கேரளா: பாங்கோடு ராணுவ முகாமில் டிஜே பார்ட்டி; 2 யானை தந்தங்கள் கொள்ளை... விசாரணை...
காமராஜர் : அடித்தளமிட்ட சாத்தூர்; `முதல்’ தேர்தலிலேயே அன்னபோஸ்ட்டாக வென்றது எப்படி? | முதல் களம் 06
(`முதல் களம்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பும் தான் `முதல்’ எனும் தொடர்.)
கல்வித் தந்தை, கிங் மேக்கர் என்றெல்லாம் அழைக்கப்பட்டவர் முன்னாள் முதலமைச்சர் காமராஜர். பணக்கார பின்னணியோ, உயர்குடி பரம்பரை பெருமையோ இல்லாமல், எளிய பின்புலத்திலிருந்து அரசியலுக்கு வந்த காமராஜரின் முதல் தேர்தல் வெற்றி எங்கு, எப்போது அமைந்தது, அவர் அரசியலுக்குள் நுழைந்தது எப்படி, இந்திய அளவில் கிங் மேக்கராகவும், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் அவர் அரசியலில் அடைந்த உச்சத்தின் பின்னணி போன்றவற்றைத் தெரிந்துகொள்ள, நாட்டின் விடுதலைக்கு முந்தைய 1930-ஆம் ஆண்டுகளுக்குள் பயணிக்கலாம்...

1903-ல் பிறந்த காமராஜர், தந்தையை இழந்ததால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி, குடும்பத்தை காப்பாற்ற கடையில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால், அந்த வேலைதான் அவரை, பின்னாட்களில் அரசியலுக்கு வர தயார்படுத்தியது என்றே சொல்லலாம். விருதுநகரின் சந்தைகளில் நடக்கும் அரசியல் உரையாடல்களும், பொதுக்கூட்டங்களும், நாளிதழ்களில் இடம்பெற்ற செய்திகளும், அவருள் தீவிர தேசபக்தியை விதைத்தன. 1919-ல் நடந்த ஜாலியன்வாலாபாக் படுகொலையும், பிரிட்டிஷாருக்கு எதிரான காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்க அழைப்பும் அவரை முழுமையாக மாற்றின.
படிப்போ பணமோ இல்லையென்றாலும், நாட்டு விடுதலைக்காக காங்கிரஸ் விடுத்த அழைப்பு அவரை ஈர்த்தது. 1920-களிலேயே துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது, நிதி திரட்டுவது, சைக்கிளில் கிராமம் கிராமமாக சுற்றி மக்களைத் திரட்டுவது எனத் தீவிரமாக இயங்கத் தொடங்கினார். அதே சமயம், அவரிடம் காணப்பட்ட ஒழுக்கமும் நேர்மையும் அவரை, மற்ற இளைஞர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டியது.
காங்கிரஸ் கட்சியில் அவரது வளர்ச்சி, படிப்படியாக சீராக உயர்ந்தது. பல ஆண்டு காலமாக, கட்சியின் அமைப்புகளைப் பலப்படுத்த மேற்கொண்ட அயராத உழைப்புதான் அவருக்கு அந்த உயர்வைத் தேடித்தந்தது.
தென் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பயணம் செய்து, உள்ளூர் காங்கிரஸ் கமிட்டிகளை நிறுவியதோடு, இளைஞர்கள் காங்கிரஸில் சேர ஊக்குவித்தார். சாமானிய மக்களுடன் நெருக்கமாக கலந்துரையாடும் அவரது திறமையும், எளிமையும், அச்சமற்ற பண்பும், மூத்த தலைவர்களின் விருப்பத்துக்குரியவராக அவரை மாற்றின.
காங்கிரஸ் மேற்கொண்ட பல்வேறு போராட்டங்களில் அவர் பங்கேற்றார். ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் போராட்டத்துக்கு ஆதரவு, 1930 ல் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று பலமுறை சிறை சென்றார். இதன்மூலம், 1930-களில் தென் தமிழக காங்கிரஸின் நம்பிக்கைக்குரிய தலைவராக உருவெடுத்தார் காமராஜர்.

