் இந்தத் தலத்துக்குச் சென்று, நெய் தீபம் ஏற்றி வராக மூர்த்தியை வழிபட்டு வந்தால், பூமி தொடர்புடைய பிரச்னைகள் நீங்கும், சனி தசை மற்றும் சனி தோஷங்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும், திருமணத் தடைகள் விலகும் என்பது நம்பிக்கை.

பௌர்ணமியன்று சத்யநாராயண பூஜையும் திருவிளக்கு பூஜையும் நடைபெறுகின்றன. மேலும் அவ்வப்போது ஸ்ரீசுதர்சன ஹோமம், ஸ்ரீலட்சுமி ஹோமம், திருக்கல்யாண உற்சவம் ஆகியனவும் நடைபெறுகின்றன.
மேலும், குடும்பத்துடன் சென்று அருள்மிகு தரணி வராகரைத் தரிசித்து வழிபட்டு வந்தால், இல்லம் செழிக்கும்; உங்கள் சந்ததியின் எதிர்காலம் சிறக்கும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.




















