நிதி அமைச்சர் செங்கோட்டையன்; பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் - யார் யாருக்கு எந்த...
“அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்த முதல்வர்” - பதவியேற்பு விழா எப்போது?
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு அமைச்சரவை விரிவாக்கம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முதல்வருடன் அமைச்சர்களாக பதவியேற்ற ஒன்பது பேருக்குமான துறைகள் ஒதிக்கீடும் அப்போது அறிவிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.
தலைமை செயலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் நம்மிடம் பேசுகையில், “தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்று ஒரு வாரம் முடிவடைய போகிறது. அவருடன் ஒன்பது பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அவர்களுக்கான துறைகளும் இதுவரை ஒதுக்கவில்லை. முக்கிய துறைகளுக்கு மட்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றம் செய்துள்ளனர். அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடும் இதுவரை நடக்காமல் இருப்பதால் ,துறைவாரியான அதிகாரிகள் மாற்றமும் இன்னும் முழு அளவில் நடந்தேறவில்லை.

கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் ஆணையத்தின் கட்டுபாட்டில் அரசு அதிகாரிகள் செயல்பட்டு வந்தார்கள். தேர்தல் விதிமுறைகளும் இப்போது இல்லாமல் இருப்பதால், அதிகாரிகள் துறையின் அமைச்சர்கள் உத்தரவு இல்லாமல் எந்த கோப்புகளையும் நகர்த்த முடியவில்லை. மற்றொருபுறம், திட்டங்களை செயல்படுத்துவதிலும் சிக்கல் உள்ளது. எல்லாவற்றிற்கும் முதல்வரின் அலுவலகத்தையே அதிகாரிகள் நாட வேண்டியுள்ளது. இந்த சிக்கலை தீர்க்க அமைச்சர்கள் நியமனத்தை விரைவாக நடத்தவேண்டுமென அதிகாரிகள் முதல்வரிடம் சொல்லிவந்தனர்.
ஏற்கெனவே அ.தி.மு.கவிலிருந்து பிரிந்து தனி அணியாக உள்ளவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்கும் திட்டம் இருந்தது. ஆனால், அவர்கள் மீது வழக்கு இருப்பதும், அ.தி.மு.க வில் உண்மையான அணி யார்? என்பதில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வருவதாலும், அ.தி.மு.க-வை இப்போது அமைச்சரவையில் சேர்க்க வேண்டாம் என முதல்வர் அலுவலகம் முடிவெடுத்துள்ளது.
அதற்கு பதிலாக ஏற்கெனவே சொன்னது போல காங்கிரஸ் கட்சியின் இரண்டு பேருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளார்கள்.
இதற்கான பட்டியலை முதல்வர் இறுதி செய்துவிட்டார். இதுகுறித்து ஆளுநரிடம் பேசுவதற்காகவே முதல்வரின் முதன்மை செயலாளர் செந்தில் குமார், ஆளுநர் அர்லேக்கரை இன்று காலை சந்தித்தார்.
தமிழக அமைச்சரவை நியமனத்தை எப்போது வைத்துக் கொள்வது என ஆலோசனை நடந்தது. நாளை கேரள முதல்வர் பதிவியேற்பு விழா நடக்க இருப்பதால், அதை முடித்துவிட்டு வைக்கலாம் என ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் அமைச்சர்கள் குறித்த அறிவிப்பை எப்போது வெளியிடலாம், என முதல்வரிடம் பேசிவிட்டு வருவதாக செயலாளர் செந்தில் குமார் சொல்லியிருக்கிறார்”என்கிறார்கள்.
த.வெ.க வட்டாரத்தில் பேசிய போது,“ முதல்வருக்கு ராசியான எண் 10. அந்த எண்ணிற்கு தகுந்தது போலவே, அமைச்சவையும் இருக்கும். தற்போது பதவியேற்ற ஒன்பது பேரை தவிற, மேலும் பதினைந்து பேர் அமைச்சர்களாக பதிவியேற்பார்கள்.
கூடுதல் இடங்களை பிறகு நிரப்புவார்கள். மாவட்டத்திற்கு ஒருவர் அமைச்சர் என்கிற கணக்கில் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. சேலம் பார்த்திபன், புதுக்கோட்டை பர்வேஸ், தாஹிரா, மதுரையில் ஒருவர், துாத்துக்குடி ஸ்ரீநாத் உள்ளிட்டவர்கள் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளது. கோவையில் பெண் ஒருவருக்கு அமைச்சராகும் வாய்ப்புள்ளது. இன்று இரவு இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம். ஆளுநர் முடிவை பொறுத்தே அறிவிப்பு வெளியாக உள்ளது ” என்கிறார்கள்.














