`அந்த வலையில் மாட்டிக்கொண்டேன்...'- நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு இளம்பெண் ...
ஆந்திரா: `நீண்டகாலத் திட்டமிடல் இல்லாமல் வெறுமனே...' - விவாதத்துக்குள்ளாகும் அரசின் திட்டம்!
மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டபோது, தென் மாநிலங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதால், பெரும் சிக்கலுக்கு உள்ளாகின. முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இந்த தொகுதி மறு சீரமைப்புக்கு கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார். அதே நேரம், மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஆந்திரா, தமிழ்நாடு அரசுகளிடமிருந்து எழுந்தது. இந்த நிலையில், ஆந்திரப் பிரதேசத்தில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, 'ஒரு குடும்பத்தில் மூன்றாவது குழந்தை பிறந்தால் அரசு சார்பில் ரூ.30,000 ரொக்க ஊக்கத்தொகையும், நான்காவது குழந்தை பிறந்தால் ரூ.40,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

இந்தத் தொகை எந்தவொரு இடைத்தரகர்களின் தலையீடும் இன்றி, நேரடியாகத் தாயின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படும். இந்த ரொக்க ஊக்கத்தொகை மட்டுமன்றி, பிறக்கும் குழந்தைகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு பராமரிப்பு, ஊட்டச்சத்து மற்றும் கல்வி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சிறப்புத் தொகுப்புத் திட்டம் (Special Package) தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையாகச் செயல்பாட்டிற்குக் கொண்டு வரும் வகையில், பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.' என அறிவித்தார்.
ஆந்திரா அரசின் இந்த அறிவிப்பு குழந்தைகள் நல மருத்துவர்களின் கண்டனத்தை உருவாக்கியிருக்கிறது. பிரபல குழந்தை நல மருத்துவர் டாக்டர் சிவ ரஞ்சனி சந்தோஷ் இம்முடிவை வெளிப்படையாக விமர்சித்ததுடன், இது குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் மீது ஏற்படுத்தும் நீண்டகாலத் தாக்கங்கள் குறித்தும் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ``மூன்றாவது குழந்தை பிறப்பிற்கு ரூ.30,000-ம், நான்காவது குழந்தை பிறப்பிற்கு ரூ. 40,000-ம் வழங்கப்படும் என்ற ஆந்திரப் பிரதேச அரசின் அறிவிப்பு, ஒரு குழந்தை நல மருத்துவராகவும், ஒரு தாயாகவும் எனக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. எனது கருத்துக்களை மக்கள் அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம். ஆனால், என் கவலை முழுமையாகக் குழந்தைகளின் நலன் சார்ந்ததே.

குழந்தைகளின் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, ஒருமுறை வழங்கப்படும் இத்தகைய நிதி ஊக்கத்தொகைகள் போதுமானதா? இந்தத் தொகை சில நாட்களிலேயே செலவாகிவிடும். ஆனால் குழந்தைகளை வளர்ப்பதற்குப் பல ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியான நிதி, உணர்வுபூர்வமான மற்றும் உடல்ரீதியான ஆதரவு தேவைப்படும். ஒரே நேரத்தில் பல குழந்தைகளை வளர்க்கும்போது, அவர்களுக்குத் தேவையான முறையான ஊட்டச்சத்து, மருத்துவ வசதி மற்றும் கல்வி ஆகியவற்றை எல்லாப் பெற்றோர்களாலும் சரியாக வழங்க முடியுமா?
ஒவ்வொரு குழந்தையையும் சமமாக வளர்த்தெடுக்கப் போதுமான நேரம், கவனம், அதற்கேற்றப் பாதுகாப்பான சூழல் அனைத்துக் குடும்பங்களுக்கும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறோமா? என்னைப் பொருத்தவரை ஒவ்வொரு குழந்தையும் சரியான பராமரிப்பும், பெற்றோர்களின் இணக்கமான அன்பும் பெற வேண்டும். நீண்டகாலத் திட்டமிடல் இல்லாமல் குடும்பத்தின் உறுப்பினர்களை மட்டும் அதிகரிப்பது பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் சிரமங்களை உருவாக்கக்கூடும். குழந்தைப் பெற்றெடுக்கும் தாயின் உடல்நிலை, அவரின் மனநிலையையும், அவரின் ஆரோக்கியமும், சுதந்திரமும் இங்கு கூடுதல் கவனத்துடன் ஆராயவேண்டியிருக்கிறது.

மேலும், இது மற்ற மாநிலங்களிலும் ஒரு நடைமுறையாக மாறிவிடக் கூடாது என்ற பெரும் அச்சம் எனக்கு இருக்கிறது. நான் கூறியிருக்கும் பிரச்னைகளை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல், குழந்தைகளின் நலன், அவர்களின் பெற்றோர்களின் நலன் சார்ந்த கண்ணோட்டத்திலேயே அணுக வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.














