The Odyssey: " 'தி ஒடிஸி' ஓர் அழுத்தமான காதல் கதை!" - கிறிஸ்டோபர் நோலன்
ஓசூரிலேயே நிறுத்தப்படும் பெங்களூரு பேருந்துகள்; மேகதாது பிரச்னை எதிரொலி: இரு மாநில எல்லையில் பதற்றம்
மேகதாது பகுதியில் காவிரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட, கர்நாடக அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. ஏற்கெனவே காவிரியில் தமிழகத்திற்கான உரிய தண்ணீரை திறந்து விடாமல் பிரச்னை நீடித்து வரும் நிலையில், கர்நாடக அரசின் புதிதாக அணை கட்டும் முயற்சி தமிழக விவசாயிகளை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்று இத்திட்டத்தை தமிழக விவசாயிகளும், அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

தமிழக அரசும் சட்டமன்றத்தில் மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காகவே அணை கட்டுவதாகச் சொல்லும் கர்நாடக காங்கிரஸ் அரசு, டி.கே.சிவகுமார் முதல்வரான பிறகு இதற்கான முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மேகதாது அணைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசையும், எதிர்க்கும் விவசாய அமைப்புகளையும் கண்டித்து, தமிழக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளியில் இன்று எல்லை அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக கர்நாடக சலுவாலி இயக்கத்தின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையிலான அமைப்பு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

அதைப்போலவே கர்நாடகா அரசை எதிர்த்து தமிழக விசாய அமைப்புகளும் எல்லைப்பகுதியில் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்திருந்தன.
இதனால் இன்று காலை முதல் இரு மாநில போலீஸாரும் எல்லைப்பகுதியில் குவிக்கப்பட்டனர். பெங்களூரு செல்லும் தமிழகப் பேருந்துகள் ஓசூரிலேயே நிறுத்தப்பட்டன. அதே நேரம் குறைந்த அளவிலான கர்நாடக மாநில பேருந்துகள் ஓசூர் வழியாக தமிழகத்துக்கு வந்தன. சில தனியார் பேருந்துகளும், சொந்த வாகனங்கள் வைத்திருப்போரும் சென்று வருகின்றனர்.
இந்தப் பதற்றமான சூழலால் போதிய பேருந்துகள் இல்லாமல், இரு மாநில மக்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.













