`அனிதாவில் துவங்கிய நீட் மரணம் என் மகளோடு முடியணும்’ – தற்கொலை செய்த கோவை மாணவிய...
Engal Thangam: "தமிழில் நிறைய நல்ல படங்கள் பண்ணனும்னு பசியோடு இருக்கேன்!" - சென்னையில் சமந்தா
சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆக்ஷன் படமான 'மா இண்டி பங்காரம்' ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார். கடைசியாக சமந்தா நடிப்பில் 'குஷி' திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

அந்தத் திரைப்படத்திற்குப் பிறகு சமந்தா நடித்திருக்கும் இப்படம், ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படம் 'எங்கள் தங்கம்' என்கிற தலைப்பில் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. சென்னையில் இன்று இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பும் நடைபெற்றது.
சமந்தா பேசுகையில், "ரொம்ப நாளைக்குப் பிறகு சென்னைக்கு வந்திருக்கிறேன். அதுவும் சத்யம் தியேட்டருக்கு வந்திருக்கேன். என்னுடைய கல்லூரி நாட்கள்ல இங்குதான் அதிகமாக இருந்திருக்கேன்.
நான் தமிழில் அதிகமான படங்கள் பண்ணலைனு எப்போதும் வருத்தப்படுவேன். ஆனா, இன்னும் எனக்கு நேரம் இருக்கு, பார்த்துக்கலாம்! 'எங்கள் தங்கம்' படத்தில் நடிகராக மட்டுமல்ல, தயாரிப்பாளராகவும் இருந்து இப்படியான படத்தை உருவாக்குவது எவ்வளவு கடினம் என்பதையும் தெரிஞ்சிருக்கேன்.
படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் எங்களுக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸானதாகத்தான் இருந்திருக்கு. ஒரு படத்தை ரிலீஸ் பண்றது எவ்வளவு கஷ்டம்னு எனக்கு இப்போ புரியுது. ஆனா, இந்தப் படத்தை எடுத்ததை எண்ணிப் பெருமைப்படுறேன்.

நாங்க நல்ல படத்தை எடுத்திருக்கோம்னு நம்புறோம். இதுதான் என் வீடு. இந்தப் படத்தின் மூலமாக நிச்சயமா உங்களைப் பெருமைப்பட வைப்பேன்." என்றவர், "தமிழில் நிறைய நல்ல படங்கள் பண்ணனும்னு பசியோடு இருக்கேன்.
இதன் மூலமாக இயக்குநர்களுக்குக் கோரிக்கையையும் முன்வைக்கிறேன். தொடர்ந்து நிறைய தமிழ்ப் படங்கள் இல்லாத சமயத்திலும் என்னுடைய ரசிகர்கள் என்னைப் பற்றி பேசிக்கிட்டேதான் இருக்காங்க.
இந்தப் படம், என் ரசிகர்களைப் பெருமைப்பட வைக்கும். இந்தக் கதைக்குச் சாய் பல்லவி நோ சொன்னாங்க. ஏன்னா, அவங்களும் ரொம்ப பிஸியாக இருக்காங்க.
அவர் அற்புதமான நடிகை. அவர் நடிச்சால் நல்லாயிருக்கும்னு நினைச்சோம். அவர் நோ சொன்னதுக்குப் பிறகு எனக்காகச் சில விஷயங்களை மாற்றினோம்" எனக் கூறியிருக்கிறார்.

















