'ஜார்ஜ் கோட்டை அறையை காலி செய்யும் முதல்வர் விஜய்!' - காரணம் என்ன?
கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு வழங்கிய அரசு பணி ரத்து! - நீதிமன்றம் கூறியதென்ன?
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க தடை விதிக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தீரன் திருமுருகன் மற்றும் வழக்கறிஞர் சீனி அகமது ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். அதில், 'கரூர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்குவது விசாரணையை பாதிக்கும் என்பதோடு சாட்சிகள் கலையவும் வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் மக்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை. கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்குவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். எனவே சிபிஐ விசாரணை முடியும் வரை அரசு வேலை வழங்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்' எனக் கூறப்பட்டிருந்தது. இதற்கிடையில் கடந்த மாதம் முதல்வர் விஜய் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார்.
மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, அரசுப் பணி வழங்கியவர்களுக்கு முதல் மாத ஊதியம் வழங்கும் முன்னரே விசாரித்து முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் இன்று நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், "கருணைப் பணியை பொறுத்தவரை சில வழிகாட்டுதல்கள் உள்ளன. வயது, கல்வி என தகுதியின் அடிப்படையிலேயே வழங்க வேண்டும். அவ்வாறு தான் கரூர் சம்பவ அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இதை எப்படி எதிர்க்கிறார்கள் எனத் தெரியவில்லை" என தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து பேசிய நீதிபதிகள், "அரசுப் பேருந்து விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, அரசு வேலை வாய்ப்பு வழங்கினால் எப்படி என்ற கேள்வியும் எழுகிறது. சிவகாசியில் அடிக்கடி வெடி விபத்து நிகழும் சூழலில், அவர்களுக்கு அரசுப் பணி கோரினால் என்ன செய்வது?
வேலைவாய்ப்பிற்காக பலரும் காத்திருக்கிறார்கள். அது குறித்து டின்பிஸ்சி விவரங்களைத் தரும் என எண்ணினோம். ஆனால், அரசாணை கருணைப் பணி அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய அதன் ஒப்புதல் பெற விலக்களித்துள்ளது தெரியவந்தது.
திறன் வளர் பயிற்சிகளை வழங்கி பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு உதவலாமே? அது இவ்வாறு பணி வழங்குவதை விட பயனுள்ளதாக இருக்கும்.
அரசுத்தரப்பில் சாதாரண பணி வழங்குவதாக் கூறுவதை ஏற்க இயலாது. எப்பணியும் சாதாரண பணி அல்ல. அது ஒருவரின் குடும்பத்திற்கு உதவும் பணியே.
எனவே கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசுப் பணி வழங்கிய அரசாணை ரத்து செய்யப்படுகிறது" எனக் கூறி உத்தரவிட்டனர்.


















