16 சதவீத அன்பும்... 100 சதவீத விடுதலையும்: ஒரு பெண்ணின் பயணம்!
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம்? ஐந்தறிவு விலங்குகள் தங்களின் ஆயுளில் வெறும் 16 சதவீத காலத்தை மட்டுமே தன் குட்டிகளுக்காகச் செலவிடுகின்றன. அவை பருவம் அடைந்ததும் 'நீ யாரோ, நான் யாரோ' எனப் பிரிந்துவிடுகின்றன. ஆனால், ஆறறிவு படைத்த மனித இனம் அப்படியல்ல.
குறிப்பாக, ஒரு பெண் தன் வாழ்நாள் முழுவதும் அன்பையும் அறத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறாள். கவிமணி பாடியது போல, 'மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா' என்பது வெறும் புகழ்ச்சி அல்ல; அது ஒரு பெரும் பொறுப்பு.

அவள் ஒரு நடமாடும் நூலகம்!
ஒரு பெண் கல்வி கற்கும்போது, அவள் ஒரு நபராக மட்டும் வளர்வதில்லை; ஒரு சமுதாயமே வளர்கிறது. கல்வி கற்ற பெண், "நான் யார்?" என்பதை உணர்ந்தவளாக இருக்க வேண்டும். அவள் வெறும் புத்தகப் புழுவாக இல்லாமல், சமூகத்தைப் வாசிக்கும் ஒரு 'நடமாடும் நூலகமாக' வலம் வர வேண்டும்.
ஏனெனில், அவள் ஒரு வீட்டின் 'குலவிளக்கு' மட்டுமல்ல; இந்த தேசத்தின் 'விடிவெள்ளி'. அவள் கையில் இருக்கும் புத்தகம், ஒரு தலைமுறையின் அறியாமையை அகற்றும் வல்லமை கொண்டது.
அம்மா: முதல் ஆசிரியை
ஒவ்வொரு தாயும் தன் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டியது பாடங்களை மட்டுமல்ல; 'வாழ்க்கையை'.
நாம் ஏன் பிறந்தோம்?, எதற்காக வாழ்கிறோம்?, நம் சுயம் என்ன? என்கிற தேடலை ஒரு தாய் தன் பிள்ளையிடம் விதைக்கும்போதுதான், அங்கிருந்து ஒரு சிறந்த அறிவியலாளரோ அல்லது ஒரு சமூகப் போராட்டக்காரரோ உருவாக முடியும்.

ஒரு மாற்றத்திற்கான ஆயுதம்
கல்வி என்பது வெறும் வேலைவாய்ப்பிற்கானது மட்டுமல்ல; அது ஒழுக்கத்தின் ஆணிவேர். ஒரு தாய் தன் பிள்ளைக்குக் கல்வியோடு சேர்த்து அறத்தையும் புகட்டினால், இந்த உலகில் மனிதநேயத்திற்கு எதிரான எந்தச் சக்தியும் நிற்க முடியாது. 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்பது சமூகத்திற்கு மட்டுமல்ல, ஒரு குடும்பத்தின் கல்வி முன்னேற்றத்திற்கும் பொருந்தும்.
இந்த உலக மகளிர் தினத்தில், ஒவ்வொரு பெண்ணும் தன்னை ஒரு 'அறிவார்ந்த சக்தியாக' அடையாளப்படுத்திக் கொள்ள உறுதியேற்போம்!


















