"கோவை சிறுமி கொலை குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை" - அமைச்சர் சம்பத்குமார் உறுத...
ஒரே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை - லைபீரியா பெண்ணின் 3 நோய்களை வீழ்த்திய இந்திய மருத்துவர்கள்!
மருத்துவ உலகம் வியந்து பார்க்கும் ஒரு அசாத்திய சாதனை இந்தியாவின் குருகிராமில் உள்ள பாராஸ் மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்டுள்ளது.
லைபீரியா நாட்டைச் சேர்ந்த 42 வயது பெண்மணி ஒருவர், எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி (Hepatitis B) மற்றும் தீவிர கல்லீரல் புற்றுநோய் ஆகிய மூன்று கொடிய நோய்களால் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பிற்குச் சென்றார்.
எவ்வித நம்பிக்கையும் இல்லாத சூழலில், இந்திய மருத்துவர்களின் அசாத்திய திறமையாலும், ஒரு அரிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையினாலும் அந்தப் பெண்மணி இந்த மூன்று நோய்களையும் ஒரே நேரத்தில் வீழ்த்தி முற்றிலும் குணமடைந்து புது வாழ்வு பெற்றுள்ளார்.
இந்தப் பெண்மணி கடந்த ஐந்து ஆண்டுகளாக ஹெபடைடிஸ் பி பாதிப்புடனும், மூன்று ஆண்டுகளாக எச்.ஐ.வி பாதிப்புடனும் போராடி வந்தார். நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமடைந்து, மஞ்சள் காமாலை, வயிற்றில் நீர் கோர்த்தல் மற்றும் கல்லீரலில் பல இடங்களில் புற்றுநோய் கட்டிகள் என அவரது ஒட்டுமொத்த உடலும் செயலிழக்கும் நிலைக்குச் சென்றது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் தான், அவர் உயர்தர சிகிச்சைக்காக இந்தியாவை நாடி வந்தார். இங்கு வந்த பிறகு, அவருக்கு உடனடியாகக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற சவாலான முடிவை மருத்துவர்கள் எடுத்தனர்.
எச்.ஐ.வி பாதிப்பு உள்ள ஒருவருக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வது மருத்துவ உலகிலேயே மிகப்பெரிய சவாலாகும்; ஏனெனில், அறுவை சிகிச்சைக்குப் பின் கொடுக்கப்படும் மருந்துகள் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும் என்பதால், தொற்றுக்கள் எளிதில் பரவி உயிருக்கே ஆபத்தாய் முடியலாம்.
மருத்துவர்கள் சுமார் நான்கு மாதங்கள் அவரது உடல்நிலையைக் கூர்ந்து கவனித்து, எச்.ஐ.வி மற்றும் ஹெபடைடிஸ் அளவுகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அந்தச் சமயத்தில், அவரது 50 வயது அண்ணன் தனது கல்லீரலின் ஒரு பகுதியைத் தானமாக வழங்க முன்வந்தார்.

டாக்டர் வைபவ் குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர், சுமார் 9 மணி நேரம் தொடர்ந்து போராடி இந்த அதிசிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்.
மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பால், அறுவை சிகிச்சை முடிந்த ஐந்தே நாட்களில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து மாற்றப்பட்டு, இரண்டு வாரங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தற்போது அறுவை சிகிச்சை முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும், அவர் எவ்விதத் தொற்றும் இன்றி முழு ஆரோக்கியத்துடன் தனது சொந்த நாட்டிற்குத் திரும்பி இயல்பு வாழ்க்கையை வாழத் தொடங்கியுள்ளார். இது உலக மருத்துவ வரலாற்றிலேயே ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.





















