Radhima: "நூறு முறைக்கும் மேல் கேட்டுவிட்டேன்!" - சாய் அபயங்கரை பாராட்டிய இயக்கு...
`இன்டர்னல் மார்க் போடமாட்டேன்; ஏன் பயப்படுற?' - மாணவி கர்ப்பத்தால் சிக்கிய புதுச்சேரி பள்ளி ஆசிரியர்
புதுச்சேரியில் செயல்பட்டு வரும் அந்தப் பிரபலமான பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் மாணவி ரேஷ்மாவுக்கு (மாணவியின் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து ரேஷ்மாவை அவரது பெற்றோர், கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
அங்கு ரேஷ்மாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவிக்க, நிலைகுலைந்து போயிருக்கின்றனர் அவரது பெற்றோர். அதன்பிறகு சம்பந்தப்பட்ட காவல்நிலையத்துக்கு தகவலை தெரிவித்திருக்கின்றனர் மருத்துவர்கள். அதனடிப்படையில் ரேஷ்மாவிடம் விசாரணை செய்த போலீஸார், அவர் படித்த பள்ளியில் சமூக அறிவியல் பாட ஆசிரியர் ஜார்ஜ் என்பவரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.

ஒட்டுமொத்த புதுச்சேரியையும் உலுக்கியிருக்கும் இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை அதிகாரிகளிடம் பேசினோம். ``அந்த ஆசிரியர் ஜார்ஜுக்கு 45 வயது. வகுப்பில் படிப்பில் பின் தங்கிய சில மாணவிகளை மட்டும் அழைத்து, அவர்களுக்கு இலவசமாக டியூஷன் சொல்லித் தருகிறேன் என்று கூறியிருக்கிறான். அதற்காக தனியாக வாடகைக்கு ஒரு இடத்தையும் எடுத்திருக்கிறான்.
அந்த மாணவிகளின் பெற்றோர்கள் ஆசிரியர் ஜார்ஜின் பெருந்தன்மையை நினைத்து மகிழ்ந்து, குழந்தைகள் எப்படியாவது படிக்க வேண்டும் என்று டியூஷன் அனுப்பியிருக்கிறார்கள். அனைத்து மாணவிகளையும் மாலை 6 மணிக்கு வரச் சொன்ன ஜார்ஜ், ரேஷ்மாவை மட்டும் 5.30 மணிக்கு வழக்கமாக வரவழைத்திருக்கிறான். அப்படி ஒருநாள் அவன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதில் பயந்துபோன ரேஷ்மா, மறுநாள் பள்ளிக்கும், டியூஷனுக்கும் செல்லாமல் இருந்திருக்கிறார்.
அதற்கு மறுநாள் பள்ளிக்கு வந்த ரேஷ்மாவிடம், `டியூஷன் வரவில்லை என்றால் உன்னை ஃபெயிலாக்கிவிடுவேன். இண்டர்னல் மார்க் போடமாட்டேன்' என்று ஜார்ஜ் மிரட்டியதால், அன்று மாலை டியூஷனுக்குச் சென்றிருக்கிறார். அப்போது, `இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. இதற்கு ஏன் பயப்படுற? நீ நல்லா படிக்கனும்னுதானே நான் இலவசமா டியூஷன் எடுக்கறேன்.
உனக்கு நான் கெடுதல் பண்ணுவேனா?' என்று சமாதானமாகப் பேசியிருக்கிறான் ஜார்ஜ். ஆனால் அதை ஏற்க மறுத்த ரேஷ்மா, வீட்டுக்குப் போவதாகச் சொல்லியிருக்கிறார். அப்போதுதான், கடந்த முறை இவன் செய்த பாலியல் சீண்டலை வீடியோ எடுத்து வைத்திருப்பதாகவும், அதைக் காட்டி `நீதான் என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டனு சொல்லி பள்ளியை விட்டே அனுப்பி விடுவேன்' என்றும் மிரட்டியதால் பயந்து போயிருக்கிறார் ரேஷ்மா. அதையடுத்துதான் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான் ஜார்ஜ்.

அதற்குப் பிறகு நான்கைந்து நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் போய் வீட்டில் இருந்த ரேஷ்மா, டியூஷனுக்குப் போக மாட்டேன் என்று பெற்றோரிடம் கூறியிருக்கிறார். ஆனால், அனைத்துக் குழந்தைகளும் வழக்கமாகச் சொல்வதுதான் என்று நினைத்த அவரது பெற்றோர், எப்போதும் போல டியூஷனுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
அதையடுத்து, `வீடியோவைக் காட்டி உன்னை பள்ளிக்கூடத்தை விட்டே அனுப்பிவிடுவேன்' என்று மீண்டும் மிரட்டி, ரேஷ்மாவிடம் தொடர்ச்சியாக தன்னுடைய பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றியிருக்கிறான் ஜார்ஜ். அதனால்தான் சிறுமி கர்ப்பமாகியிருக்கிறார். தான் கர்ப்பமாக இருக்கிறோம் என்பதும், தன்னுடைய ஆசிரியர் செய்யும் வக்கிரங்களால் கர்ப்பமாகிவிடுவோம் என்ற புரிதல் கூட அந்தச் சிறுமிக்கு இல்லை.
அவருக்கு மாதவிடாய் வரவில்லை என்று பார்த்து, அவரின் அம்மாதான் தனியார் மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அதில்தான் அவர் கர்ப்பமாக இருந்த விஷயம் தெரிய வந்திருக்கிறது. அப்போது மருத்துவர்கள் நடத்திய விசாரணையில்தான், ஜார்ஜ் பெயரைக் கூறியிருக்கிறார் ரேஷ்மா. அதனடிப்படையில் எங்களுக்கும், குழந்தைகள் நலப் பாதுகாப்புக் குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் ஜார்ஜுக்கு எப்படியோ தெரிந்ததால், குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டான். ஆனாலும் எங்கள் தொடர் தேடலில் சிக்கிக் கொண்டான். இதில் கொடுமை என்னவென்றால், இந்தச் சிறுமியிடம் இப்படி வக்கிரத்தில் ஈடுபட்ட ஜார்ஜுக்கு திருமணமாகி மூன்று மகள்கள் இருக்கிறார்கள். மூத்த மகள் கல்லூரிக்குச் சென்று கொண்டிருக்கிறார். மற்ற இரண்டு மகள்களும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்றார் ஆதங்கத்துடன்.

இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய இந்திராகாந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிலர், ``தனக்கு என்ன நடந்திருக்கிறது என்றே அந்தச் சிறுமிக்கு தெரியவில்லை. `எப்பவுமே ரொம்ப டயர்டா இருக்குது டாக்டர். நல்ல மாத்திரையா கொடுங்க. நான் ஸ்கூல் போகனும். எக்ஸாம் வருது' என்று சொன்னபோது உடைந்துவிட்டோம்" என்றனர்.



















