"அப்பா, என்னைக் காப்பாத்துங்க; இவங்க என்ன கொன்றுவாங்க" - குழந்தை பெற்ற பெண் மருத...
`இந்த 12 காட்சிகளில் ஒன்றை கனவில் கண்டால், விரைவில் அதிர்ஷ்டம் வரும்!' - ஸ்வப்ன சாஸ்திர ரகசியங்கள்
கனவுகள் எப்போதும் சுவாரஸ்யமானவை. நிஜத்தில் நடக்காத சில விஷயங்கள், கனவில் நடந்து நம்மை வியப்பில் ஆழ்த்தும். அதேநேரம், சில எதிர்மறையான காட்சிகள் பயத்துக்கும் மன நெருடலுக்கும் ஆளாக்கிவிடும். இதுபற்றி ஸ்வப்ன சாஸ்திரம் வியப்பூட்டும் தகவல்களைச் சொல்கிறது!

கனவுகளும் காரணங்களும்... சுவாரஸ்ய தகவல்கள்
அமுக்கப்பட்ட ஆசைகள் கனவுகளாகப் பரிணமிக்கும் என்றும், ஆழ்மனத்தில் புதைந்திருக்கும் எண்ணங்களின் வாசனைகளே கனவுகளுக்குக் காரணம் என்றும் பல்வேறு கருத்துக்கள் உண்டு.
உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் எனும் மூன்று தாதுக்களின் மாறுபாட்டால் கனவுகள் ஏற்படுகின்றன என்பது ஆயுர்வேதத்தின் விளக்கம். கிரகங்களின் தசாபுக்தி காலங்கள் பாதிப்பு தரும் விதம் அமையும் நிலையில், அதற்கேற்ற கனவுகள் அமையும் என்பது ஜோதிட நம்பிக்கை.
மனம், ‘புரிதத்’ என்ற நாடியில் மறையும்போது உறக்கம் நிகழ்கிறது. புலன்கள் யாவும் அடித்துப் போட்டது போல் செயலற்று இருக்கும்போது மனம் விழித்துக் கொண்டு, தான் சேமித்த எண்ணங்களை அசைபோடுகிறது. அந்த நிகழ்வுகள் மனத்திரையில் பளிச்சிடுகின்றன... அவையே நிஜத்தில் நிகழ்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன என்று ஸ்வப்ன சாஸ்திர வல்லுநர்கள் விளக்குவர்.
கனவுகள் சிலருக்குச் சுகமானவையாக அமையும். சிலருக்கோ தூக்கத்தைக் கெடுத்துவிடும். ஆனால் வியப்பிலும் வியப்பாக... `பயம் காட்டும் சில கனவுகள், நல்ல விளைவுகளுக்கான அறிகுறிகளே’ என்கிறது ஸ்வப்ன சாஸ்திரம். அதேபோல், விரைவில் அதிர்ஷ்டம் மற்றும் சுபகாரியங்கள் வரப்போவதன் அறிகுறிகளா கவும் சில கனவுக் காட்சிகளைச் சுட்டிக்காட்டுகிறது இந்த சாஸ்திரம்.

