'கெத்து' சூர்யா; சுவாரஸ்யம் கூட்டிய அமெரிக்கா! - முதல் போட்டியை எப்படி வென்றது இ...
கோவை மாவட்டம் மருதமலை மருதாசலமூர்த்தி கோயில்: பிரச்னைகள் தீர்க்கும் பாம்பாட்டிச் சித்தர் விபூதி
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இணையான பெருமையையும் மகிமையையும் உடைய தலம் மருதமலை. கோயம்புத்தூரில் இருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மருதமலை.
அருணகிரிநாதரால் பாடல் பெற்ற இந்தத் தலத்தின் சிறப்புகளை அறிந்துகொள்வோம் வாருங்கள். சுமார் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலை கொங்கு வேட்டுவ மன்னர்கள் பராமரித்து வந்தனர்.
மருத மரங்கள் அடர்ந்த மலை என்பதால் இதற்கு மருதமலை என்று சுவாமிக்கு மருதாசல மூர்த்தி என்று திருநாமம் உண்டானது. இந்தத் தலத்தின் தலபுராணம் சித்தர்களோடு தொடர்புடையது.

நாகரத்தினப் பாம்பைத் தேடி மருதமலைக்கு வந்த பாம்பு வைத்தியர் ஒருவருக்கு சட்டை முனிவர் காட்சி கொடுத்தார். பூமியில் ஊர்ந்து திரியும் பாம்புகளைக் கண்டுபிடிப்பதை விட உடலுக்குள் இருக்கும் பாம்பைக் கண்டறிந்து அதை மேலெழுப்புவதே பிறவிப்பயன் என்று உபதேசித்தார்.
இதன் பொருள், உடலில் சுருண்டு கிடக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி சஹஸ்ராரம் எனப்படும் உச்சத்தைத் தொடுவதே முக்தி அடைய வழி என்பதையே மறைபொருளோடு உபதேசம் செய்தார்.
இதைப் புரிந்துகொண்ட வைத்தியர் அன்றிலிருந்து உயிர்களைத் துன்புறுத்தாமல் முருகனை வணங்கித் தியானம் செய்தார். அவரின் கடும் தவத்தைக் கண்ட முருகப்பெருமான் அவருக்கு வள்ளி தேவசேனாவுடன் காட்சி கொடுத்து ஞானோப தேசமும் செய்தார்.
அன்று முதல் அந்த வைத்தியர் பாம்பாட்டிச் சித்தராகப் புகழ் பெற்றார். அப்படி பாம்பாட்டிச் சித்தருக்கு முருகப்பெருமான் காட்சி கொடுத்த தலமே தற்போது இருக்கும் மருதமலைத் திருக்கோயில்.
மலையின் அடிவாரத்தில், 'தான்தோன்றி விநாயகர் சந்நிதி' அமைந்துள்ளது. இந்த விநாயகர் சுயம்பு. யானை முகம் மட்டுமே கொண்ட இவருக்கு உடல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல், மலைமேல் அமர்ந்தருளும் முருகனை நோக்கித் தும்பிக்கையைத் தூக்கியபடி காட்சி தருவது தனிச் சிறப்பு.
முருகனுக்கு உகந்த நாளான கிருத்திகை, சஷ்டி போன்ற விசேஷ நாள்களில் தான்தோன்றி விநாயகருக்கும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுவதால், இவர் ‘தம்பிக்கு உகந்த விநாயகர்’ என்ற தனிச்சிறப்பையும் பெற்றுள்ளார்.
தொடர்ந்து பயணித்தால் இடும்பன் சந்நிதியை அடையலாம். அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை என ஐந்து மரங்களுக்கடியில் பஞ்ச விருட்ச விநாயகரும் அருள்பாலிக்கிறார். அவருக்கு அருகிலேயே கையில் வேலுடன் மயில் மீது அமர்ந்தபடி காட்சித் தருகிறார் முருகன்.
நடைப் பயணமாக மலையேறிச் செல்லும் பக்தர்கள் பஞ்ச விருட்ச விநாயகரைத் தாண்டிதான் மருதாச்சலமூர்த்தி சந்நிதிக்குச் செல்ல வேண்டும்.

