`என்.டி.ஏ கூட்டணியில் தவெக-வா?' - செய்தியாளர்களின் கேள்விக்கு சி.டி.ஆர்.நிர்மல் குமார் பதில்!
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. கூட்டணிப் பேச்சுவார்தை தொடங்கி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என, தீயாக இருக்கிறது தேர்தல் களம். அதன் ஒரு பகுதியாக இன்று தவெக தலைவர் விஜய், தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த நிர்வாகிகளை நேரில் அழைத்து நேர்காணல் நடத்தினார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல் குமார், ``தலைவர் விஜய் விருப்ப மனு கொடுத்த முக்கிய நிர்வாகிகள சந்தித்து முதற்கட்ட நேர்காணல் நடத்தி முடித்திருக்கிறார். தொடர்ந்து நேர்காணல் நடைபெறும். நாங்கள் பா.ஜ.க கூட்டணியில் இணையப் போவதாக யூகங்கள் கிளம்புகிறது. யூகங்களின் அடிப்படையில் எழுப்பப்படும் எந்தக் கேள்விக்கும் நாங்கள் பதில் அளிக்க விரும்பவில்லை.
ஏதாவது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருந்தால், அது கட்சித் தலைமையால் முறைப்படி அறிவிக்கப்படும். யூகங்களுக்குக் கருத்துச் சொல்லி நேரத்தை வீணடிக்க நாங்கள் தயாராக இல்லை. ஏற்கெனவே இரண்டு முறை டெல்லியில் சிபிஐ முன் ஆஜராகி அனைத்து விளக்கங்களும் அளிக்கப்பட்டுவிட்டன. தற்போது தலைவருக்குப் பல பணிகள் இருப்பதால், விசாரணையைச் சென்னைக்கு மாற்றவோ அல்லது வேறு தேதி வழங்கவோ கோரியிருந்தோம்.
அதனடிப்படையில், வரும் 15-ஆம் தேதி ஆஜராகுமாறு புதிய சம்மன் கிடைத்துள்ளது. இது குறித்து ஆலோசித்துவிட்டு, முடிவெடுக்கப்படும். கரூர் சம்பவம் தொடர்பாக செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த வாரமே இது தொடர்பான செய்திகள் வெளியாகின. நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, பல்வேறு விவகாரங்களில் விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர் செந்தில் பாலாஜிதான். சிபிஐ விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தேர்தலுக்கான விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக 150-க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் வந்துள்ளன. ஒட்டுமொத்தமாகப் பல ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த வேட்பாளர்களைத் தனித்தனியாக அழைத்து தலைவர் நேர்காணல் நடத்தி வருகிறார். அனைத்துத் தொகுதிகளுக்கான நேர்காணல்களும் முடிந்த பிறகு, தகுதியான வேட்பாளர்கள் அடங்கிய முழுமையான பட்டியலைத் தலைமை முறைப்படி வெளியிடும்." என்றார்.













