"கோவை சிறுமி கொலை குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை" - அமைச்சர் சம்பத்குமார் உறுத...
'கிரிக்கெட் தான் என் வாழ்க்கை, ஆனால்.!' - ஓய்வை அறிவித்த தமிழக வீரர் விஜய் சங்கர்
தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான விஜய் சங்கர், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
விஜய் சங்கர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்று பரிமாணங்களிலும் அசத்தக்கூடியவர் என்பதால் '3D கிரிக்கெட்டர்' என்று அழைக்கப்பட்டார்.
தற்போது அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவில், " கிரிக்கெட் தான் என் வாழ்க்கை. நான் 10 வயதில் விளையாடத் தொடங்கினேன். 25 ஆண்டுகளுக்குப் பிறகு, அனைத்துவிதமான கிரிக்கெட்டிலும் விளையாடியதை எண்ணி பெருமைப்படுகிறேன்.
நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியது எப்போதும் எனது பெருமைக்குரிய மற்றும் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாக இருக்கும். நான் விரும்பியதைச் செய்ய என்னை அனுமதித்ததற்கு 'நன்றி' என்ற வார்த்தை மட்டும் போதாது. என்றும் நன்றியுடையவனாக இருப்பேன்.
பல கற்றல்கள், எண்ணற்ற நினைவுகள் மற்றும் பல்வேறு உத்வேகங்களுக்காக பிசிசிஐ மற்றும் இந்திய கிரிக்கெட் அணிக்கு எனது நன்றிகள்.
நாக்பூரில் இந்தியாவின் 500-வது ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரை வீசியதும், 2019 உலகக் கோப்பையில் எனது முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தியதும் நான் எப்போதும் நெஞ்சில் சுமந்து நிற்கும் தருணங்கள்.

எனது ஐபிஎல் அணிகளான குஜராத், ஹைதராபாத், சிஎஸ்கே மற்றும் டெல்லி ஆகிய அணிகளுக்கு எனது சிறப்பு நன்றிகள். அனைத்து இடங்களிலிருந்தும் கிடைத்த அனுபவங்களும் பாடங்களும் தான் இன்று என்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளன.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றுக்கு என் மனமார்ந்த நன்றிகள். எனது வாழ்க்கையின் பெரும் பகுதியை நான் இங்குதான் கழித்தேன். இந்த பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உதவிய அனைவருக்கும் நன்றி. மிகவும் சிறப்பான அணிக்கு கேப்டனாக இருந்து கோப்பைகளையும் வென்றுள்ளேன்.
ஏராளமான தடைகளும் சவால்களும் என்னை ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக வடிவமைத்தன. இன்ப துன்பங்கள் நிறைந்த அனைத்து சூழ்நிலைகளிலும் என்னுடன் உறுதுணையாக இருந்த என் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நன்றிகள். நான் நம்பமுடியாத அளவிற்கு வெறுப்பையும் எதிர்மறையையும் எதிர்கொண்டுள்ளேன்.

அவற்றை நான் புறக்கணித்துவிட்டு முன்னோக்கிச் சென்றேன். நேர்மறையாகச் சிந்தித்து கடினமாக உழையுங்கள். கிரிக்கெட் எனக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்துள்ளது. கிரிக்கெட் தான் என் வாழ்க்கை. என்றென்றும் நன்றியுடன் உங்கள் 3D வீரர் விஜய் சங்கர்..." என்று உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.



