இந்திய ஆட்சியமைப்புச் சட்டம் 1935 நடைமுறைக்கு வந்த பிறகு, மாகாணத் தேர்தல்களுக்கு வழி பிறந்தது. இதனையடுத்து மதராஸ் மாகாணத்தில் பரவலாக தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்தது.
1937-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜனவரியில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. காமராஜரின் திறமையான செயல்பாடுகளையும், மக்களிடையே இருந்த செல்வாக்கையும் நன்கு அறிந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள், அவரை சட்டசபை தேர்தலில் நிறுத்த முடிவு செய்தனர்.
அதே சமயம், அவரை எந்தத் தொகுதியில் நிறுத்துவது என்கிற ஆலோசனை மேற்கொள்ளப்பட்டபோது, சாத்தூர் தொகுதி என்பது முடிவானது. சாத்தூர் — அவரது சொந்த ஊருக்கு அருகில் இருக்கும் பகுதி என்பதாலும், பல ஆண்டுகளாக அவர் காங்கிரஸ் வலையமைப்பை உருவாக்கிய இடம் என்பதாலும், அந்தத் தொகுதி மிகச் சரியான தேர்வாக அமைந்தது.
காமராஜரின் அரசியல் வாழ்க்கையில் மிக சுவாரஸ்யமான பகுதி என்னவென்றால், அவர் சந்தித்த முதல் தேர்தலிலேயே, சாத்தூர் தொகுதியிலிருந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதுதான். இப்படியான ஒரு நிகழ்வு என்பது, சாதாரணமான ஒன்றல்ல. அப்படியென்றால் இது எப்படி நடந்தது?
சாத்தூர் தொகுதி, பெரும்பாலும் கிராமப்புற மக்களைக் கொண்ட தொகுதி. காங்கிரஸ் ஆதரவும் இங்கு வலுவாக இருந்தது. இந்தப் பகுதி மக்களுக்கும் காமராஜர் நன்கு அறிமுகமானவராக திகழ்ந்தார். அங்குள்ள வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் என எல்லோருக்கும் காமராஜர் நன்கு அறிமுகமானவராக இருந்தார். காமராஜரின் சேவை மனப்பான்மை மற்றும் அவரிடம் காணப்பட்ட எளிமை போன்றவை காரணமாக காங்கிரஸ் பணியாளர்களும், தயக்கமின்றி அவருக்கு முழுமையாக ஆதரவு தெரிவித்தனர்.

இவற்றையெல்லாம் கருத்தில்கொண்ட சாத்தூர் தொகுதியின் உள்ளூர் பிரமுகர்கள், காமராஜருக்கு எதிராக வேட்பாளர்கள் யாரும் நிறுத்தப்படக்கூடாது என்கிற முடிவுக்கு வந்தனர். இதனால், காமராஜருக்கு எதிராக வேறு எந்த வேட்பாளரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காமராஜரின் தனிப்பட்ட உறவுகளும், அவர் உருவாக்கிய நன்மதிப்பும் இதற்கு முக்கிய காரணிகளாக இருந்தன. முதலில் போட்டியிட திட்டமிட்டிருந்த மாற்று கட்சி அல்லது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், காமராஜர் ஆதரவாளர்களின் பேச்சுவார்த்தைகளாலும், அவர் பல வருடங்களாக ஆற்றிய பொதுத் தொண்டுகளின் மீதான மரியாதையாலும், போட்டியிலிருந்து விலகத் தயங்கவில்லை.
"நாட்டின் விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு, சிறைவாசம் அனுபவித்து, தியாகம் செய்த காமராஜருக்கு எதிராக நிற்பது மரியாதையல்ல” என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்ட நிலையில், மீறி போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு இல்லை என்கிற யதார்த்த நிலைமையையும் போட்டியாளர்கள் புரிந்துகொண்டதால், அவர்கள் போட்டியிலிருந்து விலகிக்கொண்டனர்.
இவை அனைத்தும், முற்றிலும் சுமூகமான முறையிலேயே நடைபெற்றன. இதன் விளைவாக, வேட்புமனு தாக்கல் நடைபெற்ற ஜனவரி மாதமே, காமராஜர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு வாக்கு கூட போடப்படாமல், மதராஸ் சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். இந்த நிகழ்வு, அவரின் தேர்தல் அரசியலுக்கான அதிகாரபூர்வமான நுழைவாக அமர்ந்த ஒரு மறக்க முடியாத தருணமாக அமைந்தது.
1937 தேர்தலுக்குப் பிறகு, காமராஜரின் அரசியல் வாழ்க்கை மிக வேகமாக விரிவடைந்தது. சட்டசபையில் அவர் தீவிரமாகவோ ஆவேசமாகவோ பேசக்கூடியவராகவோ அல்லாமல், அமைதியாகவும் பயனுள்ளதாகவும் செயல்படும் உறுப்பினராக அனைவராலும் மதிக்கப்பட்டார். மூத்த தலைவர்கள் அவரது நேர்மையை நம்பினர்.
எளிதில் சந்திக்க முடியும் என்கிற காரணத்தால் கட்சிப் பணியாளர்கள் அவரை பெரிதும் விரும்பினர். 1942-ல் நடந்த ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின் போது, அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்தார். இந்தியா விடுதலை பெறும் நேரத்தில், தமிழ்நாட்டு காங்கிரஸின் அசைக்க முடியாத தலைவராக அவர் உருவெடுத்திருந்தார்.
1954 ஆம் ஆண்டு, அப்போதைய காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்துக்கு கிளம்பிய கடும் எதிர்ப்பு மற்றும் மிகத் தீவிரமாக நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் காங்கிரஸ் கட்சிக்கும் அரசுக்கும் கடும் சிக்கலை ஏற்படுத்தியது. குலக்கல்வி திட்டத்துக்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பும் அதிருப்தியும் காணப்பட்டது. இதனால், ராஜாஜி ராஜினாமா செய்வதற்கான நெருக்கடி உருவானது. காங்கிரஸ் கட்சிக்குள் அப்போது ராஜாஜி ஆதரவாளர்கள், அவருக்கு எதிரானவர்கள் என இரண்டு பெரிய கோஷ்டிகள் இருந்தன.
ராஜாஜியின் கொள்கைகள் தொடர்ந்தால், கட்சிக்கு பெரும் சேதம் ஏற்படும் என உணர்ந்த காங்கிரஸ் முன்னணி தலைவர்கள், முதலமைச்சர் பதவிக்கு புதிய, மோதல் போக்கு இல்லாத, நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு தலைவரைத் தேர்வு செய்ய வேண்டியது கட்டாயம் எனக் கருதினர். அந்த வகையில், கட்சிக்குள் அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்லக்கூடியவர் யார் என்பதை பார்த்தபோது, காமராஜர் மிகச் சிறந்த தேர்வாக அமைந்தார். ஊழலற்றவர், அனைத்து பிரிவு மக்களாலும் மதிக்கப்படுபவர், காங்கிரஸ் அமைப்பு பணியை முழுமையாக அறிந்தவர் எனக் கருதப்பட்டதால், அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளக்கூடிய முதலமைச்சராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.

