'உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்...' - முதல்வர் விஜய்யின் இடைத்தேர்தல் பிரசார பிளா...
என்ன விலை விமர்சனம்: `சாமானியன் vs அரசு' - முக்கியமான கேள்விகளை எழுப்பும் படைப்பு ஏமாற்றுவது எங்கே?
ராமேஸ்வரம் தீவின் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் காணிக்கையாகக் கடலில் வீசும் சில்லறைகளைச் சேகரிக்கும் தொழிலைச் செய்து வருகிறார் தவசி (கருணாஸ்). மனைவி, பிள்ளைகள், தங்கையுடன் வறுமையில் வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் பணியின்போது, சில்லறைகளுக்கு இடையில் கடலில் ஒரு பொருள் கிடைக்கிறது.
தன் உழைப்பை மட்டுமே நம்பி வாழும் தவசி, அதை எடுத்துக்கொண்டு காவல் நிலையம் போகிறார். அதற்குப் பிறகு தவசியின் வாழ்க்கையிலும், சமூகத்திலும் நிகழும் அடுக்கடுக்கான நிகழ்வுகள் என்னென்ன என்பதே அறிமுக இயக்குநர் சஜீவ் பாழூரின் 'என்ன விலை?' திரைப்படத்தின் கதை.

வைராக்கியம், ஆற்றாமை, குடும்பத்தை நினைத்து உடையும் இடம், சிறையை நினைத்து அழும் இடம், 'என் மானத்திற்கு என்ன விலை' என்று அரசைக் கேட்கும் இடம் எனச் சாமானியன் தவசியை ரத்தமும் சதையுமாகக் கண்முன் கொண்டு வந்திருக்கிறார் கருணாஸ்.
அவருக்கு நீதியைத் தேடித்தரத் துடிப்போடு களமாடும் இளம் வழக்குரைஞராக நிமிஷா சஜயனின் வாதங்கள் கதை நகர்வுக்குக் கைகொடுத்திருக்கின்றன. மோகன் ராமின் அதீத நடிப்பு இடைஞ்சல் கொடுத்தாலும் தேவையான வெறுப்பைச் சம்பாதிக்கிறார். எக்கச்சக்க துணை கதாபாத்திரங்களுக்கு இடையே விஜயலட்சுமி வீரமணி, கவிதாலயா கிருஷ்ணன், நிழல்கள் ரவி, சுவாமிநாதன் ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்.

கடல்சார் தொழிலாளர்களின் வறுமை சூழ்ந்த வீடுகள், ஊர் போன்றவற்றில் எதார்த்தத்தையும், நீதிமன்றக் காட்சிகளில் பரபரப்பையும் கொண்டு வந்திருக்கிறது அல்பி ஆண்டனியின் ஒளிப்பதிவு.
தெளிவில்லாமல் ஓடும் இரண்டாம் பாதியில் நிதானத்தைத் தொலைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங். 'கடலாடும் சீமையிலே' பாடலில் முணுமுணுக்க வைக்கும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ், பின்னணி இசையில் ஆங்காங்கே மட்டும் பரபரப்பிற்குக் கைகொடுத்திருக்கிறார்.
சாதாரண நகை வழக்காகத் தொடங்கும் திரைப்படம், அரசின் அமைப்பு, நீதித்துறையின் செயல்பாடுகள், புதையல் சட்டம், கடல்சார் தொழில்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கம் எனப் பல கட்டங்களுக்கு நீள்கிறது.
தவசியின் குடும்பம், அவரின் கடல்சார் தொழில், அவர்களின் உலகம் என நிதானமாகவும், எளிமையாகவும் தொடங்கும் திரைக்கதை, காவல் நிலையப் படிகளைத் தவசி ஏறியதும், பரபரப்போடு மையக்கதையை நோக்கி நகர்கிறது.
செயற்கையான வில்லத்தனக் காட்சிகள், சில திருப்பங்களுக்கு நியாயமான காட்சிகள் இல்லாதது போன்றவைத் தொந்தரவைக் கொடுத்தாலும், வரிசைக்கட்டும் திருப்பங்கள் சுவாரஸ்யத்தைத் தக்க வைக்கின்றன. அதோடு கதையின் அரசியலைப் பேசும் இடைவேளைக் காட்சி திரைக்கதைக்குப் பலம் சேர்க்கிறது. ஆனால், கடகடவெனக் கிளம்பி ஓடும் இரண்டாம் பாதியின் திரைக்கதையில், எதார்த்தத்தைத் தேட வேண்டியிருக்கிறது.
நீதிமன்றங்களில் வைக்கப்படும் வாதங்கள், அதன் மூலமாக அரசையும் சட்டங்களையும் கேள்விக்குள்ளாக்குவது, அவை சமூகத்திலும் மீடியாக்களிலும் ஏற்படுத்தும் தாக்கங்கள் போன்றவை கவனிக்க வைக்கின்றன. அதேநேரம், அவை அதீத செயற்கைத்தனத்தோடு வரிசைக்கட்டுவது சுவாரஸ்யத்தைப் பின்னுக்குத் தள்ளவும் செய்கின்றன.
மேலும், ஒரு லேயர் திரைக்கதையை முழுமையாகப் பேசி முடிக்காமல், அடுத்த லேயருக்குத் தாவுவது, குழப்பத்தையே தருகிறது. இறுதிக்காட்சியை நோக்கி, லாஜிக்கே இல்லாமல் ஓடும் திரைக்கதையில் எதார்த்தத்தைச் சல்லடைப் போட்டுத் தேட வேண்டியிருக்கிறது.
"ஏழையின் மானத்திற்கு என்ன விலை?", "நான் பணத்திற்காக நீதிமன்றம் வரல; என் மானத்திற்காக வந்திருக்கேன்" போன்ற வசனங்களுக்கும், 'சாமானியன் vs அரசு' வாதங்களில் வைக்கப்படும் வசனங்களுக்கும் கண்டிப்பாகக் கைதட்டலாம்.
இரண்டாம் பாதியின் செயற்கைத்தனங்களைத் தாண்டி, 'ஒட்டுமொத்த அரசியலமைப்பில் ஏழையின் மானத்திற்கு என்ன விலை?' என்ற கேள்வியை மையப்படுத்தும் கதையும், அதற்கு வலுசேர்க்கும் முதல் பாதியும் 'என்ன விலை' படத்தைக் கவனிக்க வைக்கும் படைப்பாக்கியுள்ளன.














