செய்திகள் :

`ஓவிய ஆசிரியர் பணி, அரசு அதிகாரியே கொச்சைப்படுத்தியிருப்பது வேதனை.!' – எழுத்தாளர் யூமா வாசுகி

post image

சிறார் இலக்கியத்துக்காக சாகித்ய அகாடமி விருது வாங்கியவர் எழுத்தாளர் யூமா வாசுகி. சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை, பதிப்பகம் சார்ந்து இயங்கி வருகிறவர். இவரின் இயற்பெயர் தி.மாரிமுத்து

2019ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய சிறப்பாசிரியர்களுக்கான தேர்வு எழுதி, பட்டுக்கோட்டை அருகேயுள்ள செண்டங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில்  ஓவிய ஆசிரியராக பணியில் சேர்ந்தார். பணியில் சேரும் போதே அவருக்கு வயது ஐம்பதைக் கடந்து விட்டது.

கடந்த இரு தினங்களுக்கு முன் அதாவது ஜூன் 30 இவருக்குப் பணி ஓய்வு.

யூமா வாசுகி

ஆனால் பள்ளிகளில் ஆசிரியர்கள் ஜூன் மாதம் ஓய்வு பெற்றால், அடுத்த கல்வியாண்டு வரை பணி நீட்டிப்பு பெறலாம் என கல்வித்துறையில் அரசாணை இருப்பதைச் சுட்டிக் காட்டி தனக்கு பணி நீட்டிப்புக் கேட்டிருக்கிறார்.

ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப் பட்டு விட்டதாம்.

இது குறித்துச் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த அவரிடம் பேசினோம்.

’’அரசில் இருக்கும் விதிமுறையைத்தான் சுட்டிக் காட்டி கேட்டேன். தவிர ஐந்தரை ஆண்டுகளே சர்வீஸில் இருந்ததாலும் மேலும் ஒரு ஆண்டு பணி புரியலாமென்றும் நினைத்தேன்.. தலைமை ஆசிரியரிடம் பரிந்துரைக் கடிதம் பெற்றே நீட்டிப்புக்கு விண்ணப்பித்தேன்.

ஆனால் என் கோரிக்கையை நிராகரித்து கடிதம் தந்த திருவாரூர் முதன்மைக் கல்வி அதிகாரி சுகப்ரியா பொறுப்பின்மையோடும் என்னை அவமானப் படுத்தியும் உத்தரவு தந்திருக்கிறார். அரசு விதியை அவர் பார்க்கவில்லை.

நிராகரிப்பதற்கு காரணமாக அவர் குறிப்பிடும் போது, ’கலையாசிரியர் என்பதாலும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். அரசின் உயர் அதிகாரி ஒருவர் இப்படிக் குறிப்பிடலாமா? கலையாசிரியர் இளக்காரம் என்றால் எதற்கு அரசு ஓவியக் கல்லூரிகள் எல்லாம் நடத்த வேண்டும்? மூடி விடலாமா? இத்தனைக்கும் சுகப்ரியா எங்கள் மாவட்டத்துக்கு பொறுப்பு அதிகாரிதான். எங்கள் மாவட்ட அதிகாரி விடுப்பில் சென்றுள்ளதால் இவர் கூடுதலாக கவனித்து வருகிறார்.

எனவே ரிலீவிங் உத்தரவை வாங்கவில்லை. இந்த விஷயத்தில் ஒரு தெளிவு கிடைத்த பிறகு வாங்கலாமென நினைக்கிறேன். சிலர் நீதிமன்றம் செல்ல யோசனை தந்தனர். எனக்கு வசதி இல்லை. எனவே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறேன். நல்ல தீர்வு கிடைக்கிறதா எனப் பார்க்கலாம்’’ என்கிறார்.

பள்ளிக் கல்வித்துறை

கல்வித்துறை வட்டாரத்தில் பேசிய போது, ’இந்த நடைமுறையில் தெளிவான உத்தரவு இல்லாததே சிக்கலுக்கு காரணம். சில மாவட்டங்களில் இந்த ஆண்டே அதாவது கடந்த மாதம் பணி ஓய்வு பெற்ற சிலருக்கு நீட்டிப்பு தந்து உத்தரவிட்டிருக்கிறார்கள். அரசாணை என்றால் மாநிலம் முழுக்க ஒரே உத்தரவாகத்தான் இருக்கும்.

மாணவர்களின் எண்ணிக்கை, சம்பந்தப்பட்ட ஆசிரியரின் நடத்தை ஆகிய விஷயங்களை வைத்து முதன்மை கல்வி அதிகாரிக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கலாம். ஆனால் அரசாணை என வந்துவிட்டால் அது எல்லா இடத்துக்கும் பொருந்தும். அதேபோல் கலை ஆசிரியர் என்பதால் என்பன போன்ற வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம்’ என்கிறார்கள்.

விளாத்திகுளம்: அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்காத விவகாரம்; அதிகாரிகள் விசாரணை!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் உணவு ... மேலும் பார்க்க

மதுரை: அரசு பள்ளியில் தோன்றிய ஐன்ஸ்டீன் - மாணவர்களை ஆச்சர்யப்பட வைத்த ஹாலோகிராம் தொழில்நுட்பம்!

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர் கார்த்திக் மாரி அறிமுகப்படுத்திய நவீன தொழில்நுட்பம் மாணவர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அந்த முன்ன... மேலும் பார்க்க