கரூர் விசிட் : 32 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்குகிறார் முதல்வர் விஜய்!
கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தேர்தல் பிரசாரத்திற்காக தவெக தலைவர் விஜய் கரூர் சென்றிருந்தார்.
அப்போது அதிகளவு மக்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி பேசுபொருளானது.
தற்போது இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த 2025 அக்டோபர் மாதம் விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரம் அழைத்து சந்தித்தார்.

உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் நிதி வழங்கியிருந்தார். அப்போது, விரைவில் கரூருக்கு நேரில் வந்து சந்திப்பேன் என்றும் அவர் உறுதியளித்திருந்தார்.
தேர்தலின் வெற்றி பிறகு முதலமைச்சர் விஜய் வருகிற ஜுலை 10 மற்றும் 11 ஆகிய இரு நாட்கள் கரூருக்கு செல்வதாக திட்டமிட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியது.
இந்நிலையில் நாளை கரூர் செல்லும் விஜய் கூட்டநெரிசலால் சிக்கி உயிரிழந்த குடும்பங்களைச் சேர்ந்த 32 நபர்களுக்கு அரசு பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது
இதுதொடர்பாக வெளியாகியிருக்கும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில், " மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் கரூர் மாவட்டத்திற்கு 10.07.2026 அன்று (வெள்ளிக்கிழமை) வருகை புரிந்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி, பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்கள்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், மனவாசி ஊராட்சியில் ரூ. 1700 கோடி மதிப்பீட்டில் தோல் அல்லாத (Non-Leather) காலணிகளை உற்பத்தி செய்யும் Evervan Kothari Footwear Private Limited என்ற புதிய தனியார் தொழிற்சாலைக்கு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி சிறப்பிக்க உள்ளார்கள். இந்த தொழிற்சாலையின் மூலம் சுமார் 13,500 நபர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைவார்கள்.
தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் பணியாற்றும் வகையில் 32 நபர்களுக்கு கருனை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்கள்" என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.















