`திமுக கூட்டணி குறித்த கேள்விகள்; செலவுக்கு.?' - தே.மு.தி.க நேர்காணலில் பிரேமலதா...
உச்ச நீதிமன்ற உத்தரவு: இதுவரை வசூலித்த 133 பில்லியன் டாலர் வரி... ரீஃபண்ட் செய்யுமா அமெரிக்கா?
சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)-ன் கீழ், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது விதித்த 'வரி சட்டத்திற்கு புறம்பானது' என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது.
இதனால், இன்றிலிருந்து இந்தச் சட்டத்திற்குக் கீழ், வரி வசூலிக்கப்படாது என்று அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
'இப்போ வரி வசூலிப்பதை நிறுத்துவது எல்லாம் சரி தான்... இதுவரை வாங்கிய வரிகள் என்ன ஆகும்?' என்கிற கேள்வி எழுவது நியாயம் தான்.
IEEPA சட்டத்தின் படி, இதுவரை அமெரிக்க அரசாங்கம் கிட்டத்தட்ட 133 பில்லியன் டாலர்கள் வரி வசூலித்துள்ளது.

அந்த மொத்த தொகையும் ரீஃபண்ட் செய்யப்பட உள்ளது. 'ரீஃபண்ட் செய்ய தயார்' என்று ஓபனாகவே அமெரிக்க அரசு அறிவித்துவிட்டது.
ஆனால், அது எப்படி, எப்போது ரீஃபண்ட் செய்யப்படும்... அதற்கான வழிமுறைகள் என்ன என்பதைப் பற்றி அமெரிக்க உச்ச நீதிமன்றமோ, அமெரிக்க அரசாங்கமோ வாயைத் திறக்கவில்லை.
அதனால், இதற்கான வழிமுறைகளை அமெரிக்காவின் கீழ் நீதிமன்றங்கள், அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம், அமெரிக்க சுங்கத் துறை ஆகியவை முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.
யாருக்கு கிடைக்கும்?
ரீஃபண்ட் குறித்து அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறியிருப்பதாவது...
"ரீஃபண்ட் தொகை கட்டாயம் செல்லும். அவை நிறுவனங்களுக்கு செல்லுமே தவிர, அமெரிக்க மக்களுக்கு செல்லாது என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
பிற நாட்டு பொருள்களின் வரி ஏறும்போது, அமெரிக்க கடைகளில் அந்தப் பொருள்களுக்கான விலையும் ஏறியது. அதனால், அதிக தொகை கொடுத்து தான், அமெரிக்க மக்கள் பொருள்களை வாங்கி வந்தனர்.

ஸ்காட் பெசென்ட் பேச்சை வைத்து பார்க்கும்போது, அதிக தொகை செலுத்தி பொருள்களை வாங்கிய அமெரிக்க மக்களுக்கு எந்த ரீஃபண்டும் கிடைக்காது என்று தெரிய வருகிறது.
இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது.
ரீஃபண்ட் என்றால் அது எளிதாக கிடைத்துவிடாது. அதில் ஏகப்பட்ட வழிமுறைகளும், நடைமுறைகளும் இருக்கும். இவை அனைத்தையும் ஃபாலோ செய்து ரீஃபண்ட் பெறுவது பெரிய நிறுவனங்களுக்கு சற்று எளிதாக இருக்கும்.
ஆனால், சிறிய நிறுவனங்களுக்கு அது மிகக் கடினம். அத்தனை வழிமுறைகளையும் பின்பற்றுவது அவர்களுக்கு சிரமத்தில் சென்று முடியும்.
எப்போது கிடைக்கும்?
அடுத்ததாக, இந்த ரீஃபண்ட் எப்போது கிடைக்கும் என்பதற்கான தெளிவான விளக்கமும் இதுவரை கிடைக்கவில்லை.
அதனால், இந்த நடைமுறை முடிய மாதக்கணக்கிலோ, ஆண்டுக்கணக்கிலோ ஆகும் என்று ட்ரம்ப் முதல் ஸ்காட் பெசென்ட் வரை தெரிவித்திருக்கிறார்கள்.