அதிர்ஷ்டம் தரும் கனவுகள்
1. கனவில் கடலைக் காண்பவர்கள், சிறிது முயற்சி செய்தால் வெளிநாடுகளுக்குப் போவதற்கான வாய்ப்பு எளிதாக ஸித்திக்கும். இல்லையேல், அயல் தேசத்தாருடன் வியாபாரத் தொடர்பு ஏற்பட்டு பெரும் பொருள் ஈட்டுவர். பிற தேச உறவுடைய அலுவலகங்களில் வேலை கிடைக்கும்.
2. கனவில் நகைகளைக் காண்பது நல்ல விஷயம் என்பார்கள். குறிப்பாக கனவில் காதணிகளைக் கண்டால், பொன் நகைகள் பலவும் தனக்கு உரிமையாகும் என்பதை அறிந்து கொள்ளலாம். கை வளையல் அணிந்திருப்பது போல் கனவு காணும் மங்கையர்களின் மணவிழா வெகுவிரைவில் நடைபெறும். மணமா னவர்கள் எனில், அவர்தம் கணவருக்கு வருமானம் அதிகரிக்கும். கைவளையலைக் கண்டெடுத்தாற் போல கனவு கண்டால், எதிர்பாரா வகையில் பெரும் சொத்து வந்து சேரும்.
3. கன்றுக்குட்டியைக் கனவில் கண்டால், செல்வ சேமிப்பு ஏற்படும். மரம் அல்லது பழத்தைக் காண்பது நல்லது. பழத்தை உண்பது போல காணின் நோய்கள் விலகும். தொழில் உயர்வு அடையும். உத்தியோக பதவியும் உயர்வடையும்.
4. கனவில் ஆலமரத்தைக் கண்டால், செய்கின்ற தொழில் மேலும் அபிவிருத்தி அடையும். பொருள் வரவும் சுற்றத்தார் சூழலும் உண்டாகும்.
5. மலர்கள் பூத்துக் குலுங்குவதுபோன்றும், ஒருவர் வீணையை இசைக்க, நாம் கேட்டு ரசிப்பதுபோன்றும் கனவு காண்பது நல்லது; விரைவில் சுப காரியங்கள் ஸித்திக்கும்.

6. இனிப்பான பலகாரங்களைக் கனவில் காண்பது மிகவும் நல்லது. வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். இனிப்புப் பலகாரங்களை உண்பது போன்று கனவு கண்டால், நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் முயற்சிகளில் விரைவில் வெற்றியைச் சுவைப்பீர்கள் என்று அர்த்தமாம்.
7. பேனா, காகிதம் போன்ற பொருள்களைக் கனவில் கண்டால், கடிதப் போக்குவரத்தால் பொருள் வரவு வரக்கூடும் என்று பொருள். எழுதிக் கொண்டிருப்பது போல் ஒருவர் கனவு காணின், நற்செய்திகள் விரைவில் அவரை நாடி வரும்.
8. ஏதேனும் ஒரு அலுவலகத்தில் பணியாற்றுவதுபோல் கனவு கண்டால் நற்காலம் நெருங்கி விட்டது என்பதற்கு அறிகுறி. வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும். ஒருவர் தாமே வயலில் பணி செய்வதாக கனவு கண்டால், அவரது வாழ்க்கை வளம் அனைத்தையும் பெற்றுத் திகழும்.
9. கனவில் வேள்விக் குண்டம், ஹோமத் தீ முதலானவற்றைக் காண்பவர், தெய்வ அருள் பெற்றவராகி பல்வேறு நற்பேறுகளையும் அடைவார்.

10, தன்னைவிட வயதில் மூத்தவர்கள் அல்லது மகான்கள் தன்னை வாழ்த்தி ஆசிர்வாதம் செய்வதாக கனவு கண்டால், தொழிலில் உயர்வும் பொருள் சேர்க்கையும் உண்டாகும். புதிய வாய்ப்புகளும் வந்தடையும்.
11. சித்தர், ஞானிகள், சந்நியாசிகள், மயில், சிவப்பு நிற பழங்கள், சிவப்பு நிற வஸ்திரங்கள் நம் கனவில் தோன்றுவது செவ்வாயைக் குறிக்கின்ற அமைப்பு. இது ஒரு மனிதனுக்கு நிலம், வீடு, கன ரக இயந்திரம் மற்றும் அது சார்ந்த சுப காரியங்களைக் குறிக்கும்.
12. அதேபோல், கனவில் தெய்வம் வருகிறதுஎன்றால், உங்களுக்கு இறைச் சிந்தனை மிகுந்திருக்கிறது எனப் பொருள். ஆகவே, தெய்வ அருள் சேரும்; விரைவில் மங்கலகரமான செய்திகள் வரப் போகின்றன என்று அறியலாம்!




















