பெட்ரோல் பங்குகளில் குவிந்த வாகனங்கள்; வாட்டர் பாட்டில், கேன்களில் நிரப்பி சென்ற...
ஸ்டாலின்: கழுத்தை நெறித்த கூட்டணிக் கட்சிகள்; புகைச்சலில் நிர்வாகிகள்! - தி.மு.க போடும் ஸ்கெட்ச்!
தி.மு.க கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கடந்த 9-3-2026 அன்று அறிவாலயத்தில் இரண்டாம் கட்ட தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையை நடத்தியது. பேச்சுவார்த்தை முடிந்ததும், “எங்கள் கட்சியின் உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்திவிட்டு வருகிறோம்” என முடிவு சொல்லாமலேயே சென்றுவிட்டது. ஏற்கெனவே ம.தி.மு.க-வும் “தொகுதி உடன்படிக்கை குறித்து உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவெடுத்து சொல்கிறோம்” என்று அறிவித்து பின்னர் உடன்படிக்கை கையெழுத்தானது. இப்படி ‘கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றும் தொகுதி எண்ணிக்கையை முடிவு செய்ய காலம் தாழ்த்துவது ஏன்?” என நாம் விசாரித்தோம்.
நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள், “காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக மூன்று தொகுதிகளும், தே.மு.தி.க-வுக்கு ஆறு முதல் ஏழு இடங்களை வழங்கவும் தி.மு.க தலைமை திட்டமிட்டுள்ளது. இதனால் தி.மு.க-வின் கணக்கில் பத்து தொகுதிகள் குறைய உள்ளது.
இதைச் சரிகட்டவே, ஏற்கெனவே கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் தொகுதிகளைக் குறைத்துக்கொள்ளச் சொல்லி தி.மு.க பேச்சுவார்த்தைக் குழு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால், கூட்டணிக் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
வி.சி.க கடந்த முறை ஆறு இடங்களில் போட்டியிட்டது. இந்த முறை பத்து இடங்களை எதிர்பார்த்தது. கூட்டணியில் கூடுதலாக புதிய கட்சிகள் இடம் பெற்றுள்ளதை தி.மு.க சுட்டிக்காட்டியதால், ‘சரி எட்டாக தாருங்கள்...’ என வி.சி.க இறங்கிவந்தது. ஆனால், தி.மு.க- வோ, ‘நீங்க ஐந்தாக வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று சொன்னதும் அப்செட்டாகிவிட்டனர் சிறுத்தைகள்.
அவர்கள் நிலைதான் அப்படியென்றால், இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை எதிர்பார்த்த கம்யூனிஸ்ட்களிடம், ‘கடந்த முறை ஆறு இடங்களில் போட்டியிட்டு ரெண்டுலதான் ஜெயிச்சீங்க. அதனால இந்த முறை நான்கு தொகுதிகளை மட்டும் வாங்கிக்குங்க’ என சொல்லியுள்ளார்கள். இதனால் கடுப்பாகி, முடிவு ஏதும் சொல்லாமலேயே அறிவாலயத்திலிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்கள்.
அதே போல் ம.தி.மு.க-விடம் ‘நான்கு தொகுதிகளை தருகிறோம். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுங்கள்’ என சொல்ல, ‘ஆறு இடங்கள் வேண்டும். அதுவும் தனி சின்னத்தில்தான் நிற்போம்’ என அவர்களும் சொல்லிவிட்டார்கள். ‘தனி சின்னம் என்றால் இரண்டு தொகுதிகள்தான்’ என கறார் காட்டியுள்ளது தி.மு.க. உடனே அவர்களும் ‘உயர்மட்டக் குழுவில் முடிவெடுத்து சொல்கிறோம்’ என்றபடி கிளம்பிவிட்டார்கள்.
அதன்பிறகு நீண்ட ஆலோசனைக்கு பிறகு நான்கு இடங்களை வாங்கிக்கொள்ளலாம்... மூன்றில் உதயசூரியனில் நின்று, ஒரு தொகுதியில் மட்டும் தீப்பெட்டி சின்னத்தில் நிற்கலாம் என்று சொல்லியுள்ளார்கள். தீப்பெட்டி சின்னத்தில் நின்றால் மட்டுமே கட்சியின் பதிவை உறுதி செய்ய முடியும் என்கிற சிக்கல் ம.தி.மு.கவுக்கு இருக்கிறுது. இதை தி.மு. க தலைமைக்கு சொல்ல, உடனடியாக வந்து கையெழுத்து போடுங்கள் என்று வரச்சொல்லி, நான்கு சீட்களுக்கு ஓ.கே செய்துவிட்டனர்.

