மாசடைந்த சுருளி அருவி; தூய்மைப் பணியில் நேரடியாகக் களமிறங்கிய கம்பம் எம்.எல்.ஏ ஜ...
உ.பி: 'சமாஜ்வாதி கட்சி பிளவுபடுகிறதா?'- பரபரப்பை ஏற்படுத்திய அமைச்சர்; அகிலேஷ் யாதவ் பதிலடி!
சமாஜ்வாதி கட்சி முழுமையாக பாஜக-வில் இணையத் தயாராக உள்ளதாக உத்தரப் பிரதேச அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறிய நிலையில், இதற்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்திருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி முழுமையாக பாஜக-வில் இணையத் தயாராக உள்ளதாக அந்த மாநில அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த எக்ஸ் தளப் பதிவில், “சமாஜ்வாதி கட்சியில் விரைவில் ஒரு பெரிய பிளவு ஏற்படப் போகிறது. ராம் கோபால் யாதவ், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஒரு கடிதத்தை அளித்துள்ளார்.
சுரங்க ஊழல் மற்றும் கோமதி நதிக்கரை மேம்பாட்டுத் திட்ட ஊழல் ஆகிவற்றின் பின்னணியில் உள்ள சூத்திரதாரி யார் என்பது உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். சட்ட நடவடிக்கைகள் இறுக்கமடைந்து வருவதால், சமாஜ்வாதி கட்சி பதற்றமடைந்துள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தை மறந்துவிடுங்கள். ஒட்டுமொத்த சமாஜ்வாதி கட்சியுமே பாஜக-வில் இணையத் தயாராக உள்ளது” என்று பதிவிட்டிருந்தார்.
அவரின் இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்திருக்கிறார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அகிலேஷ் யாதவ், "விலைக்குப் போகத் தயாராக இருப்பவர்களை மட்டும்தான் மற்றவர்கள் வாங்குவார்கள். பயப்படுபவர்கள் மட்டும்தான் கட்சியை விட்டு ஓடுவார்கள். உண்மையில் பாஜக-வில் இருக்கும் பல தலைவர்கள்தான் இப்போது அங்கிருந்து வெளியேறி எங்கள் பக்கம் வரத் தயாராக இருக்கிறார்கள்.
சரியான நேரம் வரும்போது அவர்கள் தங்கள் வாயைத் திறப்பார்கள். இந்த நாடகம் எவ்வளவு காலத்துக்கு தொடரும்? துணிச்சலானவர்களால் மட்டுமே பாஜகவை எதிர்த்துப் போராட முடியும். சமாஜ்வாதி கட்சி மிகவும் பலமான கட்சி" என்று தெரிவித்திருக்கிறார்.

