‘கிங் மேக்கர்’ என்கிற பட்டத்தை இந்திய அரசியலில் பெற்ற மிகச் சில தலைவர்களில் முக்கியமானவர் காமராஜர். 1963-ஆம் ஆண்டு அவர் முன்வைத்த 'கே பிளான்' என்கிற திட்டத்தின் மூலம், ஆட்சிப் பொறுப்பில் இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்து, கட்சியின் வேர்களை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரது இந்த முடிவு, அந்தக்கால அரசியலை முழுமையாக மாற்றியது. அதன் பின்னர் பிரதமர் பதவிக்கான தேர்வில், லால் பகதூர் சாஸ்திரியையும் பின்னர் இந்திரா காந்தியையும் ஆதரித்து, தேசிய அரசியலில் பல தலைவர்கள் உருவாவதற்கான பாதையை அவர் அமைத்துக் கொடுத்தார். நேரடியாக அதிகாரத்தை நாடாமல், யார் நாட்டை வழிநடத்த வேண்டும் என்பதை அமைதியாகவும் புத்திசாலித்தனமாகவும் தீர்மானிக்கக் கூடிய அந்தத் திறன் காரணமாகவே ‘கிங் மேக்கர்’ என அழைக்கப்பட்டார் காமராஜர்.

அந்தவகையில்,1937-ஆம் ஆண்டு சாத்தூர் தொகுதியில் காமராஜர் பெற்ற எதிர்ப்பில்லா வெற்றி, சாதாரண தேர்தல் நிகழ்வைத் தாண்டிய ஒன்றாக இருந்தது. பல ஆண்டுகளாக மக்களுக்காக அவர் மேற்கொண்ட அயராத உழைப்பும், தன்னலமற்ற அர்ப்பணிப்பும், பொதுமக்களிடம் அவர் மீது ஏற்பட்ட நம்பிக்கையின் வெளிப்பாடாக அது அமைந்தது. இந்த வெற்றிதான், அவரது அரசியல் பாதையை மேலும் விரிவாக்கி, அடுத்த நிலைகளுக்கு அவரை வழி நடத்தும் வலுவான அடித்தளமாக மாறியது.



















