மதுரை : 'ஆதார் அட்டையைக் காண்பித்து மது வாங்கிச் சென்ற மதுப்பிரியர்கள்' – காரணம்...
ஆய்வு மேற்கொள்ளப்படாமல் அழிவின் விளிம்பிலிருக்கும் வேம்பார் கடற்கரை நகரம்!
வங்கக் கடலின் தென் எல்லையில் அமைந்திருக்கூடிய தூத்துக்குடி மாவட்டத்தின் வேம்பார் கடற்கரைப் பகுதி, பல ஆண்டுகளாக கடலை மட்டுமல்லாது தன்னுள் புதையுண்டிருக்கும் நீண்ட நெடிய வரலாற்றை, தன் பழைமையின் சுவடு அழியாமல் பாதுகாத்துக்கொண்டிருக்கிறது இந்தக் கடற்கரை நகரம்.
“பாண்டிய நாடு முத்துடைத்து” என்னும் ஔவையின் வாக்கிற்கு இணங்க, முத்து வணிகத்தில் மிகுந்த செழுமை கொண்ட பகுதியாக வேம்பார் விளங்கியுள்ளது. முற்காலத்தில் வேப்ப மரங்கள் நிறைந்த சோலைகளும் ஆற்றின் சங்கமமும் சேர்ந்த பகுதி என்பதால் “வேம்பாறு” என்னும் சொல் மருவி “வேம்பார்” ஆனது குறிப்பிடத்தக்கது.
வேம்பார் முதல் உவரி வரை பரந்திருந்த கடற்கரை பகுதிகளில் கிடைத்த முத்துகளே ஒருகாலத்தில் பாண்டிய மன்னர்களின் பொருளாதார வளத்திற்கு முக்கிய ஆதாரமாக இருந்ததாக வரலாறு கூறுகிறது.








சவேரியாரும் வேம்பாரின் சமய வரலாறும்:
ஏசுநாதரின் போதனைகளை அவரது திருத்தூதர்களில் ஒருவரான சவேரியார் 1542–44ஆம் ஆண்டுகளில் வேம்பார் மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் போதித்ததும் இந்த ஊரின் முக்கிய வரலாற்றுச் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.
தமிழின் முதல் அச்சு நூலுடன் இணைந்த வேம்பார்:
தமிழில் அச்சிடப்பட்ட முதல் நூலான “தம்பிரான் வணக்கம்” நூலை அச்சிட்ட ஹென்ரி என்றிகஸ், வேம்பாரில் பரிசுத்த ஆவி ஆலய பங்கு தந்தையாக பணியாற்றியபோது இங்கு தமிழ் கற்றுக்கொண்டதாக, அவர் 31.10.1558 அன்று ரோம் நகருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ரோமன் பாணியில் கட்டப்பட்ட பழைமையான ஆலயம்
வேம்பாரில் கீற்று கொட்டகையில் இயங்கி வந்த கிறிஸ்துவ ஆலயத்தை ஹென்ரி என்றிகஸ் கற்கோயிலாக மாற்றிக் கட்டினார். பொ.ஆ.பி. 1600ஆம் ஆண்டில் ரோம் நகர தேவாலயத்திற்கு நிகராக கட்டப்பட்ட இந்த அழகிய ஆலயம் பின்னர் டச்சுக்காரர்களின் படையெடுப்பால் இடிக்கப்பட்டது.
மீண்டும் 1907ஆம் ஆண்டு புதிய ஆலயமாக கட்டப்பட்ட இது, 1915ஆம் ஆண்டில் இன்றுள்ள பிரமாண்ட ஆலயமாக உருவானது. ஜனவரி மாதத்தில் நடைபெறும் பண்டிகையில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 10,000 கத்தோலிக்கர்கள் கலந்து கொள்கின்றனர்.
வெளிநாட்டு வணிகத்தின் அடையாளங்கள்:
அரேபியர்கள், டச்சுக்காரர்கள், போர்த்துகீசியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் முக்கிய வணிக தளமாக வேம்பார் இருந்ததால், அவர்களின் பழைமையான நாணயங்கள் இன்றும் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும் பழைமையான மாடமாளிகை வீடுகளும் இங்கு காணப்படுகின்றன. இலங்கை கொழும்பில் வாழ்ந்த பெரும் வணிகர்களின் பூர்வீகமாகவும் இந்த ஊர் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தூய தமிழில் அமைந்த பழைமையான கல்வெட்டுகள்:
1602ஆம் ஆண்டில் செதுக்கப்பட்ட கல்லறைக் கல்வெட்டுகள் தூய தமிழில் அமைந்துள்ளன என்பது வியப்பூட்டும் வரலாற்றுச் சான்றாகப் பார்க்கப்படுகிறது.
அந்தக் காலத்தில் இது போன்ற கல்லறைக் கல்வெட்டுகளை பெரும்பாலும் போர்த்துகீசியர்களே அமைத்திருந்த நிலையில், தூய தமிழில் உருவாக்கப்பட்ட தமிழகத்தின் பழைமையான கல்வெட்டுகளில் இதுவும் முதன்மையானதாக கருதப்படுகிறது.
மர்மம் நிறைந்த சப்பமடம்:
இங்குள்ள சப்பமடம் பகுதி பல வரலாற்றுச் சுவடுகளை தன்னுள் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் “சர்ப்பமடம்” என்று அழைக்கப்பட்ட இந்த இடம், பாம்புகள் அதிகம் காணப்பட்டதால் அந்தப் பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.
பின்னர் “சப்பரம்” என்ற சொல்லிலிருந்து “சப்பமடம்” என மருவியதாகவும் கருத்துகள் உள்ளன.
ஆனால், அங்குள்ள சிற்பங்கள் மற்றும் கட்டட அமைப்புகளை ஆய்வு செய்த வரலாற்று ஆய்வாளர்கள், இது திருச்செந்தூர் செல்லும் பயணிகளுக்காக பாண்டியர் காலத்தில் அமைக்கப்பட்ட சத்திரம் எனக் கருதுகின்றனர். மேலும் இதனை “சுந்தரதோழார் சத்திரம்” என்றும் குறிப்பிடுகின்றனர்.

ஆய்வின்றி அழியும் வரலாற்றுச் சின்னங்கள்:
முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததே இவ்வாறான குழப்பங்களுக்கு காரணம் என வரலாற்று ஆர்வலர் கிறிஸ்து ஞான வள்ளுவன் குறிப்பிடுகிறார். மேலும், சரியான பாதுகாப்பு இல்லாததால் இந்த வரலாற்றுச் சின்னங்கள் இன்று அழிவின் விளிம்பில் இருப்பதையும் அவர் வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறார்.
தம்பி ஐயா பெர்னாந்து, கிறிஸ்து ஞான வள்ளுவன் போன்ற பல வரலாற்று ஆர்வலர்கள் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டிருந்தாலும், இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இன்னும் பாதுகாப்பின்றி இருப்பது, நம் பெருமைமிக்க வரலாற்றை நாமே மெதுவாக அழித்து வருவதற்குச் சமமாகும்.
நம் முன்னோர்களின் அடையாளங்களையும் வரலாற்றுச் சுவடுகளையும் அழிவின் விளிம்பிலிருந்து நாம் பாதுகாக்கவேண்டியது அவசியம்.
- தர்ஷினி.சி




















