அரசுப் பேருந்துகளில் பயணித்த 13 பேருக்கு ரூ.50,000 ரொக்க பரிசு
அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்த 13 பயணிகளுக்கு ரூ.50,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தின் மூலம், அனைத்து நாள்களிலும் பயணிகள் தங்கள் பயணத்தை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், அரசுப் பேருந்துகளில் பயணித்து தோ்ந்தெடுக்கப்படும் பயணிகளுக்கு மாதந்தோறும் ரொக்கப் பரிசு மற்றும் பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஏப்ரல் மாதத்துக்கான 13 பயணிகளை மாநகா் போக்குவரத்துக் கழகம் (சென்னை) மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு மேலாண் இயக்குநா் த.பிரபுசங்கா், கணினி குலுக்கல் முறையில் வெள்ளிக்கிழமை தோ்வு செய்தாா்.
அதன்படி தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் 3 பயணிகளுக்கு தலா ரூ.10,000, மீதமுள்ள 10 பேருக்கு தலா ரூ.2,000 என மொத்தம் ரூ.50,000 ரொக்கப் பரிசாக வழங்கப்படவுள்ளது. தோ்ந்தெடுக்கப்பட்டவா்களுக்கான பரிசுத் தொகை விரைவில் வழங்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.