"தொடர் அவதூறு... எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்" - எடப்...
ஒரே நாளில் உத்தரப் பிரதேசத்தைப் புரட்டிப் போட்ட சூறாவளி; கனமழைக்கு 100 பேர் பலியான சோகம்
உத்தரப்பிரதேசத்தில் திடீரென நேற்று மாலை இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மரங்கள் ஒடிந்து விழுந்தன. வீட்டுக் கூரைகள் அடித்து செல்லப்பட்டன. வீடுகள் சேதம் அடைந்தன. திடீரென பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
அலகாபாத் எனப்படும் பிரயக்ராஜ் நகர் இந்தச் சூறாவளி காற்று மற்றும் மழையால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. இங்கு மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இது தவிர படோஹியில் 18 பேரும், மிர்சாபூரில் 15 பேரும், ஃபதேபூரில் 10 பேரும், உன்னாவ் மற்றும் படவுனில் தலா 6 பேரும், பிரதாப்கர் மற்றும் பரேலியில் தலா நான்கு பேரும், சீதாபூர், ரேபரேலி மற்றும் சந்தௌலியில் தலா இரண்டு பேரும் கனமழைக்கு உயிரிழந்துள்ளனர்.
நேற்று மாலை வானிலை திடீரென மாறியது. உத்தரப்பிரதேசத்தின் பெரும்பகுதியைத் தூசு மேகங்கள் சூழ்ந்துகொண்டன. அதிவேகக் காற்று விளம்பரப் பலகைகளையும், தகரக் கொட்டகைகளையும் கிழித்தெறிந்து, திடீர் மழையால் அதிகமானோர் மரங்கள் மற்றும் மேம்பாலங்கள் அடியில் தஞ்சம் புகுந்தனர்.

மழை மற்றும் காற்றால் மரங்கள் ஒடிந்து விழுந்து இதில் பலர் உயிரிழக்க நேரிட்டது. மரங்கள் ஆங்காங்கே சாலையில் சாய்ந்து கிடப்பதால் அதிகமான சாலைகள் மூடப்பட்டுள்ளன. உள்ளாட்சி மன்ற ஊழியர்கள் அவற்றை அப்புறப்படுத்தும் வேலையில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டுள்ளனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், புயல்கள் எவ்வளவு தீவிரமாக இருந்தன என்பதை காணொலி எடுத்து சமூக வலைத்தளப் பக்கத்தில் மக்கள் பகிரப்பட்டுள்ளனர். பரேலியில் உள்ள பமியானா கிராமத்தைச் சேர்ந்த ஒரு காணொளியில், பலத்த காற்றின் காரணமாக ஒரு நபர் ஒரு தகரக் கொட்டகையுடன் சேர்த்து காற்றில் தூக்கி வீசப்பட்டு, 50 அடி தொலைவில் உள்ள ஒரு வயலில் சென்று விழுந்த காட்சி வைரலானது.
இதில் காற்றில் தூக்கிச் செல்லப்பட்டதில் கைகளிலும் கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்ட நான்ஹே மியான் என்பவர் இது குறித்து கூறுகையில், "நான் ஒரு கயிற்றைப் பிடித்துக்கொண்டிருந்தபோது, பலத்த காற்று என்னையும் தகரத்தையும் தூக்கிச்சென்றது. நான் எங்கே விழுந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் குறைந்தபட்சம் 50 அடி தூரத்தில் விழுந்தேன்," என்று கூறினார்.
பதோஹியின் ராம்பூரில் மிதவைப் பாலம் ஒன்று சேதமடைந்ததைத் தொடர்ந்து, பலரும் கங்கை நதியில் விழுந்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 24 மணி நேரத்தில் நிதியுதவி வழங்கும்படியும், மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ளும்படியும் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மாநிலம் முழுவதும் மழைக்கு 100 பேர் உயிரிழந்துள்ளனர்.














