Parasakthi: "சே'னு கூப்பிடும்போது ரொம்ப பவர்ஃபுல்லாக இருந்தது!" - சிவகார்த்திகேய...
காரைக்குடி: '5 தலைமுறைகள், 300 உறவினர்கள்' - நெகிழ வைக்கும் 'சின்னான் வீடு' நூற்றாண்டு விழா!
வீடு கட்டிய அன்றே, இந்த வீட்டில் நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும் என்று சொன்ன சி.ஆ.பெரியண்ணனின் ஆசையை நிறைவேற்ற வீட்டைப் பழமை மாறாமல் பராமரிக்கும் நோக்கில் அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அப்படியே புதுப்பித்தனர்.
12 ஆண்டுகள் வேலைப்பாடு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள வேலங்குடியில் அமைந்துள்ள "சின்னான் வீடு" என்று அன்போடு அழைக்கப்படும் இந்த வீட்டின் வேலை 1912-ல் பூஜை போட்டு தொடங்கப்பட்டு, 1926-ல் முழுவதுமாக கட்டி முடிந்துள்ளது. சுமார் 14 ஆண்டுகள் கலைநயத்தோடு கட்டப்பட்ட இந்த வீட்டில், 12 ஊர்களைச் சார்ந்த மக்கள் வேலை செய்துள்ளனர்.
தற்போது 99 ஆண்டை நிறைவு செய்து, 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இருப்பினும் அதே கம்பீரத்தோடு பழமை மாறாமல் இருக்கிறது என்கிறார்கள் குடும்ப உறுப்பினர்கள்.

ஐந்து தலைமுறை
ஆண்டியப்பன், வள்ளி தம்பதியருக்குப் பிறந்த பெரியண்ணன் மற்றும் சுப்பையா ஆகிய அண்ணன் - தம்பி இருவரின் வாரிசுகளின் 60 குடும்பங்கள், 300 குடும்ப உறுப்பினர்கள் என, ஐந்து தலைமுறையினரும் ஒன்றுகூடி திருவிழாவைப் போல் நடத்தியது பார்ப்போர் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
எல்லாம் இங்கதான்
இது குறித்து குடும்ப உறுப்பினர் சுந்தர் கூறுகையில், "இது வெறும் வீடு மட்டும் கிடையாது எங்களோட அடையாளம். எங்க யாரு வீட்டுல என்ன விசேஷமா இருந்தாலும் அத இங்கதான் கொண்டாடுவோம். கல்யாணம், காதுகுத்து, பொங்கல், சடங்கு என்று எல்லாமே இங்கதான் நடக்கும். அப்போவும் இதே மாதிரி எல்லோரும் வந்துருவோம்.






இன்னும் சொல்லனும்னா, எங்க குடும்பதுல எந்த ஒரு இறப்பு நடந்தாலும் இந்த வீட்ல வச்சுதான் இறுதிச்சடங்கு செய்வோம். அந்த அளவுக்கு எங்க உணர்வோட கலந்தது இந்த சின்னான் வீடு" என்று அவர் கூறினார்
கடல் கடந்து வரும் உறவுகள்
இந்தக் குடும்பத்தில் பலர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அதிலும் சிலர் வெளிநாட்டினரையே திருமணம் செய்துள்ளனர்.

மேலும் இந்த நூற்றாண்டு விழா கொண்டாட்டத்திற்கு ஆஸ்திரேலியா, லண்டன், அமெரிக்காவில் இருந்து வருகை தந்துள்ளார்கள். அதிலும் இந்த நிகழ்வில் தமிழர்கள் பாரம்பரிய உடையில் இருப்பது காண்போரை ஆச்சரியப்படுத்துகிறது.
நிகழ்ச்சி நிரல்
இதில் அதிகாலை கணபதி ஹோமம், பின்பு இறைவணக்கம், பரதநாட்டியம், ஓவியப்போட்டி, பட்டிமன்றம், உணவு இடைவேளை, கலைநிகழ்ச்சிகள், இசைக்கருவி வாசித்தல், குடும்ப நேரம், நன்றியுரை என்று ஒரு விழாவைப் போல் இந்தச் சங்கமத்தை ஒருங்கிணைத்துள்ளனர்.









விழா மலர்
இந்த நூற்றாண்டு விழாவில் முன்னோர்களை இன்றைய தலைமுறை நினைவுகூறும் வகையில், சரஸ்வதி என்பவர், "5 ஆம் தலைமுறை சின்னான் வீடு" என்ற விழா மலரை எழுதி வெளியிட்டுள்ளார்.

இதில் ஓட்டன்–ஓட்டி முதல் தற்போது உள்ள உறவினர் வரையுள்ள 5 தலைமுறை குடும்ப உறுப்பினர்கள் பெயர் மற்றும் அவர்களின் விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இது போன்ற நிகழ்வுகள் அதிகம் நடைபெறும் செட்டிநாட்டுப் பகுதி, இன்றளவும் உறவுகளின் புகழிடமாக திகழ்கின்றது.


















