Parasakthi: ''அந்தத் தைரியம் உங்களுக்கு இருக்குனு சுதா மேம் சொன்னாங்க" - பராசக்த...
குமரி: 2 மணி நேர போராட்டம்; வலியால் மயங்கிய சிறுவன்; கரும்பு மிஷினில் சிக்கிய சிறுவனின் கை மீட்பு
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள ரீத்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வில்லியம் போஸ். இவர் அந்தப் பகுதியில் கரும்புச்சாறுக் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
வில்லியம் போஸின் பேரன் ஆரின் ஜெஃப்ரின் (13) என்பவர் அவ்வப்போது கரும்புச்சாறுக் கடைக்குச் சென்று உதவுவது வழக்கம். நேற்று மாலை கடைக்குச் சென்ற ஜெஃப்ரினிடம் கரும்புச் சாறு இயந்திரத்தைச் சுத்தப்படுத்துமாறு வில்லியம் போஸ் கூறியுள்ளார்.
சிறுவன் ஆரின் ஜெஃப்ரின் கரும்புச்சாறு பிழியும் இயந்திரம் இயங்கிக்கொண்டிருக்கும்போதே அதைச் சுழற்றி சுத்தப்படுத்தியுள்ளார். அப்போது அவரது வலது கை இயந்திரத்தில் சிக்கி விரல்கள் நசுங்கின. இயந்திரத்தில் சிக்கிய கையை வெளியே எடுக்க முடியாமல் வலியால் சிறுவன் அலறினான்.
அங்கிருந்த வில்லியம் போஸ் உடனடியாக இயந்திரத்தை நிறுத்தினார். பின்னர் சிறுவனின் கையை வெளியே எடுக்க முயன்றார். ஆனால், கரும்பில் இருந்து சாறு பிழியும் ரோளரில் சிறுவனின் கை விரல்கள் சிக்கிக் கொண்டதால் மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து குளச்சல் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்துசென்ற தீயணைப்பு வீரர்கள் கரும்புச்சாறு இயந்திரப் பாகங்களை கட்டிங் மிஷினால் வெட்டி அகற்றினர்.
பின்னர், சிறுவனின் கையை வெளியே எடுக்க முயன்றனர். ஆனால், இயந்திரத்தின் பாகங்களை கட்டிங் மிஷினால் வெட்ட முடியாத நிலை ஏற்பட்டது.
ரோளர்களையும் கழற்ற முடியாததால் முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. நேரம் செல்லச் செல்ல சிறுவனும் வலியால் துடித்து மயக்க நிலைக்குச் சென்றான். அந்தச் சிறுவனுக்கு பொதுமக்கள் பழச்சாறு கொடுத்து ஆற்றுப்படுத்த முயன்றனர்.
அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிறுவனுக்கு குளுக்கோஸ் செலுத்தப்பட்டதுடன், வலி நிவாரண ஊசியும் செலுத்தப்பட்டது.

அடுத்தகட்டமாக, மெக்கானிக்கை வரவழைத்து கரும்புச்சாறு பிழியும் இயந்திரத்தின் பாகங்களைக் கழற்றி அகற்றினர். மேலும், ரோளர்களைக் கழற்றி சிறுவனின் கையை வெளியே எடுத்தனர்.
சுமார் இரண்டு மணி நேரம் வலியால் துடித்த அந்தச் சிறுவன் மீட்கப்பட்டு கை விரல்கள் சிதைந்த நிலையில் காணப்பட்டதால் அவனை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குச் சிறுவனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குளச்சல் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




