ம.தி.மு.க கையெழுத்து போட்டுவிட்டதால், அதையே உதாரணமாக சொல்லி, கம்யூனிஸ்ட்களிடம் பேரத்தை முடிக்க நினைக்கிறது தி.மு.க. இரண்டு கம்யூனிஸ்ட்களுக்கும் தலா ஐந்து தொகுதிகள் என்பதில் தி.மு.க உறுதியாக இருப்பதால், அதை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு கம்யூனிஸ்ட்களும் வந்துவிட்டார்கள்.
காங்கிரஸுக்கு மட்டும் ஏன் கூடுதல் தொகுதி?
வி.சி.க தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “இன்றைக்கு வந்த தே.மு.தி.க-வுக்கு ஏழு தொகுதிகளைக் கொடுத்துவிட்டு, எங்களுக்கு வெறுமனே ஐந்து தொகுதிகள் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? தே.மு.தி.க-வுக்கு எங்களைவிட வாக்கு சதவிகிதம் குறைவு. ஆனால், அவர்களை முக்கியப்படுத்தி எங்களை சிறுமைப்படுத்துவதுபோல தி.மு.க-வின் பேச்சுவார்த்தை உள்ளது. எங்களை எல்லாம் தொகுதிகளைக் குறைத்துக் கொள்ளச் சொல்கிறார்கள். அப்படியென்றால், காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ஏன் கூடுதல் தொகுதிகளை கொடுக்கணும்?

தேர்தல் வரை எண்ணிக்கையை இப்படியே இழுத்தடித்து, கடைசி நேரத்தில் ‘வேறு வழியில்லை’ என்ற முடிவோடு எங்களை கையெழுத்திட வைக்கும் திட்டத்தை தி.மு.க கையில் எடுத்துள்ளதோ என்று எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது” என பொருமினர்.
தி.மு.க-வில் உள்ள வேறு சிலரோ, “பா.ம.க எதிர்முகாமில் இருப்பது, விஜய் வாக்குகளைப் பிரிப்பது என தி.மு.க-வுக்கு நெருக்கடியாக மாறும் வாக்குகள் குறித்த அச்சத்தில்தான் தே.மு.தி.க-வை அவசரமாக கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட்டனர்.
வாக்கு வங்கி குறைவாக உள்ள தே.மு.தி.க-வுக்கு எதற்கு ராஜ்யசபா சீட் கொடுக்கணும்? காங்கிரஸ் கட்சி கடந்த முறை 25 இடங்களில் போட்டியிட்டு, 18 இடங்களில்தான் வெற்றிபெற்றது. அதையே காரணமாகச் சொல்லி 25 தொகுதிகளையே அவர்களுக்கு இறுதி செய்திருக்கலாம். ஆனால், முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை கதையாக காங்கிரஸ், தே.மு.தி.க-வுக்கு வாரிக்கொடுத்துவிட்டு இப்போது பிற கட்சிகளிடம் சீட்டுக்காகத் திண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது தி.மு.க” என்றனர் புலம்பலாக.
கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடி ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் தி.மு.க கட்சிக்குள்ளும் புகைச்சல் எழுந்துள்ளது. “இப்ப உள்ள கணக்குப்படி தி.மு.க நேரடியாக 150 இடங்களில் போட்டியிடும் நிலையில்தான் உள்ளது. அதிலும் அ.தி.மு.க-விலிருந்து இங்கு வந்தவர்களுக்கு தொகுதிகளைக் கொடுக்க தலைமை முடிவெடுத்துள்ளது. அப்படியென்றால் கட்சிக்காக இத்தனைக் காலம் உழைத்துவரும் தொண்டர்கள் கடைசி வரை கொடி பிடித்துக் கொண்டேதான் இருக்க வேண்டுமா?” என்று கொந்தளிக்கிறார் தென் மாவட்ட தி.மு.க நிர்வாகி ஒருவர்.
இருபது கட்சிகளோடு கூட்டணி என்பதை தாண்டி, போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க வைத்து காய் நகர்த்தி வருகிறது தி.மு.க. வி.சி.க கம்யூனிஸ்ட் கட்சிகள் இதனை ஏற்குமா என்பது போக போக தெரியும்!















