TNPL 2026 : கோவை கிங்ஸின் கெத்து பவுலிங் - பேட்டிங்கில் கோட்டை விட்ட சேப்பாக் சூ...
`அம்பேத்கர் பெயரில் நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட திட்டம்; ஆனால்.!'- அரசுக்கு பா.ரஞ்சித் கோரிக்கை
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்ற பாரதிதாசன் என்ற மாணவர், கல்வி உதவித்தொகை கிடைக்காமல் தாம் மிகவும் சிரமப்படுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில், ``நிலுவையில் உள்ள கல்வி உதவித்தொகை மற்றும் ஆராய்ச்சி நிதிகள் விரைவில் விடுவிக்கப்படாவிட்டால், எனது ஆராய்ச்சிப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம். இது குறித்து சமூகநீதித் துறை அமைச்சர், உயர்கல்வித் துறை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் முறைப்படி தெரிவித்தும் எனக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை.
பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் ஆராய்ச்சி படிப்புகளுக்கான வாய்ப்பை மட்டும் இந்த அரசு நிறுத்துகிறது." எனக் குற்றம்சாட்டி இருந்தார். இந்த வீடியோ வைரலானது. இந்த நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் தன் எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில், ``தமிழ்நாடு அரசு வெளிநாடுகளில் உயர்கல்வி படிப்பதற்காக ‘அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை’ பெயரில் நிதியுதவி வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 385 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
2026–2027ஆம் ஆண்டில் 375 மாணவர்கள் தகுதி பெற்றுள்ள நிலையில், அவர்களுக்கு நிதியுதவி கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 316 பேர் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெற்றுள்ளனர். தமிழ்நாடு அரசிடமிருந்து நிதியுதவி கடிதங்களைப் பெற்று, விசா பெறுவதற்கான அதிகாரப்பூர்வ நடைமுறைகளை மேற்கொள்ளும்போதுதான், இங்கிலாந்தின் பல பல்கலைக்கழகங்கள் தமிழ்நாடு அரசின் நிதியுதவி கடிதத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்காமல், CAS எனப்படும் Confirmation of Acceptance for Studies சான்றிதழை நிலுவையில் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. ஒரு மாணவருக்கு விசாவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், Academic Technology Approval Scheme (ATAS) சான்றிதழ் பெற ஏழு முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும் நிலையில், ஒட்டுமொத்த நடைமுறைகளும் தாமதமாக முன்னெடுக்கப்பட்டதே இத்தகைய குழப்பங்களுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. இதுமட்டுமின்றி, கடந்த காலங்களில் நிதியுதவி பெற்ற மாணவர்களுக்கும் உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டிய நிதி வழங்கப்படாததால், வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.
பாபாசாகேப் அம்பேத்கர் பெயரில் நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இத்திட்டம், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல், பணிகளைச் சரியான காலத்திற்குள் முடிக்காமல் செயல்படுத்தப்படும்போது, அதன் நோக்கம் சிதைந்து, பெயரளவிலான திட்டமாக மாறும் அபாயம் உள்ளது. ஆகையால், தமிழக வெற்றிக் கழக அரசு கீழ்கண்ட பரிந்துரைகளை ஏற்று, இப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வை ஏற்படுத்த வேண்டும்.
1. விண்ணப்ப நடைமுறையானது ஜனவரி மாதத்தில் தொடங்கி, பிப்ரவரி மாதத்திற்குள் முழுமையாக முடிக்கப்பட்டிருக்க வேண்டும். நடப்பாண்டில் இப்பணி தாமதமாகத் தொடங்கி, ஜூலை இறுதியில்தான் முடிவடைந்துள்ளது. எதிர்வரும் ஆண்டு முதல் இந்தத் தாமதம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

2. தமிழக அரசின் நிதியுதவி சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற வேண்டும். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தமிழக அரசின் நிதியுதவியை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் வகையில், தேவையான ஒப்பந்தம் அல்லது தெளிவான அங்கீகாரம் பெற வேண்டும்.
3. மாணவர்கள் விசா, பல்கலைக்கழகங்களுக்கு செலுத்த வேண்டிய வைப்புத்தொகை, தங்குமிடம், பயணச் செலவு போன்றவற்றுக்கு தங்களது சொந்தப் பணத்தை முன்கூட்டியே செலவழிக்க வேண்டிய நிலை தவிர்க்கப்பட வேண்டும். Scholarship sanction மற்றும் payment schedule ஆகியவை முன்கூட்டியே தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்.
4. அரசின் தாமதத்தால் மாணவர்கள் தங்களுக்குக் கிடைத்த கல்வி வாய்ப்புகளை இழக்க நேரிட்டால், அவர்கள் மீண்டும் ஆரம்பத்திலிருந்து விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடாது.
5. மகாராஷ்டிரா மாநிலம் பல நிலைகளில் இந்த உதவித்தொகைத் திட்டத்தில் முன்னோடியாகத் திகழ்கிறது. தமிழ்நாடு அரசும் வெளிநாட்டுக் கல்வி உதவித்தொகையில் கல்விக் கட்டணம் மட்டுமின்றி, வாழ்க்கைச் செலவு, மருத்துவக் காப்பீடு, பயணச் செலவு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய செலவுகளையும் உள்ளடக்கிய முழுமையான நிதியுதவித் தொகுப்பை வழங்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு, அடுத்த பட்ஜெட்டில் அதற்கான நிதியுதவி உயர்த்தி அறிவிக்கப்பட வேண்டும்.
6. கடந்த ஆண்டுகளில் நிதியுதவிக்குத் தேர்வு செய்யப்பட்டும், உரிய நிதி வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள மாணவர்களின் பட்டியலைத் தயாரித்து, அவர்களுக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள குழப்பங்கள் இனி எந்த ஆண்டிலும் ஏற்படாத வகையில், நடப்பாண்டு பிரச்சனைகளை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும்.
நிதியுதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட பின்னரும் பல்வேறு காரணங்களால் அதன் முழுப் பயனைப் பெற முடியாமல் மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படும் மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது." எனத் தெரிவித்துள்ளார்.













