"நீங்கள் தாக்கினால், உங்களுக்கும் திருப்பி அடி விழும்" - அமெரிக்காவிற்கு ஈரான் க...
மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி; ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்றபோது பரிதாபம்
மகாராஷ்டிரா முழுக்க தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மரங்கள் ஒடிந்து விழுந்து வருகிறது. மின்வயர்களும் அறுந்து விழுந்து வருகிறது.
மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள காம்கான் என்ற கிராமத்தில், மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காம்கான் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் ஆங்கிலப் பள்ளிக்கு அருகில் வசித்து வந்த சதீஷ் (என்ற) பிசுராத்யா கிசான் ஷிண்டே (45), அதிகாலையில் தனது வீட்டின் வெளியே கிடந்த மின்சாரக் கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்துள்ளார்.
அவர் மின்சாரம் தாக்கித் துடிப்பதைக் கண்ட அவரது மனைவி கங்குபாய் ஷிண்டே (40) அவரைக் காப்பாற்ற முயன்றார். இதில் அவரையும் மின்சாரம் தாக்கியது. அவர்களைப் பார்த்த அவர்களது மகன் சச்சின் ஷிண்டே (26) மற்றும் மகள் ஆர்த்தி ஷிண்டே (24) ஆகியோர் அவர்களைக் காப்பாற்ற ஓடிவந்தனர்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர்களும் அந்த மின்சாரக் கம்பியின் மேல் பட்டு, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பால்டன் போலீஸ் அதிகாரி இது குறித்து கூறுகையில், "ஒரு நபர் மின்சாரக் கம்பியைத் தொட்டதால் மின்சாரம் தாக்கியதாகவும், அவரைக் காப்பாற்ற ஓடிவந்த மற்ற குடும்ப உறுப்பினர்களும் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது," என்று தெரிவித்துள்ளார்.
தற்போது எப்படி சதீஷ் வீட்டின் முன்பு மின் வயர் விழுந்தது என்பது குறித்தும், இதற்கு யாரது கவனக்குறைவு என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே லோனாவா (Lonavala) மலைப்பகுதியில் கடந்த 5 முதல் ஜூலை 7ம் தேதி வரையிலான வெறும் 48 மணி நேரத்தில் சுமார் 1,290 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இதனால் இப்பகுதி முழுவதும் கடுமையான வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, போக்குவரத்து முடக்கம் மற்றும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. மூன்று நாட்களுக்குப் பிறகு மும்பை-புனே இடையே ரயில் போக்குவரத்தும் தொடங்கி இருக்கிறது.



