இங்கு ஆதிமூலஸ்தானத்தில் அருள்பாலிக்கும் முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய மூவரும் சுயம்புவாகத் தோன்றியவர்கள் என்கிறார்கள். இந்த ஆதிமூர்த்திக்கு பூஜைகள் செய்த பிறகே கருவறையில் இருக்கும் பிரதான முருகனுக்குப் பூஜைகள் நடக்கின்றன.
சிவனுக்கும் அம்பாளுக்கும் நடுவில் முருகன் இருந்தால் அதை சோமாஸ்கந்த தலம் என்பார்கள். இங்கும் வெளிமண்டபத்தில் வலதுபுறத்தில் பட்டீஸ்வரர் சந்நிதியும், இடதுபுறத்தில் மரகதாம்பிகை சந்நிதியும் அமைந்திருக்க, நடுவில் உள்ள கருவறையில் வலது கையில் தண்டத்தை வைத்துக்கொண்டு இடுப்பில் இடது கையை வைத்தபடி காட்சி தருகிறார் தண்டாயுதபாணி.
பழநி முருகனைப் போலவே காட்சியளிக்கும் இந்த முருகனை, முருகனின் அருள்பெற்ற பாம்பாட்டிச் சித்தர்தான் வடித்தார் என்று சொல்லப்படுகிறது. அர்த்தஜாம பூஜையில் மட்டுமே மூலவரை தண்டாயுதபாணியாகத் தரிசிக்க முடியும்.
கருவறைக்கு வெளியில் உள்ள மண்டபத்தில் நவகிரக சந்நிதி அமைந்துள்ளது. தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோரும் தனித்தனிச் சந்நிதிகளில் அருள்கிறார்கள்.
மலையில் உள்ள ஒரு குகைக்குள் சந்நிதி கொண்டிருக்கும் பாம்பாட்டிச் சித்தர். வலது கையில் மகுடியோடும் இடது கையில் தடியோடும் காட்சி தருகிறார். அவருக்கு அருகிலேயே சிவலிங்கம் இருக்கிறது. இந்தச் சந்நிதியில் உள்ள ஒரு பாறையில் நாகத்தின் வடிவம் தெரிகிறது.
பாறையில் தெரியும் அந்த வடிவத்திலேயே பாம்பாட்டிச் சித்தருக்கு முருகன் காட்சி தந்தார் என்று நம்பப்படுகிறது. அதனால், இந்த நாகத்தை முருகனாகவே பாவித்து வழிபடுகிறார்கள். முருகனுக்குப் பூஜைகள் முடிந்ததும் பாம்பாட்டிச் சித்தருக்கும் பூஜைகள் செய்யப்படுகின்றன.
இங்கு பாம்பாட்டிச் சித்தர் இன்றும் முருகனுக்குப் பூஜை செய்து கொண்டிருக்கிறார் என்பது ஐதிகம். சித்தர் சந்நிதியில் இரவு நேரத்தில் பாத்திரத்தில் பாலை ஊற்றி வைத்துவிட்டால், மறுநாள் காலையில் பால் குறைந்திருக்குமாம். பாம்பாட்டிச் சித்தர் இந்தப் பாலைக் கொண்டு முருகனுக்கு அபிஷேகம் நடத்துவதாக நம்பப்படுகிறது.

மனநிம்மதியைத் தரும் மகத்தான தலம் மருதமலை. எந்தவிதமான மனச் சிக்கலாக இருந்தாலும் மருதமலை முருகப்பெருமானைத் தரிசித்தால், அது உடனே பறந்துபோகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருமண தோஷம் உள்ளவர்கள், இங்குள்ள மரத்தில் மஞ்சள் கயிறும், புத்திர தோஷம் உள்ளவர்கள் தொட்டிலும் கட்டி வேண்டிக்கொண்டால், தோஷங்கள் விலகி நல்லது நடக்குமாம். நாக தோஷம் உள்ளவர்களும், விஷக்கடிக்கு ஆளானவர்களும் இங்கு வந்து பாம்பாட்டிச் சித்தரின் அலங்காரத்துக்குப் பயன்படுத்திய விபூதியை நீரில் கலக்கிப் பருகினால், பிரச்னைகள் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
வேண்டுதல் நிறைவேறிவிட்டால், பாம்பாட்டிச் சித்தரின் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி, வெண்ணிற மலர் சூட்டி, இனிப்பான உணவு வகைகளை நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள்.
மருதமலை முருகப்பெருமானுக்கு வைகாசி விசாகத்தன்று பால் அபிஷேகமும், தைப்பூசத்தையொட்டி பத்து நாள்கள் பிரம்மோற்சவமும் சிறப்பாக நடைபெறும். பூசத்தன்று காலையில் திருக்கல்யாணமும், மாலையில் தேர்த்திருவிழாவும் நடைபெறும்.




















